பழச்சாறு விற்பனையில் பட்டையைக் கிளப்பும் மும்பை தொழிலதிபர் தம்பதி!
24-Mar-2023
By பி சி வினோஜ்குமார்
மும்பை
தங்கள் முதல் சந்திப்பின்போது மானவ் ஷீதல் ஒன்பதாம் வகுப்பும் நிதி அகர்வால் ஏழாம் வகுப்பிலும் படித்துக்கொண்டிருந்தனர். அப்போது தொடங்கிய நட்பு காதலாக மாறி பின்னர் கல்யாணத்தில் முடிந்தது. இருவரும் நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்களே. இது சாதாரண காதல் கதை அல்ல. இது இரு காதலர்கள் இணைந்து வாழ்வதற்காக மன உறுதியுடன் போராடிய கதை.
|
மானவ் ஷீதல், நிதி அகர்வால். ஜுஸ் லௌஞ்ச் என்கிற பழச்சாறு விற்கும் பன்னாட்டுக் கடைகளின் நிறுவனர்கள். இவர்களின் விற்பனை 2.5 கோடியை எட்டியுள்ளது. (படங்கள்: ஹெச் கே ராஜசேகர்)
|
“நான் காதலிப்பது தெரிந்ததும் என் தந்தை, பையன் வாடகை வீட்டில் வசிப்பவனாக இருந்தால் சம்மதம் தெரிவிக்கமாட்டேன் என்றார்,” சொல்கிறார் நிதி, மும்பை அந்தேரியில் உள்ள ஜூஸ் லௌஞ்ச் என்கிற பழச்சாறு விற்கும் கடைகளின் இணை நிறுவனர்.
கல்லூரி தினங்களில் இருந்தே இருவரும் பகுதிநேர வேலை செய்து சம்பாதித்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு நிதியின் அப்பா சொன்னது ஓர் ஊக்கமூட்டும் சவாலாக இருந்தது.
மானவ் மிதிபாய் கல்லூரியில் வணிகவியலில் இளங்கலைப் படித்தபோது, நிதி ஜேடி பேஷன் டெக்னாலஜி இன்ஸ்டிடியூட்டில் பேஷன் டிசைனிங் படித்தார்.
“சந்தை ஆய்வுகள், ஆரம்பபள்ளி மாணவர்களுக்கு டியூஷன் போன்ற பலவேலைகள் செய்தோம்,” என்கிறார் இப்போது 40 வயதாகும் மானவ்.
இரவுகளில் டிஜே ஆகவும் வேலை பார்த்தார். நிதி வீட்டிலிருந்தே ஆடைகள் வடிவமைத்தார். மாடலிங் கூட செய்தார்.
ஆனால் இந்த வேலைகளுக்கு நடுவே ஒருவரோடு ஒருவர் உடனிருந்து நேரம் செலவழிக்கவும் தவறவில்லை. “சினிமாவுக்குப் போவோம். வெளியே சாப்பிடச் செல்வோம். சம்பாதிப்பதை சேமிக்கவும் செய்தோம்,” நினைவுகூர்கிறார் நிதி.
|
மானவ், நிதி இணையரிடம் 40 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள்
|
இருபது ஆண்டுகள் கழித்து இந்த இணையர் 50 பழச்சாறுகடைகள் கொண்ட சங்கிலித்தொடரை ஜூஸ் லௌஞ்ச் என்ற பெயரில் உருவாக்கி இருக்கிறார்கள். ரோலாகோஸ்டா என்ற சாண்ட்விச், ஷாவார்மா, பாஸ்தா விற்கும் உணவுக்கடைகள், சாட் ஓகே ப்ளீஸ் என்கிற சாட் கடைகளையும் உருவாக்கி உள்ளனர்.
அவர்கள் ப்ரான்சைஸி மாதிரியைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் சில கடைகள் மலேசியா, கத்தார், பஹ்ரைன், மாலத்தீவுகள் போன்ற நாடுகளிலும் உள்ளன.
ஜூஸ் லௌன்ச் கடைகளில் பழச்சாறு, சக்திபானங்கள் விற்கிறோம். இயற்கையான பழங்களின் சாறுகளைக் கொண்டு ஆண்டுக்கு பத்துலட்சம் குவளைகள் வரை விற்கிறோம்,” என்கிறார் நிதி.
சாட் ஓகே ப்ளீஸ் கடைகளில் இந்திய தெரு உணவுகள் தூய்மையான முறையில் கிடைக்கின்றன.
இந்த மூன்று பிராண்டுகளும் ப்ளாக் ஆர்கிட் ப்ரைவேட் லிமிடட் நிறுவனத்துக்குச் சொந்தமானவை. இந்நிறுவனத்தில் மானவ், நிதி இருவரும் இயக்குநர்கள் மற்றும் சம பங்குதாரர்கள்.
நிறுவனமே நேரடியாக நடத்துவது நான்கு கடைகள்தான். மீதி கடைகள் பிரான்சைசி முறையில் நடத்தப்படுகின்றன. நிறுவனத்தின் தற்போதைய ஆண்டு விற்பனை 2.5 கோடி ரூ.
|
தங்கள் ரோலாகோஸ்டா கடை ஒன்றில் மானவ்-நிதி
|
“ப்ரான்சைஸ் வழங்க 3-5 லட்சம் வரை கட்டணம். விற்பனையில் 4-6 சதவீதம் ராயல்டி. மொத்தமாக எங்கள் அனைத்து கடைகளையும் சேர்த்தால் 20 கோடி விற்பனை இருக்கும்,” என்கிறார் மானவ்.
இவர்கள் தங்கள் உணவகத்தை விரிவாக்கம் செய்ய இருக்கிறார்கள். ஆனால் இந்த ஜோடி முதல் முதலில் ஆரம்பித்த தொழில் இது அல்ல. அது ஒரு கூரியர் சர்வீஸ். 1998-ல் தங்கள் சேமிப்பான 25,000 ரூபாயைப் போட்டு கூரியர் சர்வீஸ் ஒன்றின் பிரான்சைஸை ஜுஹுவில் ஆரம்பித்தனர்.
“முதல் ஐந்து மாதங்கள் நண்பரின் கேரேஜில் நடத்தினோம். அப்புறம் வாடகை இடத்துக்குப் போனோம். அதற்கு அப்பாவிடம் கடன்வாங்கி அட்வான்ஸ் கொடுத்தோம். ஒரே மாதத்தில் அப்பணத்தைத் திருப்பி அளித்துவிட்டோம்,” என்கிறார் நிதி.
|
துரித சேவை உணவகங்களுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக மானவ் கருதுகிறார்
|
வருமானம் உயர்ந்ததும் அவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்தனர். “அப்போது சில லட்சங்களில் சொத்துக்கள் வாங்கமுடியும்” என்கிறார் நிதி.
9.5 லட்ச ரூபாயில் மாலாடில் வாங்கியது அவர்களின் முதல் சொத்து.
“கூரியர் சேவை லாபகரமாக இருந்தது. ஆனால் மின்னஞ்சலை பெரும்பாலானோர் பயன்படுத்த ஆரம்பித்த பின்னர் எங்கள் லாபங்கள் குறைய ஆரம்பித்தன,” என்கிறார் மானவ்.
சைபர் கபேக்கள் அதிகரித்த சமயத்தில் அவர்கள் இரண்டு கணிப்பொறிகளை வாங்கி கூரியர் கடையிலேயே ப்ரௌசிங் செண்டரும் ஆரம்பித்தனர்.
மானவ் டிஜே வேலையை தொடர்ந்து செய்தார். கூடுதல் வருமானத்துக்கு கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் நடத்திக் கொடுப்பதையும் செய்தார்.
|
பணிதொடர்பாக மானவ், நிதி இருவரும் இணைந்து நேரம் செலவழிக்கிறார்கள். அதை ரசிக்கிறார்கள்.
|
“2005-ல் ஜூஸ் கடை ஒன்றை ஆரம்பிக்க முடிவுசெய்தோம். பல க்ளப்கள், லௌஞ்ச் களுடன் பணிபுரிந்ததால் எங்களுக்கு இதுபற்றித் தெரிந்திருந்தது,” என்கிறார் மானவ்.
அதே ஆண்டில் அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். இரு குடும்பத்தாரின் ஆசியும் இருந்தது. இவர்களிடம் சொந்த வீடும் இருந்தது.
“அந்தேரியில் 250 ச.அடியில் கடை திறந்தோம். வேலைக்கு 2 ஆட்கள். அங்கே நிறைய ஆரம்பகட்ட பழச்சாறு பரிசோதனைகள் செய்யவாய்ப்பு இருந்தது,” என்கிறார் நிதி.
இக்கடையில் 4 லட்சரூபாய் முதலீடு செய்தார்கள். விற்பனை சிறப்பாக இருந்தது. முதல் ஆண்டு முடிவில் இரண்டாவது கடையைத் திறந்தனர். 30 லட்சரூபாயாக ஆண்டு விற்பனையும் உயர்ந்தது.
மானவ் எதிர்காலம் பற்றி உற்சாகமாகப் பேசுகிறார்.
"துரித சேவை உணவகங்கள் எதிர்காலத்தில் சிறப்பாக இருக்கும். இரண்டாம், மூன்றாம் அடுக்கு இந்திய நகர்களில் நுழைய விரும்புகிறோம். அங்கே நல்ல வாய்ப்பு உள்ளது,” அவர் கூறுகிறார்.
|
மானவ், நிதி இருவரும் நாடு முழுக்கவும் சர்வதேச அளவிலும் விரிவடைய திட்டமிடுகின்றனர்
|
இணைந்து செயல்படுவது இந்த தம்பதிக்கு எப்படி உள்ளது?
“கணவன் மனைவி இடையே தகவல் தொடர்பு இல்லாததே பலருக்கு பெரும் பிரச்னை. ஆனால் நாங்கள் நிறையப் பேசுகிறோம். நிறைய பேச வேண்டிய அவசியம் இருக்கிறது,” புன்னகையுடன் பதிலளிக்கிறார்கள்.
நமது புகைப்படக்காரருக்கு போஸ் கொடுக்கையில் அவர்களின் உடல்மொழியில் அந்நியோன்னியம் தெரிகிறது.
இவர்களுக்கு ஒரு மகள். தியா ஷீதல், வயது 4.
அதிகம் படித்தவை
-
டீல்..மச்சி டீல்!
பழைய செல்போன்களை வாங்கிப் பழுது நீக்கி விற்கும் தொழிலில் பட்டையைக் கிளப்புகிறார் யுவராஜ் அமன் சிங். டெல்லியில் சாலையோர மேசையில் போன்களைப் போட்டு விற்றவர் இன்று 150 கோடி ரூபாய்க்கு விற்பனையை எட்டிய வெற்றிக்கதையை விளக்குகிறார் நரேந்திரா கௌசிக்
-
மலைத்தேன் தந்த வாய்ப்பு!
மிதுன் ஸ்டீபன், ரம்யா சுந்தரம் இருவரும் பொறியியல் பட்டதாரிகள். பெங்களூரில் சந்தித்துக் கொண்ட அவர்கள் மலையேற்றம் மேற்கொள்ளும் ஆர்வத்தில் ஒன்றிணைந்து, பரஸ்பரம் வாழ்க்கை துணையாக இணைந்தனர். ஆண்டுக்கு 2 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் பாரம்பரியமான கலப்படமற்ற தேன் வர்த்தகத்திலும் கொடிகட்டிப் பறக்கின்றனர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
உயரப் பறத்தல்
விமானப்போக்குவரத்து துறை படுபாதாளத்தில் இருந்தபோது, தொழில் நேர்த்தியுடன் விமானப் போக்குவரத்து சேவையைத் தொடங்கிய ராகுல், ராகேஷ் இருவரும் இன்று இன்டிகோ என்ற உயரப்பறக்கும் விமான நிறுவனத்தின் உரிமையாளர்களாக இருக்கின்றனர். ஷெல்லி விஷ்வஜித் எழுதும் கட்டுரை
-
ஒளிமயமான பாதை
மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரப்பர் ஸ்டாம்ப் விற்கும் நபராக இருந்தவர் ஜிதேந்திர ஜோஷி. இந்தியாவுக்கு எல்.இ.டி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். இப்போது 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் எல்.இ.டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். மாசுமா பார்மால் ஜாரிவாலா எழுதும் கட்டுரை
-
தையல் கலைஞர்களின் உச்சம்
குடும்பத்தை பாதுகாத்து வந்த தந்தையோ திடீரென சந்நியாசி ஆகிவிட்டார். இந்நிலையில், சிறு வயது முதல் கடினமாக உழைத்து இன்றைக்கு பிரதமர் முதல் பல பிரபலங்களின் ஆடைகளை தைக்கும் தையற் கலைஞர்களாக உயர்ந்திருக்கின்றனர் இந்த குஜராத் சகோதரர்கள். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
மலைக்க வைக்கும் வளர்ச்சி!
உத்தரகாண்ட் மாநிலத்தின் குக்கிராமத்தில் பிறந்தவர் கீதா சிங். ஐம்பதாயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி, இன்றைக்கு டெல்லியில் ஆண்டுக்கு 7 கோடி ரூபாய் வருவாய் தரும் நிறுவனத்தின் உரிமையாளராக இருக்கிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை