அலிகரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு! தொழில்துறையில் ஓர் இளைஞரின் அசாத்தியமான வெற்றிப்பயணம்!
12-Feb-2025
By சோபியா டேனிஷ்கான்
ஆஸ்திரேலியா
உத்தரபிரதேச மாநிலத்தின் அலிகர் நகரில் நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் அமீர் குதூப். ஒரு தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்ற லட்சியக் கனவை பூர்த்தி செய்ய ஆஸ்திரேலியாவின் ஜீலாங்கில் எம்.பி.ஏ படிக்கச் சென்றார்.
அங்கே விமானநிலையத்தில் துப்புரவுத் தொழிலாளியாக பணி புரிந்தார். பின்னர், காலை நேரங்களில் செய்தித்தாள் போடும் வேலை
பார்த்தார். அதன் பின்னர் அவர் வேலை பார்த்த ஒரு நிறுவனத்தில் மிக இளம்வயதில் பொதுமேலாளராக உ யர்ந்தார். இறுதியில் சொந்தத் தொழிலைத்
தொடங்கினார். அந்த தொழில் ஐந்து
ஆண்டுகளில் 2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர் வருவாயை
(தோராயமாக ரூ.12 கோடி) எட்டும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
அமிர் குதூப், நிறுவனர், என்டர்பிரைஸ்
மங்கி (புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)
|
எண்டர்பிரைஸ் மங்கி என்ற அவரது ஜீலாங்கில் உள்ள நிறுவனம், தானியங்கிய முறைக்கு தொழில்களை மாற்ற உதவுகிறது. அவரது நிறுவனத்தில் இப்போது 100 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆஸ்திரேலியாவின் எட்டு இதர ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் துணை நிறுவனராகவும் முதலீட்டாளராகவும் அமீர் திகழ்கிறார். இந்த நிறுவனங்களின் மொத்த மதிப்பு 30 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் ஆகும். “அதில் இரண்டு நிறுவனங்கள் தோல்வியடைந்து விட்டன. ஆறு நிறுவனங்கள் செயல்படுகின்றன. மூன்று நிறுவனங்கள் நன்றாக செயல்படுகின்றன,” என்றார் 31 வயதாகும் அமீர். அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் 2011 ஆம் ஆண்டு இயந்திரவியலில் பொறியியல் பட்டம் பெற்ற பின்னர் முதன் முதலாக கிரேட்டர் நொய்டாவில் ஹோண்டா நிறுவனத்தில் பணியாற்றினார். ஹோண்டா நிறுவனத்தில் ஓர் ஆண்டு உற்பத்தி பொறியாளராக அவர் பணியாற்றினார். ஆனால், காலை 9 மணிக்கு சென்று விட்டு 5 மணிக்குத் திரும்பும் வேலை தமது விருப்பத்துக்கு உரியது இல்லை என்பதையும், வாழ்க்கையில் பெரிய விஷயங்களை சாதிக்கவே தாம் விதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் உணர்ந்தார். “என்னுடைய திறன் மற்றும் அறிவை நான் வீணாக்கிக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன்,” என்று தமது முதல் வேலை குறித்துக் கூறினார். “அலுவலகத்தில் ஒவ்வொன்றும் பேப்பர் அடிப்படையில் இருந்தது. பேப்பர்கள் அடிக்கடி தொலைந்து போயின. பிரச்னைகள் உருவானது. நான் தானியங்கி முறையில் அவற்றை மாற்றவும் ஒவ்வொன்றையும் டிஜிட்டல் ஆக்கவும் முன்வந்தேன். என்னுடைய தினசரி பணியை நான் முடித்த பின்னர், என்னை இந்த வேலையைச் செய்ய அவர்கள் அனுமதித்தனர்.'' “நான் அந்த புராஜெக்டை முடித்தபோது, அனைத்து கடைகளிலும் அது நிறுவப்பட்டது. ஆனால், அவர்கள் என்னுடைய பதவியை மாற்றவில்லை. எனவே நான் வேலையை விட்டு விலகினேன்.”

அலிகரில் சாதாரண நிலையில் இருந்து
நீண்டதூரம் கடந்து வந்திருக்கிறார் அமீர். இன்றைக்கு அவர் ஆடி, மெர்சிடிஸ் கார்கள் வைத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சொந்தமாக வீடு வைத்திருக்கிறார்.
|
23 வயதில் இது அமீர் வாழ்க்கையின் மிக முக்கியமான கட்டம். ஆரம்பகட்ட சந்தேகங்கள் மற்றும் அச்சங்களில் இருந்து வெளியே வந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள நிறுவனங்களுக்காக சில ப்ரீலேன்ஸ் மென்பொருள் பணிகளை செய்யத் தொடங்கினார். அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தில் அமீர் இயந்திரப் பொறியியல் படித்தார். கூடுதலாக தனித்திறன் செயல்பாடுகளில் அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. விவாதங்களில் பங்கெடுத்தார். பரிசுகளை வென்றார். ஒரு மாணவ பத்திரிகையையும் தொடங்கினார். கோடிங் எழுதுவது குறித்து கற்றுக் கொண்டு மாணவர்களுக்கான ஒரு சமூகவலைதளம் உருவாக்கினார். அது பெரும் அளவு பிரபலம் ஆனது. “ஒரு கட்டத்தில் இந்த சமூக வலைதளம் கல்லூரி முடித்து சென்ற பழைய மாணவர்கள் உட்பட 50,000 பயனாளர்களைக் கொண்டு செயல்பட்டது,” என்றார் அமீர். கோடிங் எழுதுவதில் அவரது அறிவானது சில ஆண்டுகள் கழித்து அவர் சொந்த நிறுவனம் தொடங்குவதற்கான ஒரு உந்துதலாக இருந்தது. நல்ல வாய்ப்புகளுக்காக தங்கள் நாட்டுக்கு வரலாமே என ஒரு ஆஸ்திரேலிய வாடிக்கையாளர் சொன்னபோது அமீரின் எல்லைகள் மேலும் விரிவடைந்தன. ஜீலாங்கில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிப்பதற்காக விண்ணப்பித்தார். முதல் மூன்று மாத கல்வி உதவித்தொகையுடன் அவருக்கு அங்கு இடம் கிடைத்தது. ஒரு வணிக நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற தன் கனவை ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து வளர்த்தெடுத்தார். பகுதி நேர வேலையும் பார்க்கத் தொடங்கினார். “என்னுடைய சொந்த வணிகத்தை தொடங்குவதற்கும் , வாழ்க்கைக்கும் இன்னும் பணம் தேவைப்பட்டது. நான் எம்பிஏ படிப்பதற்கு என் தந்தை ஏற்கனவே ரூ.5 லட்சம் கொடுத்து விட்டார். எனவே அவரிடம் மேற்கொண்டு பணம் கேட்கவிரும்பவில்லை,” என்றார் அமீர். 170 நிறுவனங்களுக்கு வேலைக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால், எந்த ஒரு நிறுவனத்தில் இருந்தும் அவருக்கு அழைப்பு வரவில்லை. எனினும், ஜீலாங் விமானநிலையத்தில் அவருக்கு துப்புரவுப் பணியாளராக வேலை கிடைத்தது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வாரத்தில் நான்கு நாட்கள் வேலை. “அங்கே அவ்வப்போது நான் விமானிகளை சந்தித்து அவர்களிடம் பேசிக் கொண்டிருப்பது வழக்கம்,” என்றார். “இந்தியாவில் சுத்தம் செய்யும்பணி தரக்குறைவாகப் பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில்,மற்ற பணிகளைப் போலவே அதுவும் பார்க்கப்படுகிறது. எனது பெற்றோருக்கு நான் பார்க்கும் வேலை குறித்து தெரியவந்தபோது. அது குறித்து அவர்கள் வருத்தப்பட்டனர். இதற்கிடையே, உறவினர்கள் இது குறித்து பேசியது குடும்பத்தில் கடினமான சூழலை ஏற்படுத்தியது.” நீண்ட நேரம் பணியாற்றியதால் படிப்பு பாதிக்கப்பட்டது. எனவே மூன்று மாதங்கள் கழித்து அமீர் அந்த வேலையை விட்டு விலகினார். செய்தித்தாள்கள் விநியோகம் செய்யும் இன்னொரு வேலை அவருக்குக் கிடைத்தது. காலை மூன்று மணிக்குத் தொடங்கும் வேலை காலை எட்டு மணிக்கு முடியும். இதன் மூலம் அவருக்கு படிப்பில் கவனம் செலுத்துவதற்கு போதுமான நேரம் கிடைத்தது. தொடர்ந்து அவர் வாய்ப்புகளைத் தேடிக்கொண்டிருந்தார். ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சிபெறுபவராக பணியில் சேர்ந்தார். அந்த நிறுவனத்துக்கு முழுமையான தொழில்மாதிரி அறிக்கை ஒன்றை அவர் தயார்செய்து அளித்தார். இரண்டாவதாக ஜீலாங்கில் ஐசிடி என்ற ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயிற்சிப் பணியாளராகச் சேர்ந்தார். பின்னர் அங்கே அவருக்கு ஆபரேஷன் மேலாளராக 5000 ஆஸ்திரேலிய டாலர் சம்பளத்தில் வேலை கிடைத்தது.

அலிகரில் தொழில்முனைவோரை
ஊக்கப்படுவத்துவதற்காக ஓர் அறக்கட்டளை ஏற்படுத்தி உள்ளார். இதற்காக அடிக்கடி இந்தியா வர திட்டமிட்டுள்ளார்.
|
அவர் அந்நிறுவனத்தில் பொதுமேலாளருக்கு கீழே நேரடியாகப் பணியாற்றினார். ஒன்றரை ஆண்டு கழித்து பொதுமேலாளர் பதவி விலகியதை அடுத்து , இடைக்காலமாக அமீர் பொதுமேலாளராக நியமிக்கப்பட்டார். இந்த பணியில் நிறுவனத்தின் நிர்வாக உறுப்பினர்களின் கவனத்தை அவர் ஈர்த்தார். இந்த சமயத்தில் அவர் எம்பிஏ படித்து முடித்தார். இதையடுத்து அவர் பொதுமேலாளராக நிரந்தரமாக நியமிக்கப்பட்டார். 25 வயதில் அந்நிறுவனத்தில் மிக இளமையான பொதுமேலாளராக அவர் பதவி வகித்தார். “ஒரு ஆண்டுக்குள் நிறுவனத்தின் வருவாய் 300 சதவிகிதம் அளவுக்கு அதிகரித்தது,” என்று அமீர் பகிர்ந்து கொண்டார். 2014-ஆம் ஆண்டு ஜீலாங்கில் ஐசிடி-யில் பணியாற்றிக் கொண்டிருந்தபோதே, எண்டர்பிரைஸ் மங்கி என்ற நிறுவனத்தைப் பதிவு செய்து, அதில் அவரது சேமிப்பான 4000 ஆஸ்திரேலிய டாலரை முதலீடு செய்தார். ஒரு ஆண்டுக்குப் பின்னர், இந்தியாவில் இருந்து இணைய உதவியாளர் ஒருவரை வேலைக்கு அமர்த்தினார். நான்குபேருடன் வேலையைத் தொடங்கினார். வணிகம் வளர்ச்சியடைந்தபோது, மேலும் பலரை வேலைக்கு எடுத்தார். ஆனால், விரைவிலேயே தமது ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்கு அவரிடம் பணம் இல்லாத சூழல் ஏற்பட்டது. “நாங்கள் பணம் சம்பாதித்தோம். ஆனாலும் நான் கடனில் இருந்தேன். எனவே தனியார் நிதி நிறுவனங்களிடம் ஒரு லட்சம் ஆஸ்திரேலிய டாலர் கடன் வாங்கினேன்,” என்று பகிர்ந்து கொண்டார். “நிலைமை மிகவும் மோசமானது. என்னுடைய காருக்குப் பெட்ரோல் போடுவதற்கு கூட என்னிடம் பணம் இல்லை. என்னிடம் 17 ஊழியர்கள் பணியாற்றினர். ஆண்டு வருவாய் அதிகமாக இருந்தது. ஆனால், லாபம் ஏதும் இல்லை.” இரண்டு மாதங்கள் அவர் இடைவெளி எடுத்துக் கொண்டார். எங்கே தவறு நேர்ந்தது என்று ஒட்டு மொத்த வணிக முறை குறித்து ஆய்வு செய்தார். “எனது நண்பர்கள், ஆலோசகர்கள், வாடிக்கையாளர்கள் ஆகியோரிடம் நான் கருத்துகளைக் கேட்டுப் பெற்றேன்,” என்று தமது தொழில் முனைவுப் பயணத்தில் நேர்ந்த கொந்தளிப்பான காலகட்டத்தைப்பற்றி நினைவு கூர்ந்தார். “ நிறைய சிறிய வாடிக்கையாளர்களை வைத்துக்கொண்டு லாபம் சம்பாதிக்க முடியாமல் சக்தியை வீணடித்துக்கொண்டிருப்பதை நான் உணர்ந்தேன். வளர்ச்சியை விடவும் லாபத்தை நோக்கி தொழிலைத் திருப்பி அமைத்தேன். எல்லாம் சரியாகிவிட்டது. என்னுடைய கடன்களை மூன்று மாதங்களுக்குள் திருப்பிச் செலுத்தினேன்.”

ஆஸ்திரேலியாவில் சிறந்த இளம் வணிகர் விருது உள்ளிட்ட பல விருதுகளை அமீர் பெற்றார் |
இன்றைக்கு, நீண்டநாட்களாக அவர் துரத்திக் கொண்டிருந்த வெற்றியின் அடையாளமாக அவர் மாறியிருக்கிறார். ஆஸ்திரேலிய சிறந்த இளம் வணிகர் ஆண்டு விருது உள்ளிட்ட பல சாதனை விருதுகளை ஏற்கனவே அமீர் பெற்றிருக்கிறார். அவர் நிச்சயமாக மேலும் வெற்றிகளைப் பெறுவார் என்றே சொல்லலாம். ஆடி மற்றும் ஒரு மெர்சிடிஸ் காரை அவர் ஓட்டுகிறார். ஆஸ்திரேலியாவில் அவருக்குச் சொந்த வீடு இருக்கிறது. அங்கு அவர் தமது மனைவியான சாரா நியாஸி என்ற பல்மருத்துவருடன் வசிக்கிறார். தொழில்முனைவுப் பயணத்தைத் தேர்வு செய்பவர்களை ஊக்குவிக்க அலிகரில் அமீர் குதூப் அறக்கட்டளை என்ற அமைப்பை அமீர் உருவாக்கி உள்ளார். “இப்போது நான் பகுதி அளவு ஓய்வு பெறும் நிலைக்கு வந்து விட்டேன். வணிகம் அதன்போக்கில் செயல்படுகிறது. எனவே நான் அறக்கட்டளையில் அதிக கவனம் செலுத்தமுடியும் என நினைக்கிறேன். வெறுமனே பணத்தை சம்பாதிப்பது மட்டுமின்றி எப்போதுமே புதிய மற்றும் சுவாரஸ்யமான விஷயங்களைச் செய்வதையே நான் விரும்புகிறேன்,” என்று சொல்லி அவர் விடைபெறுகிறார்.
அதிகம் படித்தவை
-
வெற்றிப் படிக்கட்டுகள்
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் அங்குஷ். டிப்ளமோ சிவில் இன்ஜினியரிங் முடித்து விட்டு, வெறும் 1,500 ரூபாய் மாத சம்பளத்தில் வாழ்க்கையைத் தொடங்கினார். இன்றைக்கு ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டும் கட்டுமான நிறுவனத்தின் தலைவர். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை
-
ஏற்றம் தந்த பசுமை
ஐ.ஐ.டியில் பட்டம் பெற்றவர் வெறும் மூவாயிரம் ரூபாய் சம்பளத்துக்கு வேலையில் சேர்ந்து, கடினமாக உழைத்து இன்றைக்கு மூன்று நிறுவனங்களின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். அவரது நிறுவனங்களின் ஆண்டு வருவாய் 71 கோடி ரூபாய். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
போக்குவரத்து தந்த வெற்றிப்பயணம்
தந்தைக்கு உதவியாக பதிப்புத் தொழிலில் இருந்த சங்கேஸ்வர் , சாதிக்கும் ஆசையில் போக்குவரத்துத் தொழிலில் இறங்கினார். பெரும் நஷ்டங்களுக்குப் பின்னர் வெற்றிகளைக் குவித்த அவர் இன்று வி.ஆர்.எல் லாஜிஸ்டிக் நிறுவனத்தின் தலைவர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
கனிந்த தொழில் கனவு!
கோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
காபி தரும் உற்சாகம்
வடோதராவில் இரண்டு நண்பர்கள் 12 லட்சம் முதலீடு செய்து 2008-ல் காபி ஷாப் தொடங்கினர். இப்போது அவர்களுடைய காபிஷாப் நிறுவனம் இந்தியாவில் மிகவும் வேகமாக வளரும் நிறுவனம். 8.3 கோடி ரூபாய் ஆண்டுக்கு விற்பனை செய்கிறார்கள் என்கிறார் கவிதா கனன் சந்திரா
-
காகிதத்தில் மலர்ந்த கோடிகள்
வெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை