Milky Mist

Friday, 22 August 2025

அன்று 95,000 ரூபாய் வங்கிக் கடனில் தொடங்கியவர், இன்று பதினைந்து கோடிகளுக்கு வர்த்தகம் செய்கிறார்! காற்றைச் சுத்திகரிப்பதில் சாதிக்கும் தமிழர்!

22-Aug-2025 By
கோவை

Posted 11 Dec 2020

விவேகானந்தன் கூடலிங்கத்தின் அடுத்த தயாரிப்பு வரிசையில் இருப்பது, காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள வைரஸ் தொற்றுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை அகற்றக் கூடிய ரூ.5000 விலையுள்ள ஒரு சாதனமாகும்.   

கோயம்புத்தூரைச் சேர்ந்த 42 வயதான புதுமை படைக்கும் தொழிலதிபர் இவர்.  வைரஸ்கள் குறித்த உலகளாவிய விழிப்புணர்வை கோவிட் 19 பெரும்தொற்று உருவாக்கி உள்ளது. இந்நிலையில்  இந்த கருவியை அறிமுகப்படுத்த இதுவே சரியான நேரம்.  

பட்டப்படிப்பு முடித்த உடன் விவேகானந்தன் கூடலிங்கம் காற்று சுத்திகரிக்கும் சாதனத்தின் தயாரிப்புடன் தமது நிறுவனத்தைத் தொடங்கினார். (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

இன்றைக்கு தூய தொழில்நுட்பத்தில் 13 காப்புரிமைகளை இவர் கையில் வைத்திருக்கிறார். அவரது நிறுவனம் 2020-ஆம் ஆண்டில் ரூ.15 கோடியை வருவாயாக ஈட்டியிருக்கிறது.1996-ஆம் ஆண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்துடன் மிகவும் சாதாரண நிலையில் இருந்து தொடங்கியவர் இவர்.

  “கல்லூரி முடித்த உடன், நான் வேலைக்குச் செல்ல விரும்பவில்லை. என்னுடைய விருப்பத்துக்கு நெருக்கமாக, எலெக்ட்ரானிக்சில் புதுமை படைக்கும் வகையில் ஒரு நிறுவனத்தைத் தொடங்க நினைத்தேன். எதிர்மறை மின்துகள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் ஒரு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை உருவாக்க முடிவெடுத்தேன்,” என்று கூடலிங்கம் நினைவு கூர்ந்தார்.

எலெக்ட்ரானிக் மீதான அவரது விருப்பம், ஒரு கதை போல இருக்கிறது. ஒரு சராசரியான பள்ளி மாணவனாக மதுரை அருகில் உள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் எனும் சிறிய நகரத்தில் இருந்து வந்தவர். தமது பெரும்பாலான நேரத்தை அருகில் உள்ள வினோத் என்பவருக்குச் சொந்தமான  ரேடியோ பழுதுபார்க்கும் கடையில் கழிப்பதை  வழக்கமாகக் கொண்டிருந்தார்.  

வேளாண்மைத் துறை  பேராசிரியரின் மகனான கூடலிங்கம், கோயம்புத்தூரில் பிறந்தவர். பின்னர் அவரது குடும்பம் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு இடம் பெயர்ந்தது. அங்குதான் அவர் வினோத்தை கண்டுபிடித்தார். அவர்தான் எலெக்ட்ரானிக்ஸ் மீது கூடலிங்கத்தின் ஆர்வத்தை வளர்த்தவர். பள்ளியில் அறிவியல் மிகவும் சலிப்பாக இருந்தபோது வினோத் அண்ணனிடம் இருந்து அவர் கேள்விகள் கேட்டு, பதில்கள் பெறுவது வழக்கம்.

“நான் சிறிய மின்னணு சாதனங்கள் மற்றும் கார்களை செய்துபார்த்தேன்.  ஒரு எளிய சுவிட்ச் வாயிலாக இயங்கக் கூடிய ஒரு சிறிய ரிமோட்  காரை உருவாக்கினேன். அந்த நாட்களில் அது போன்ற ஒன்றை புதிதாக வாங்குவது சாத்தியமில்லை என்பதால், அது சுவாரஸ்யமானதாக இருந்தது.”

ஃபாரடே ஓசோன் நிறுவனம் காய்கறிகள் மற்றும் பழங்களில் உள்ள  வைரஸ்களை அழிக்கும் சாதனத்தைக் கண்டறிந்துள்ளது

காலப்போக்கில் அவர் மின்னணுக் கருவிகளில் ஒரு நிபுணராக மாறி விட்டார். “அண்டை வீட்டாரின் பழுதடைந்த  கால்குலேட்டர், துணி துவைக்கும் இயந்திரம், தொலைக்காட்சிப் பெட்டிகளை  பழுது நீக்கித் தந்தேன். அதற்கு நான் கட்டணம் வசூலிக்கவில்லை. மின்னணு சாதனம் வாங்க வேண்டும் என்றால், என்னிடம் எல்லோரும் கருத்துக் கேட்கத் தொடங்கினர்,” என்றார் அவர்.

பள்ளி அறிவியல் குழுவில் பங்கெடுத்தபோது பல பரிசுகளைப் பெற்றுள்ளார். “ஒரு டி.சி மோட்டார் வாயிலாக இயங்கக் கூடிய மோனோ ரயில் மாதிரி ஒன்று உருவாக்கியதுதான் என்னுடைய விருப்பமான தயாரிப்பாகும்,” என்று நினைவு கூர்கிறார் கூடலிங்கம்.

ஸ்ரீவில்லிப்புத்தூரில் கிடைக்காது என்பதால் எலெக்ட்ரானிக்ஸ் ஃபார் யூ என்ற பத்திரிகையை வாங்குவதற்காக 150 கி.மீ வரை பயணம் செய்து வாங்கி வந்து படித்தார். எலெக்ட்ரானிக் மீதுள்ள ஆர்வம் காரணமாக, ஈரோடு கலைக்கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸில் பட்டம் பெற்ற பின்னர், அது சொந்த நிறுவனத்தை தொடங்கும் நிலைக்கு அவரை இட்டுச் சென்றது. எலெக்ட்ரானிக்சில் சிறந்த திறன் பெற்று விளங்கியும் கூட, ப்ளஸ் டூ வகுப்பில் 60% மதிப்பெண் மட்டும் பெற்றதால் அவரது கனவான பிடெக் படிப்பதற்கு இடம் கிடைக்கவில்லை.

கூடலிங்கம் ஈரோடு கலைக்கல்லூரியில் பிஎஸ்சி எலெக்ட்ரானிக்ஸ் படித்தார். அந்த சமயத்தில் பாலு என்ற எலெக்ட்ரானிக் மெக்கானிக் உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. எலெக்ட்ரானிக் மீதான ஆர்வத்தை அவர் உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கு பாலுவும் ஒரு முக்கிய பங்கு வகித்தார்.

“ஒரு முறை ஒரு வங்கி, பாலுவிடம் பாதுகாப்பு அலாரம் தொடர்பான வேலையைக் கொடுத்தது. அந்த வேலையில் அவர் என்னையும் ஈடுபடுத்தினார். அதிலிருந்து ஒரு வங்கிக்கு அலாரம் எவ்வளவு முக்கியமானது என்பதை நான் தெரிந்து கொண்டேன். நான் பயந்தேன். ஆனால், பழுது நீக்கும் வேலையை நன்றாகச் செய்தேன்,” என்றார் அவர்.

“அந்த சமயத்தில் நான் கல்லூரி படிப்பை முடித்திருந்தேன். எதிர்மறை மின் துகள் தொழில்நுட்ப அடிப்படையிலான காற்று சுத்திகரிக்கும்  என்னுடைய முதல் தயாரிப்பும் தயாராக இருந்தது. மைக்கேல் ஃபாரடே எனும் பெரிய விஞ்ஞானியின் பெயரில் ஃபாரடே ஆய்வகம் என்று என்னுடைய நிறுவனத்துக்கு பெயர் வைத்து தொடங்கினேன்,” என்றார் அவர். பின்னர் இந்த நிறுவனம் ஃபாரடே ஓசோன் தயாரிப்புகள் பிரைவேட் லிமிடெட் என்ற பெயர் மாற்றத்துடன் 1996- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

ஒரு வர்த்தக கண்காட்சியில் தமது சகாக்களுடன் கூடலிங்கம்

ஆரம்ப கட்டங்களில் அவர் கடினமாக உழைத்தார். பன்முகப்பணிகளை செய்தார். “என்னுடைய தயாரிப்புகளை படம் எடுப்பதற்காக  புகைப்படம் எடுப்பது குறித்து கற்றுக் கொண்டேன். விளக்க ஏடுகள் தயாரிப்பதற்காக கோரல் டிரா கற்றுக் கொண்டேன். அப்போது இந்த வேலைகளை அவுட்சோர்ஸ் கொடுத்து என்னால் செய்ய இயலவில்லை. பின்னர், எனக்கு நானே என்னுடைய சொந்த இணையதளத்தை உருவாக்கி அதனை ஒரு இலவச சர்வரில் பதிவேற்றம் செய்தேன்.”

1997 ஆம் ஆண்டு சென்னையில் ஒரு கண்காட்சியில் ப்யூர் சோன் என்ற காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை வைத்திருந்தார். அப்போது கோயம்புத்தூரில் செயல்படும் ரூட்ஸ் நிறுவனத்தின் தலைவர் உள்ளே   வந்து, தயாரிப்பை புரிந்து கொள்வதற்காக நிறைய நேரம் செலவழித்தார். தன்னுடைய அலுவலகத்துக்கு வந்து சந்திக்கச் சொன்னார்.  

அவரை சந்தித்தபோது, அவர் கூடலிங்கத்தின் தொழிற்சாலையை பார்க்கவிரும்பினார். அது பெரிய யூனிட் ஆக இருக்கும் என்று அவர் நினைத்தார்.”என்னுடைய வீட்டின் கட்டுமானப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. எனவே என்னுடைய ஆய்வகத்தின் சிறிய பகுதியை அவரிடம் காட்டினேன். அந்த இடத்தைப் பார்த்ததும் அவருக்கு மிகவும் வியப்பாக இருந்தது. அவருடைய நிறுவனத்தில் எனக்கு ஒரு வேலை தருவதாகச் சொன்னார். காற்று சுத்திகரிப்பு சாதனங்களை (அவருடைய தொழிற்சாலை இடத்தில் இருந்து)தயாரிக்கும்படி கூறினார்.”

ஆனால், கூடலிங்கம், தன் சொந்த நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கவே விரும்பினார். குறுநிறுவனங்களுக்கு ஆதரவு தரும் பிரதமரின் ரோஜ்கார் யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு வங்கியில் இருந்து ரூ.95,000 கடன் பெற்றார். அந்த நிதி உதவியுடன் சொந்த உற்பத்தி பிரிவைத் தொடங்கினார். விரைவில் பல புராஜெக்ட்கள் அவருக்குக் கிடைத்தன.

ஒரு மூன்று நட்சத்திர அந்தஸ்து கொண்ட புகழ் பெற்ற ஹோட்டல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், தமது ரெஸ்டாரெண்ட்டில் புகை வாசனையில் இருந்து விடுபடுவதற்கான உதவியைக் கேட்டார். “என்னுடைய தயாரிப்பானது சிறிய அறைக்கு மட்டுமானது என்பதால், என்னுடன் படித்த ஒருவரின் உதவியைக் கேட்டேன். அவருக்கு தச்சு வேலை தெரியும். ஒரு பெரிய மரத்தால் ஆன பெட்டியை அவர் தயாரித்தார். அதனை ஒரு ரெக்ஸினால் மூடிக் கொடுத்தார்,” என்றார் அவர். 

“பெட்டியின் உள்ளே பல சிறிய காற்று சுத்திகரிப்பு சாதனங்களை வைத்தோம். அத்துடன் வாசனைதிரவியங்களையும் வைத்தோம். அவருடைய ரெஸ்டாரெண்ட்டில் அதனை பொருத்தினோம். அதற்காக நான் ரூ.20,000 பெற்றேன். இதே போன்ற மேலும் பத்து யூனிட்களை சென்னையில் உள்ள ரெஸ்டாரெண்ட்களுக்கு விற்பனை செய்தேன்.”

சர்வதேச பி2பி இ-வணிக இணையதளமான அலிபாபாவில் அவரது தயாரிப்பை பட்டியலிட்டார்.  ரூ.2500 என்று விலை நிர்ணயம் செய்திருந்தார். அதற்கு மலேசியா, இந்தோனேஷியா மற்றும் இதர நாடுகளில் இருந்து விசாரணைகள் வரத்தொடங்கின. வர்த்தகம் உயரத் தொடங்கியது.  

ஃபாரடே குழுமத்தில் 100 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்

இதற்கிடையே, அவரது எதிர்மறை  மின் துகள் தொழில்நுட்பத்தில் காற்றை சுத்திகரிக்க மட்டுமே முடிந்தது. ஆனால், துர்நாற்றத்தை சரிசெய்ய முடியவில்லை. எனவே ஓசோன் தொழில்நுட்பத்தில் அவர் பரிசோதனை செய்தார். ஓசோன் காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை முன்னெடுத்தார்.

பின்னர் அதே தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஓசோன் தண்ணீர் சுத்திகரிக்கும் சாதனத்தையும் தொடங்கினார். 2005-ஆம் ஆண்டு, எம்.பி.ஏ பட்டதாரியான மோகன் ராஜ் என்ற கல்லூரி நண்பரையும் வேலைக்கு சேர்த்துக் கொண்டார். அவர் விற்பனையை கவனித்துக் கொண்டார். கூடலிங்கம் தமது கண்டுபிடிப்புகளில் ஆழமாக ஈடுபட்டார்.

“நான் ஒரு கிராமத்து பள்ளியில் படித்தேன். ஆங்கிலத்தில் என்னால் நன்றாக உரையாட முடியாது. பொது தொடர்பு திறனில் நான் பின்தங்கி இருந்தேன்,” என தமது தொழில்முனைவு பயணம் குறித்து கூறினார் கூடலிங்கம்.

எனினும் ஒருமுறை, ராஜ் உடல்நலக்குறைவாக , ஒருமாதம் படுத்த படுக்கையாக இருந்தார். எனவே கூடலிங்கம் விற்பனையைப் பார்க்கவேண்டியதாயிற்று.  கூடலிங்கத்துக்கு இந்த விற்பனையாளர் வேடத்திலும் ஒரு சாதகமே  கிடைத்தது. ஒரு தொழில்நுட்ப நபராக, தம்மால் தமது தயாரிப்பின் அம்சங்களை சிறப்பாக விளக்கமுடியும் என்பதை அப்போதுதான் அவர் உணர்ந்தார். இதன் விளைவாக அவரது தயாரிப்புகள் நன்றாக விற்பனை ஆயின.

2006- ஆம் ஆண்டு ஒரு புராஜெக்ட் தொடர்பாக இந்துஸ்தான் லீவர் நிறுவனம் அவரது உதவியைக் கேட்டது. பின்னர், ஒரு முறை வேறு ஒரு பிரச்னை தொடர்பாக ஜெனரல் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கும் தொழில்நுட்ப உதவி அளித்தார்.

தவிர அவர், சானிடரி நாப்கின்கள் வழங்கும் சாதனங்கள் மற்றும் எரியூட்டி சாதனங்களை தயாரித்தார். “ஒரு நண்பரின் தந்தை யுனிசெஃப் நிறுவனத்தில் பணியாற்றினார். சானிடரி நாப்கின்கள் வழங்கும் சாதனங்கள் தேவை இருப்பது குறித்து என்னிடம் சொன்னார்,” என்றார் அவர்.

“நான் சானிடரி நாப்கின் வழங்கும் மற்றும் எரியூட்டும் சாதனங்கள் தயாரிப்பதற்கு விசாகா டெக்னோ சிஸ்டம் எனும் நிறுவனத்தை தொடங்கினேன்.”

சானிடரி வழங்கும் சாதனங்கள், எரியூட்டிகள் தயாரிப்பதற்கு மற்றும் தானியங்கி வணிகத்துக்கான கிளவுட் சிஆர்எம் ஆகியவற்றுக்காக தனி நிறுவனங்களை கூடலிங்கம் நடத்துகிறார்    

பொருளைத் தயாரிப்பது பிறகு அதனை சந்தைப்படுத்த விநியோகிக்க ஒரு பங்குதாரரை தேடுவது என்பதுதான் கூடலிங்கத்தின் வணிக முறையாக இருக்கிறது.

இது தவிர, வணிகத்தை தானியங்கியாக மாற்றும் கிளவுட் சிஆர்எம் மென்பொருள் தொடர்பாக  ஃபராஸன் சாப்ட்வேர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை அவர் நிறுவினார்.

21 ஆண்டுகளுக்கு முன்பு அவரது முதல் நிறுவனத்தை தொடங்கிய முதல் ஆண்டில் ரூ.3 லட்சம் வருவாய் ஈட்டியதில் தொடங்கி 2012-ம் ஆண்டு ரூ.1 கோடி வருவாயைத் தொட்டு வளர்ந்து வருகிறார். கூடலிங்கத்தின் பல்வேறு யூனிட்களில் சராசரியாக 100 பேர் பணியாற்றுகின்றனர். ஓசோன் பயன்பாட்டின் வாயிலாக கோவிட் 19 பெருந்தொற்றை குணப்படுத்தும் யோசனையுடன் இப்போது அவரது நிறுவனம் செயல்பட்டு வருகிறது.  


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • from rs 1,500 salary to owner of rs 250 crore turnover company

    வெற்றிப் படிக்கட்டுகள்

    மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் அங்குஷ். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு, வெறும் 1,500 ரூபாய் மாத சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டும் கட்டுமான நிறுவனத்தின் தலைவர். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை

  • Man who sold samosa on the streets is now supplying to airline passengers

    சமோசா சாம்ராஜ்யம்

    ஆறாம் வகுப்பில் தொடர்ந்து மூன்று முறை பெயிலாகி பள்ளிப்படிப்பை விட்டுவிட்டு சாலையோரம் சமோசா விற்றவர் புதுப்பேட்டை ஹாஜா ஃபுனியாமின். இன்று ஆண்டுக்கு 1.5 கோடி ரூபாய் விற்பனை செய்யும் ஸ்நாக்ஸ் நிறுவனம் நடத்துகிறார். பி சி வினோஜ் குமார் தரும் வெற்றிக்கதை

  • Powered by solar

    போராடி வெற்றி!

    டிசிஎஸ் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்த  கரன் சோப்ரா, திடீரென அந்த வேலையை விட்டுவிட்டு எல்இடி விளக்குகள் விற்பனையில் ஈடுபட்டு அதில் தோல்வியை கண்டார். எனினும் விடா முயற்சியுடன் போராடி, இப்போது ஆண்டுக்கு 14 கோடி வருவாய் ஈட்டுகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • Madurai to Tokyo

     ஒலிம்பிக் தமிழச்சி!

    மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமமான சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி. பள்ளி அளவிலான தடகளப் போட்டிகளில் விளையாட்டு போக்கில் பங்கேற்றார். அவருக்குள் மறைந்திருந்த திறமையை கண்டறிந்த பயிற்சியாளர் கண்ணன் ரேவதியை ஒலிம்பிக் தகுதி வரை உயர்த்தியிருக்கிறார். ரேவதியின் வெற்றிக்கதை.    

  • He built a multi-crore business to fulfill his dream of travelling around the world

    சிறகு விரித்தவர்!

    அப்பாவிடம் 2000 ரூபாய் கடன்; இரண்டு அறைகள் கொண்ட கடையில் எஸ்டிடி பூத். இதுதான் இன்று 140 கோடி ரூபாய் புரளும் வாடகைக்கார் மற்றும் ரேடியோ டாக்ஸி நிறுவனத்தின் தொடக்கம். அருண் காரத் என்கிற வெற்றிகரமான தொழிலதிபரின் கதையை சோமா பானர்ஜி விவரிக்கிறார்

  • success story of son of  a farmer

    ஒரு கனவின் வெற்றி!

    வெறும் கைகள், மனதில் நிறைய கனவுகள். இவைதான் சந்திரகாந்த் போடே, மும்பை வந்தபோது அவரிடம் இருந்தவை. அவரது பெற்றோர் கூலித்தொழிலாளிகள். இந்த பின்னணி உடைய அவர் இன்றைக்கு வெற்றிகரமான லாஜிஸ்டிக் நிறுவனத்தின் அதிபர். அவரது நிறுவனம் இப்போது ஆண்டுக்கு ஏழு கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது. நிதி ராய் எழுதும் கட்டுரை.