Milky Mist

Thursday, 18 April 2024

மூன்று லட்சம் முதலீடு! ஐந்து கோடி ஆண்டு வருவாய்! கண்ணாடித் தொழிலில் முன்னாடி செல்பவர்!

18-Apr-2024 By குருவிந்தர் சிங்
கொல்கத்தா

Posted 13 May 2021

வாழ்வாதாரத்துக்காகப் போராடும் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்த முகமது ஷாதன் சித்திக்(33), கண்ணாடி விற்பனை தொழில்மூலமாக  ஒரு வாய்ப்பைக் கண்டறிந்து, இன்றைக்கு ரூ.5 கோடி ஆண்டு வருவாய் தரும் சொந்த நிறுவனமாக அதனை உருவாக்கி இருக்கிறார்.

கொல்கத்தாவில் செயல்படும் கிளாஸ்டோ இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற அவரது நிறுவனம் அலங்கார கண்ணாடிகள், பாதுகாப்பு கண்ணாடிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான கண்ணாடிகளை தயாரிக்கிறது. தங்கள் பொருட்களை விற்பனை செய்வதற்காக கொல்கத்தாவில் மூன்று கடைகளை அவர்கள் திறந்திருக்கின்றனர்.  

ஷாதன் சித்திக் தனது அலங்கார மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் கடையை 2016ஆம் ஆண்டு கொல்கத்தாவில் தொடங்கினார். இதனை ரூ.5 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக கட்டமைத்திருக்கிறார்.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

“நாங்கள் 300 வகைகளுக்கும் அதிகமான கண்ணாடிகள் மற்றும் பிரதிபலிக்கும் கண்ணாடிகளை விற்கின்றோம். அதேபோல எல்இடி கண்ணாடிகள்,  வெனிஸ், அரக்கு, பழங்கால மற்றும் குழிவான கண்ணாடிகள் ஆகியவற்றையும் விற்கின்றோம். எங்களுடைய தயாரிப்புகள் ரூ.3000 முதல் ரூ.2 லட்சம் வரை உள்ளன,” எனும் ஷாதன், ஏழு குழந்தைகளில் ஒருவராக கொல்கத்தாவில் உள்ள ரிப்பன் தெருவில் 200 ச.அடி வீட்டில் பிறந்து வளர்ந்தவராவார்.

இவர் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது அவரது தந்தை இறந்து விட்டார். அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து அவரது மூத்த சகோதரர் ஒருவரும் இறந்து விட்டார். அந்த மூத்த சகோதரர் ஜப்பானில் பணியாற்றியதுடன், குடும்பத்துக்கு எல்லா வகையிலும் ஆதரவாக இருந்தவர்.  

ஷாதன் எப்படி தம் வாழ்க்கையின் சோதனையான காலகட்டங்களை கடந்தார் என்பதும், அந்த சூழல்களில் இருந்து வெளியே வந்து மீண்டும் தமது வாழ்க்கையை மீட்டெடுத்து வளர்ந்து வரும் ஒரு இளம் தொழில் முனைவோராக ஆனார் என்பதும், வாழ்க்கையில் சிக்கலான சூழல்களை சந்திக்கும் அனைவருக்கு உந்துசக்தியாக  இருக்கும். அவருடைய தந்தை  சிறிய மளிகை கடையை கொல்கத்தா நகரில் நடத்தி வந்தார். ஆனால், குடும்பத்தில் உள்ள ஷாதனின் நான்கு சகோதரர்கள் மற்றும் மூன்று சகோதரிகள் அடங்கிய குடும்பத்தின் வாழ்வாதாரத்துக்கு மட்டுமே அந்த வருவாய் போதுமானதாக இருந்தது. ஷாதன் அந்த குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக பிறந்தவர்.

   “200 ச.அடி அளவிலான வீட்டில் வாழ்ந்தோம். அருகில்தான் என் தந்தையின் மளிகைக் கடை இருந்தது. அவர் அதிகமாக ஏதும் சம்பாதிக்கவில்லை. ஆனால், தமது குழந்தைகளுக்கு நல்ல கல்வியை கொடுக்க விரும்பினார். எங்களை அவர் ஆங்கில பாடத்திட்டத்துடன் கூடிய கான்வென்ட் பள்ளிக்கு அனுப்பினார். எங்களுக்கு கல்வி அளிக்க பல மணி நேரம் உழைத்தார்,” என்றார் ஷாதன் ஷாதன் புத்திக்கூர்மையுள்ள மாணவராக திகழ்ந்தார்.

