Milky Mist

Sunday, 6 July 2025

வெறும் 3000 ரூபாயில் தொடங்கிய தொழிலில் இன்று 55 கோடிகள் புரள்கிறது! ஒரு கனவின் வெற்றி!

06-Jul-2025 By ஜி.சிங்
கொல்கத்தா

Posted 02 Aug 2017

தன் பதின்வயதில் கணிப்பொறியே கதி என்று கிடந்தவர் அபிஷேக் ருங்டா.  கடந்த இருபது ஆண்டுகளில் 55 கோடிகள் புரளும் இண்டஸ் நெட் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ ஆக வளர்ச்சி பெற்றுள்ளார்.

இப்போது 39 வயதாகும் அபிஷேக் தன் தொழிலை 1997-ல் தொடங்கியபோது அவரது சட்டைப்பையில் 50 ரூபாய் தாள் ஒன்று மட்டுமே இருந்தது. கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இண்டஸ் நெட் டெக்னாலஜீஸ் இப்போது இணைய மென்பொருள் தயாரிப்பு மற்றும் டிஜிட்டல் சந்தைப்படுத்தல் துறையில் மிகவும் முக்கியமான நிறுவனம். இதில் 700 பேர் வேலை செய்கிறார்கள். 100 வலுவான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

https://www.theweekendleader.com/admin/upload/mar10-17-indus1.jpg

அபிஷேக் ருங்டா, சிஇஓ, இண்டஸ் நெட் டெக்னாலஜீஸ், நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.  3,050 ரூபாய் முதலீட்டில் ஆரம்பித்தவர் ( படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)


பெவிக்கால் முதல் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் வரை, எல்ஜி முதல் ரெனால்ட் வரை, எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் முதல் யுனிலீவர் வரை வளமான வாடிக்கையாளர்களை இந்நிறுவனம் கொண்டுள்ளது.  ஆக்ஸிஸ் வங்கி, இண்டஸ் இன், சிப்ளா, இந்திய அரசு, அதானி குழுமம், டெஸ்கோ, பேங்க் ஆப் அமெரிக்கா, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற நிறுவனங்களும் வாடிக்கையாளர்களில் அடங்கும்.

நடுத்தர மார்வாடிக் குடும்பம் இவருடையது. ஒரே ஒரு சகோதரி. பெயர் அங்கிதா. அபிஷேக்கின் தந்தை ஒரு வணிகர். தன்னுடைய வணிகப்பயணங்களின் போது மறக்காமல் மகனையும் அழைத்துச் செல்லக்கூடியவர்.

அந்த பயணங்களின் மூலம் கணக்கீடுகள், செலவின நிர்வாகம், வாடிக்கையாளருடன் பழகுதல் போன்றவற்றை அவர் கற்றுக்கொண்டார். “தொழில் தொடங்கவேண்டும் என்பதற்கான விதைகள் அப்போது எனக்குள் ஊன்றப்பட்டன,” என்கிறார் அபிஷேக். சால்ட் லேக்கில் உள்ள அவரது அலுவலகத்தில் எங்கள் சந்திப்பு நடந்தது.

 “தொழிலில் உள்ள நுட்பங்கள், தினசரி பிரச்னைகள், அவற்றை சமாளிக்கும் வழிகள் போன்றவற்றைப் புரிந்துகொள்ள அப்பயணங்கள் உதவின.”

அவர் படித்த சௌத் பாயிண்ட் பள்ளியில் தலைமைத்துவ பயிற்சி தந்த எடின்பெர்க் கோமகன் பெயரில் அமைந்த திட்டத்தில் எட்டாம் வகுப்புப் படிக்கும்போதே தன்னை இணைத்துக்கொண்டார்.

வீட்டில் தன் 486 இண்டெல் கணிப்பொறியில் நேரம் செலவழித்தார். 17 வயதிலேயே அவருக்கு தந்தை  அதை இயக்க சொல்லித் தந்திருந்தார். 1996-ல் 12 ஆம் வகுப்பு முடித்தபின்னர் கொல்கத்தாவில்  உள்ள புனித சேவியர் கல்லூரியில் பிகாம் படித்தார். விடிகாலை ஆறுமணிக்குத் தொடங்கி 9.30 மணிக்கு வகுப்புகள் முடிந்துவிடும்.

அப்போது நண்பர் ஒருவரின் ஆலோசனையின் பேரில் ஷா அண்ட் சௌத்ரி நிறுவனத்தில் நேரடி சிட்டி வங்கி கடன் விற்பனையாளராக மாதம் 2250 ரூபாய்க்குச் சேர்ந்தார்.

”அங்கே விற்பனையில் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொண்டேன். பின்னர் என் சொந்த நிறுவனத்தை உருவாக்க அது உதவியது,” என்கிறார் அபிஷேக்.

1997 ஒரு முக்கியமான ஆண்டு. அவர் சாலை விபத்தில் சிக்கினார். “மருத்துவர்கள் ஓய்வை வலியுறுத்தியதால் நான் வேலையை விடவேண்டியதாயிற்று,” என்கிறார் அபிஷேக். அவர் மீண்டும் தனக்குப் பிரியமான கணிப்பொறிக்கே திரும்பினார். ஒரு கணம்கூட அதைப் பிரிந்திருக்கவில்லை..

https://www.theweekendleader.com/admin/upload/mar10-17-industeam.jpg

சுமார் 750 தொழிலாளர்கள் இவரது நிறுவனத்தில் பணிபுரிகிறார்கள்



 “அக்காலகட்டத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டேன். என்னுடைய  ப்ரொகிராமிங், வடிவமைப்புத் திறன்களை மேம்படுத்திக்கொண்டேன்,” என்கிறார் அபிஷேக். அதே ஆண்டு எடின்பெர்க் கோமகன் கொல்கத்தாவுக்கு வருகை தந்தார். இந்தியாவின் சுதந்தர தினத்தை ஒட்டி நடந்த நிகழ்வில் தலைமைத்துவ பயிற்சித் திட்ட விருதுகளை அவர் வழங்கினார். அபிஷேக்குக்கு இவ்விழாவில் ஒரு விருது வழங்கப்பட்டது. அவர் அத்திட்டம் பற்றி உருவாக்கிய அனிமேஷன்  வீடியோவை எடின்பெர்க் கோமகன் பாராட்டினார்.

இந்த பாராட்டுகள் அவருக்கு உற்சாகம் அளித்து எதையாவது தொடங்கத் தூண்டின. “எனக்கு வெப் டிசைனிங் செய்யலாம் என்று தோன்றியது. அப்போதுதான் அது அறிமுகம் ஆகி இருந்தது,” அவர் நினைவு கூர்கிறார்.

தெற்கு கொல்கத்தாவில் நடந்த ஒரு கண்காட்சியில் ஐடி சேவை வழங்கும் ஒரு ஸ்டால் பெறுவதற்காகச் சென்றார். ஒருவர் அவருக்கு தன் ஸ்டாலில் பாதியைத் தர முன்வந்தார். கட்டணம் 6000 ரூபாய். ஆனால் அவரிடம் அவ்வளவு பணம் இல்லை.

 “நான் என் நண்பன் ஹ்ருதய் பியானியை அணுகினேன். அவனுக்கும் கணிப்பொறி மீது ஆர்வம் உண்டு. ஆளுக்கு 3000 ரூ போட்டு  ஸ்டாலை எடுத்தோம்.

https://www.theweekendleader.com/admin/upload/mar10-17-indusaward.JPG

11,000 திட்டப்பணிகளுக்கு மேல் இண்டஸ் நிறைவேற்றி உள்ளது. இந்தியா, யுகே, யுஎஸ்ஏ, கனடா, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, சௌதி அரேபியா, யுஏஇ, குவைத், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாடிக்கையாளர்கள் உண்டு



“ஸ்டால் எடுத்தாகிவிட்டது. ஆனால் கம்பெனிக்கு பெயர் ஏதும் வைக்கவில்லை. என்ன வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டே வெளியே சாப்பிடப்போனேன். சாப்பிட்ட ஓட்டலின் பெயர் இண்டஸ் வேலி. உடனே எனக்கு இண்டஸ் என்ற பெயர் தோன்றிவிட்டது.  'இண்டஸ் இண்டர்நெர் டெக்னலாஜி' என்று பெயர் வைத்துவிட்டேன். 50 ரூபாய் செலவு செய்து நிறுவனத்தின் பெயர் போட்டு அறிவிக்கைகளை அச்சடித்தேன்,” என்கிறார் அவர். அந்த கண்காட்சி முடியும்போது அவருக்கு வெப் டிசைனிங் செய்ய நான்கு ஆர்டர்களும் வெப் ஹோஸ்டிங் செய்ய ஒரு ஆர்டரும் கிடைத்தன.

 “இணையதளத்தை ஒரு சர்வரில் ஏற்றுவதே வெப் ஹோஸ்டிங். குறைவான தனியார் ஆட்களே அந்த தொழிலில் இருந்தனர். எனவே வளரும் வாய்ப்பு இருப்பதாக எனக்குத் தோன்றியது. 1997-ல் வெப் ஹோஸ்டிங் ஸ்பேஸ் 22,000 ரூபாய் செலவழித்து வாங்கினேன். ஆனால் அதையே அமெரிக்காவில் வாங்கினால் 6000 ரூபாய் என்பது எனக்குத் தெரியவந்தது. எனவே அங்கே வாங்கி இங்கே விற்று சம்பாதித்தேன்,” என்கிறார் அபிஷேக்.