அவரது தந்தை ஷாதன் மீது கூடுதல் நம்பிக்கை வைத்திருந்தார். ஷாதன் ஒரு மருத்துவராக  வேண்டும் என்றும் அவர் விரும்பினார். 
 ஆடி சூழ் உலகு


 “நானும் கூட மருத்துவப் படிப்பை விரும்பினேன். கொல்கத்தாவில் உள்ள புனித பவுல் கல்லூரியில் 2004ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்த உடன் மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு தயாராவது என தீர்மானித்தேன்,” என ஷாதன் நினைவு கூர்கிறார்.

ஆனால், குடும்பத்தில் திடீர் துயர நிகழ்வாக 2004ஆம் ஆண்டு மே மாதம் அவரது  தந்தை மாரடைப்பால் காலமானார்.  “அது என்னுடைய வாழ்க்கையில் மிகவும் வலிதரக்கூடிய சம்பவமாக இருந்தது. என்னுடைய தந்தைக்காக ஏதேனும் செய்ய விரும்பினேன். என்னுடைய வெற்றியை அவருக்கு சமர்ப்பிக்க விரும்பினேன். ஆனால், அதனை சாட்சியாக இருந்து பார்ப்பதற்கு அவர் இல்லை. நான் மிகவும் நொறுங்கிப்போனேன்,” என்ற ஷாதன், “ஆனால், அதற்காக நான் சோர்ந்து விடவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து நுழைவு தேர்வு எழுதினேன்.”  

இறுதியில் 2006ஆம் ஆண்டு கொல்கத்தாவின் பிரசித்தி பெற்ற டெக்னோ இந்தியா பல்கலைக்கழகத்தில் உற்பத்தி பொறியியல் படிப்பதற்காக சேர்ந்தார்.   அவருடைய மூன்றாவது சகோதரர்  ஷாஹாபுதீன் , ஒரு மூத்த சகோதரி இருவரும் மளிகைக் கடையைக் கவனித்துக் கொண்டனர். அவருடைய சகோதரர்களில் ஒருவரான ஆசாத்துக்கு ஜப்பானில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. இதையடுத்து குடும்பத்துக்கு ஆசாத் உதவத் தொடங்கினார்.     “குடும்ப செலவுகளுக்காக மாதம் தோறும் ரூ.50,000  அவர் அனுப்பினார். அப்போதுதான் என்னுடைய கல்லூரி கட்டணமும் செலுத்தப்பட்டது,” என்கிறார் ஷாதன். ஆனால், 2008ஆம் ஆண்டு வெறும் 28 வயதில் மாரடைப்பால் அண்ணனும் உயிரிழந்ததை அடுத்து மீண்டும் துயரம் சூழ்ந்தது.  

 “அப்பாவின் மரணத்தில் இருந்து நாங்கள் அப்போது மீண்டிருக்கவில்லை. அதற்குள் அண்ணாவின் மரணம், குடும்பத்தில் உணர்ச்சிப் பூர்வமான பின்னடைவை ஏற்படுத்தியது,” என்கிறார் ஷாதன். உயிரிழந்த சகோதரரின் சேமிப்பில் இருந்து கல்வி கட்டணம் செலுத்தியதால், ஷாதன் தம்முடைய கல்வியை முடிக்க முடிந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 2010ஆம் ஆண்டு பன்னாட்டு எண்ணெய் உற்பத்தி நிறுவனத்தில் ஷாதனுக்கு வேலைகிடைத்தது. இதையடுத்து அவர் அசாமில் உள்ள கவுகாத்திக்கு சென்றார்.

 “ரூ.15 ஆயிரம் சம்பளத்தில் உற்பத்தி பிரிவு மேலாளராக நான் நியமிக்கப்பட்டேன். மூன்று ஆண்டுகள் கழித்து ரூ.40 சம்பளம் வாங்கும் அளவுக்கு உயர்ந்தபோது,  வேலையில் இருந்து விலகுவது என்று தீர்மானித்தேன். நானே சொந்தமாக ஏதேனும் செய்வது என்று தீர்மானித்தேன். 2013ஆம் ஆண்டு அந்த வேலையை விட்டு விலகினேன். மீண்டும் கொல்கத்தாவுக்குத் திரும்பினேன்,” என்றார் அவர். அவருடைய இளம் சகோதரர்  டேனிஷ் சித்திக், குடும்பத்தின் மளிகைக் கடையை மூடி விட்டு கண்ணாடி கடை ஒன்றை நடத்தி வந்தார்.

  ”நான் என்னுடைய எதிர்காலத் திட்டங்கள் குறித்து அதுவரை ஏதும் தீர்மானிக்கவில்லை. பல்வேறு வாய்ப்புகள் இருந்தன. என்னுடைய சகோதரர் ஏற்கனவே அவரது கண்ணாடி கடையை தொடங்கி இருந்தார். நான் மார்க்கெட்டிங்கில் எம்பிஏ படிப்பது என்று தீர்மானித்தேன். கொல்கத்தாவில் உள்ள கோயங்கா கல்லூரியில் வணிகம் மற்றும் வணிக நிர்வாகப்படிப்பில் சேர்ந்தேன்,” என்று, ஷாதன் கூறினார்.
தன் சகோதரரின் கண்ணாடிகள் விற்பனைக் கடையைப் பார்த்த ஷாதன் அந்த வணிகத்தில் ஈர்க்கப்பட்டார்


“அந்த நாட்களில், என்னுடைய சகோதரர் டேனிஷ் சித்திக் அவருடைய கடையில் வணிகத்தில் ஈடுபட்டிருப்பதை பார்த்துக் கொண்டிருப்பேன். மெதுவாக, எனக்கும் அந்த தொழிலில் ஆர்வம் ஏற்பட்டது.”

 “சாதாரண கண்ணாடிகளை பலர் தயாரிப்பதை நான் அறிந்தேன். ஆனால், அலங்கார மற்றும் பாதுகாப்பு கண்ணாடிகள் தயாரிப்பில் கிழக்கு இந்தியாவில் கூட அல்லது கொல்கத்தாவில் யாரும் ஈடுபடவில்லை. அதில் எனக்கு வணிக வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்தேன். என்னுடைய எம்பிஏ படிப்பின்போது, அலங்கார கண்ணாடிகள் குறித்து தொடர்ந்து நான் ஆராய்ச்சியில் ஈடுபட்டேன்.”  

2015ஆம் ஆண்டு படிப்பை முடித்த பின், ஷாதன் டிசைனர் கண்ணாடிகள் கடையை 100 ச.அடி இடத்தில் தன் ரிப்பன் தெரு வீட்டுக்கு அருகில் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார்.  “ரூ.3 லட்சம் முதலீட்டுடன் மூன்று பங்குதாரர்களுடன் கடையைத் தொடங்கினேன். என்னுடைய சேமிப்பில் இருந்து பணம் முதலீடு செய்தேன். கடைக்காக நாங்கள் ரூ.15 ஆயிரம் வாடகை கொடுத்தோம். எல்இடி கண்ணாடி, நவீன கண்ணாடி, அலங்கார கண்ணாடி, வெனிஸ் கண்ணாடி, அச்சிடப்பட்ட  கண்ணாடி, கண்ணாடி சுவர் பேனல்கள், அலங்கார அரக்கு கண்ணாடி, மற்றும் குளிர்விக்கும் கண்ணாடி ஆகியவற்றை விற்பனை செய்தோம்.”  

முதல் நாளில் இருந்தே கடையில் பெரும் அளவில் விற்பனை நடைபெறும் என்று ஷாதன் நம்பினார். ஆனால், முதல் ஆறுமாதங்களுக்கு எந்த விற்பனையும் இல்லாததால் அவருடைய எதிர்பார்ப்பு நொறுங்கியது.”  “எந்த ஒரு ஆர்டரும் எங்களுக்கு கிடைக்கவில்லை. தவறான முடிவு எடுத்து விட்டேனோ என்று கூட நான் நினைக்க ஆரம்பித்தேன். வழக்கமான கண்ணாடிகளை விட எங்கள் கண்ணாடிகள்  20-30 சதவிகிதம் அதிக விலை. மிக போராட்டமாக இருந்தது,” என்று சுட்டிக்காட்டினார்.   எனினும், தம்முயற்சியில் இருந்து அவர் பின்வாங்கவில்லை.

அமேசான் போன்ற இதர இணையதளங்களில் தமது நிறுவனம் குறித்து பட்டியலிடத் தொடங்கினார். விரைவிலேயே ஆர்டர்கள் குவியத் தொடங்கின. கொல்கத்தாவில் இருந்தும் நாட்டின் பிறபகுதிகளில் இருந்தும் ஆர்டர்கள் வரத் தொடங்கின.  “எங்களுடைய தயாரிப்புகளை விநியோகிப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டோம். உடைவதைத்  தவிர்ப்பதற்காக சரியான முறையில் பொருந்தக் கூடிய மர சட்டகத்தில் சுற்றிலும் பாதுகாப்புப் பொதிகள் வைத்து கண்ணாடிகள் பேக் செய்யப்படுகின்றன,” என்றார் ஷாதன்.

முதல் ஆண்டில் (2016-17) ரூ.30 லட்சம் ஆண்டு வருவாயை அவர்கள் ஈட்டினர். “நாங்கள் கடையைத் தொடங்கிய சமயத்தில் வெளியில் செய்யக் கொடுத்து உற்பத்தி செய்தோம். அடுத்த ஆண்டு கொல்கத்தாவின் புறநகரில் நாங்களே சொந்தமாக உற்பத்தி பிரிவைத் தொடங்கினோம். நகரில் இரண்டாவது கடையை திறந்தோம், “என்றார் ஷாதன்.
 அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் 50 கிளை உரிமைக் கடைகளைத் திறப்பது என்று ஷாதன் திட்டமிட்டுள்ளார் 

2018ஆம் ஆண்டு அவரது நிறுவனம் பிரைவேட் லிமிடெட் நிறுனமாக மாறியது. இப்போது கொல்கத்தாவில் அவர்களுக்கு மூன்று கடைகள் இருக்கின்றன. கொல்கத்தா மெட்ரோ, பதஞ்சலி, சிஃபி, பஜாஜ் போன்ற முன்னணி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளனர்.  

நிறுவனத்தில் இப்போது முறையான ஊழியர்கள் 20 பேர் பணியாற்றுகின்றனர். 80 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர். அடுத்த மூன்று ஆண்டுகளில் 50 கிளை உரிமைக் கடைகளை திறப்பது என்று ஷாதன் திட்டமிட்டுள்ளார்.

வளர்ந்து வரும் தொழில்முனைவோருக்கு ஷாதனின் அறிவுரை: வணிகத்தில் என்ன செய்ய நினைக்கின்றீர்கள் என்பது குறித்த தெளிவுடன் இருங்கள். பணம், பணத்தை சம்பாதிக்காது. ஆனால், திறன்களால்தான் பணம் சம்பாதிக்க முடியும்.           

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • cool Business

    குளிர்ச்சியான வெற்றி

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த நான்கு கிராமத்து இளைஞர்கள், தந்தையின் கைபிடித்து ஒரு சிறு நகருக்கு வந்தவர்கள். இவர்கள் ஒரு வெற்றிலை பாக்கு கடையில் இருந்து கோடிகளைக் குவிக்கும் ஐஸ்கிரீம் தயாரிப்பு நிறுவனமாக மாறி இருக்கிறார்கள். பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வெற்றி பெற்றிருக்கும் இவர்களின் கதையை குருவிந்தர் சிங் எழுதுகிறார்.

  • born in a small town he is now fighting brands like reebok and nike

    விளையாட்டாக ஒரு வெற்றி!

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் பெய்த், விளையாட்டு ஆர்வம் கொண்டவர். இன்றைக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் இரண்டு வெற்றிகரமான நிறுவனங்களின் உரிமையாளர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • king of donations

    கொடுத்துச் சிவந்த கரங்கள்

    இளம் வயதில் வறுமையை மட்டுமே பார்த்தவர் இளங்கோவன். நன்றாகப் படித்து, வாழ்கையில் உயர்ந்தவர். கடனில் சிக்கியதால் அதில் இருந்து மீள குவைத் சென்று முதலில் இருந்து வாழ்க்கையைத் தொடங்கி வெற்றிபெற்றார். வறுமையில் இருப்பவர்களுக்கு நிதி அளிக்கும் கொடையாளராக இருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை...

  • Man who stitched cloth bags as a child entrepreneur built a Rs 200 crore turnover company

    தலைக்கவச மனிதர்!

    நாட்டுப் பிரிவினையின்போது வறுமைக்குத் தள்ளப்பட்ட குடும்பம் அவருடையது. துணிப்பைகள் தைக்க ஆரம்பித்து 200 கோடி ரூபாய் புரளும் நிறுவனம் தொடங்கியது வரையிலான வெற்றிக்கதைக்கு சொந்தக்காரர் அவர். சுபாஷ் கபூரின் கதையை எழுதுகிறார் பார்த்தோ பர்மான்

  • He sold garments on the footpath, now his turnover is Rs 60 crore

    உழைப்பால் உயர்ந்த நாயகன்

    பெங்களூருவில் நடைபாதையில் துணிகள் விற்பவராகத் தொழிலைத் தொடங்கியவர் ராஜா. இன்றைக்கு 60 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவனங்களை நடத்தி வருகிறார். இத்தனைக்கும் பத்தாம் வகுப்புடன் படிப்பை பாதியில் விட்டவர் இவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • Snack king

    ஒரு ‘நொறுக்’ வெற்றி!

    மணீஷுக்கு பதினொரு வயதாக இருந்தபோது தந்தை செய்துவந்த தொழில் நொடித்துபோனதைக் கண்டார். அந்த நிலையில் இருந்து மீண்டு, உள்ளூரிலேயே நொறுக்குத்தீனி தயாரிப்பு தொழிலை தொடங்கி இன்றைக்கு ரூ.10 கோடி ஆண்டு வருவாய் தரும் தொழிலாக அதனை கட்டமைத்திருக்கிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.