 “எங்கள் நிறுவனம் பிரைவேட் லிமிடட் நிறுவனம் ஆகிவிட்டது. அதற்கு இண்டஸ் நெட் டெக்னாலஜீஸ் என்று பெயர் வைத்தோம்.  1998-99-ல் இருந்து வெப் ஹோஸ்டிங்கை விற்க விற்பனையாளர்களை நியமித்தோம். நிறைய லாபம் ஈட்டினோம்.”

வடக்கு கொல்கத்தாவில்  தன் தந்தையின் 600 ச.அடி அலுவலகத்தில் தன்னந்தனியாக ஒரு ஆண்டு அவர் உழைத்தார். உதவிக்கு ஒரு ஆள் கூட வைத்துக்கொள்ளவில்லை. 1998-ல்  மிகப்பெரிய வெப் ஹோஸ்டிங் நிறுவனமாக அது மாறியது. அதன் ஆண்டு வர்த்தகம் பத்து லட்ச ரூபாய்!

99-ல் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் இங்கிலாந்தில் ஓராண்டு மல்டிமீடியா முதுகலைப் படிப்பு படிக்கச் சென்றார் அபிஷேக்.  "அப்போது தொழிலை என் தங்கை அங்கிதாவிடம் விட்டுச் சென்றேன். அவளுக்கு 18 வயது. ஆனாலும் தொழிலை நன்றாகக் கவனித்துக்கொண்டாள்,” என்கிறார் அபிஷேக்.

https://www.theweekendleader.com/admin/upload/mar10-17-induscomp.JPG

 இணைய செயலிகள், மொபைல் செயலிகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், க்ளவுட் இன்ப்ரா மற்றும் அனாலிடிக்ஸ் ஆகியவற்றில் இண்டஸ் பல சேவைகளைத் தருகிறது


நல்ல வேலை வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றை விட்டுவிட்டு அபிஷேக், படிப்பு முடிந்ததும் இந்தியா திரும்பி தன் தொழிலில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் 2000-த்தில் ஏற்பட்ட மந்த நிலை அவரை இந்தியா திரும்பியது தவறோ என்று எண்ண வைத்தது. எந்த ஆர்டர்களும் கிடைக்கவில்லை!

 மீண்டும் கணிப்பொறியே கதி என்று இணையத்தில் மூழ்கினார் அபிஷேக். “வெப் டிசைனிங், ப்ரோகிராமிங் செய்ய ஆட்களைத்தேடிக்கொண்டிருந்த வெளிநாட்டு நிறுவனங்களில் தொடர்பு கிடைத்தது” என்கிறார் அவர்.

அவர் மீண்டும் கடினமாக உழைத்து வாடிக்கையாளர்களைப் பெற்றார்.  2008-ல் அவரது நிறுவன விற்பனை 13 கோடிகளாக உயர்ந்தது. 3000 இந்திய சிறுநிறுவனங்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் அவருக்கு வாடிக்கையாளர்கள் ஆயினர். 300 பேர் கொண்ட பணியாளர் குழு அவரிடம் இருந்தது.

2012-ல் அவரது பணியாளர்களில் சிலர் விலகிச் சென்றனர். அப்போது அவரது சில முக்கிய வாடிக்கையாளர்களையும் பல பணியாளர்களையும் அவர்கள் பக்கம் இழுத்துக்கொண்டனர். இதனால் இண்டஸ் நெட்டுக்கு 5 கோடிகள் வரை தொழில் இழப்பு ஏற்பட்டது. அபிஷேக் திட்டத்தை மாற்றினார். பெரிய நிறுவனங்களுடன் மற்றும் பணிபுரிவது என முடிவு செய்தார்.

 “இப்போது நாங்கள் பெரிய நிறுவனங்களுடன் மட்டும் பெரிய மதிப்புள்ள வேலைகளை எடுத்துச் செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும் பணிகள் தருகிற 100 நிறுவனங்கள் வாடிக்கையாளர்களாக உள்ளனர். 730 பேர் பணி செய்கிறார்கள். இணைய செயலிகள், மொபைல் செயலிகள், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், க்ளவுட் இன்ப்ரா மற்றும் அனாலிடிக்ஸ் ஆகியவற்றில் சேவைகள் தருகிறோம்,” என்கிறார் அபிஷேக்.   

இண்டஸ் நெட் டெக்னாலஜீஸ் இரண்டு நிறுவனங்களை வாங்கி உள்ளது. அவை இண்டஸ் நெட் டெக்‌ஷு, இன்ப்ளக்ஸ் ஈஆர்பி. கடந்த ஆண்டு 5 கோடி முதலீடு செய்து ஒரு கூட்டு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.

https://www.theweekendleader.com/admin/upload/mar10-17-induspartners.jpg

 அபிஷேக் தன் நீண்ட கால நண்பரும் தொழில் கூட்டாளியுமான பாரத் பெர்லியாவுடன்


“இரு நிறுவனங்களைக் கையகப்படுத்தியது எங்கள் பணியை மேலும் வலுவாக்கி உள்ளது,” என்கிறார் அபிஷேக். அவரது நீண்ட கால நண்பர் பாரத் பெர்லியா நடத்திய மொபைல் தொடர்பான நிறுவனத்தையும் இண்டஸ்நெட்டுடன் இணைத்துவிட்டார்.  அதை அவர் அபிஷேக்குடன் கூட்டாக நடத்திக்கொண்டிருந்தார். அது 10 கோடி ரூபாய்கள் வர்த்தகம் செய்த நிறுவனம்.

இந்தியா, யுகே, யுஎஸ்ஏ, கனடா, தென் ஆப்பிரிக்கா, மெக்சிகோ, சௌதி அரேபியா, யுஏஇ, குவைத், சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வாடிக்கையாளர்கள், 11,000த்தும் மேல் திட்டப்பணிகளை நிறைவேற்றிய அனுபவம் ஆகியவற்றால் இண்டஸ் நெட் தொடர்ந்து வளர்ச்சி பெற்றுவருகிறது.

அபிஷேக் தன் விருப்பத்தையே தொழிலாக மாற்றினார். தொழிலே விருப்பமாக மாறியது. அதுதான் இந்த வெற்றி சாத்தியம் ஆகக் காரணம்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • tasty biriyani

    மணக்கும் வெற்றி!

    ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில்  இளைஞர்களான சஞ்சீவ் சாஹா, ராஜீவ் சாஹா இருவரும்  ஆவாதி பிரியாணியை தங்கள் குடும்ப உணவகத்தில் அறிமுகம் செய்தனர். அந்த உணவகம் பிரியாணி பிரியர்கள் கூட்டம் கூட்டமாக தேடி வரும் இடமாக மாறி ஆண்டு வருவாய் 15 கோடியைத் தொட்டுள்ளது. பார்த்தோ பர்மன் எழுதும் கட்டுரை

  • Inspiring story of crorepati entrepreneur who makes cloth blags from discarded hotel bed sheets

    குப்பையிலிருந்து கோடிகள்

    அமெரிக்காவில் தூக்கி எறியப்படும் படுக்கை விரிப்புகளை ஜெய்தீப் சஜ்தே வாங்குவார். இந்தியாவில் உள்ள தொழிற்கூடத்தில் அவற்றை வண்ணமிகு பைகளாக மாற்றுவார். கடந்த ஆண்டு அவர் இத்தொழிலில் பெற்றது 4 கோடி ரூபாய்கள். பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை

  • After failing in first business he built a rs 1500 crore turnover business

    கடலுணவில் கொட்டும் கோடிகள்

    இரண்டு லட்சம் ரூபாய் கடனில் மீன்பிடிப்படகுகள் வாங்கி தொழில் தொடங்கிய தாரா ரஞ்சன் முன் அனுபவம் இல்லாததால் தோல்வியைச் சந்தித்தார். ஆனால் அதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டு, இன்று ஆண்டுக்கு 1500 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் மிகப்பெரிய தொழில் அதிபராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • How a family built a successful business with fruits after suffering losses in their first venture

    வெற்றியின் சுவை

    கொல்கத்தாவில் ஒரு ஐஸ்கிரீம் பிராண்ட் வீழ்ச்சி அடைந்து, உரிமையாளரின் குடும்பம் 30 லட்சரூபாய் கடனில் தத்தளித்தது. 22 வயதே ஆன மூத்தமகன் களமிறங்கி வெற்றி பெற்ற கதை இது. இயற்கையான பழங்களில் இருந்து இனிப்பான ஐஸ்கிரீம் பிறந்தது. கட்டுரை: ஜி சிங்

  • Mumbai couple's juice chain doing roaring business

    வெற்றியின் ஜூஸ்

    நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த காதலர்கள் அவர்கள். இணைந்து சொந்தமாக பல தொழில்கள் செய்து, இப்போது மும்பையில் பழச்சாறு விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்களின் சுவாரசியமான வெற்றிக்கதையைத் தருகிறார் பி சி வினோஜ்குமார்

  • born in a small town he is now fighting brands like reebok and nike

    விளையாட்டாக ஒரு வெற்றி!

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் பெய்த், விளையாட்டு ஆர்வம் கொண்டவர். இன்றைக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் இரண்டு வெற்றிகரமான நிறுவனங்களின் உரிமையாளர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை