பழைய போன்களில் இருக்கிறது புதிய தொழில் வாய்ப்பு: கலக்கும் இளம் தொழிலதிபர்!
05-Feb-2023
By நரேந்திரா கௌசிக்
புதுடெல்லி
தெற்கு டெல்லிப்பகுதியில் ஒரு பெரிய செல்போன் கடைக்கு வெளியே பழைய போன்களை பழுதுநீக்கி விற்றவர் இன்று அதே தொழிலை 150 கோடிரூபாய் புரளும் பெரிய நிறுவனமாக மாற்றி இருக்கிறார். இதை எட்டே ஆண்டுகளில் நிகழ்த்தி இருக்கிறார்.
இன்று யுவராஜ் அமன் சிங், பழைய போன்களை விற்கும் தொழிலில் முக்கியமான நபராக இருப்பவர். அவர் தன் தொழிலின் ஆரம்ப நாட்களை நினைவுகூர்கிறார்.
|
டெல்லியில் சோனி எரிக்சன் கடைவாசலில் சாலையோரமாக ஒரு மேசையில் பழைய போன்களை விற்பனை செய்த யுவராஜ் அமன் சிங், இன்று 150 கோடி ரூபாய் நிறுவனம் ஒன்றுக்கு தலைவராக இருக்கிறார்.(படங்கள்: நவ்னிதா) |
“சாலையோரத்தில் ஒரு மேசையைபோட்டு போன்களை விற்க ஆரம்பித்தோம். கொஞ்ச நேரத்தில் பெரும் கூட்டம் சேர ஆரம்பித்தது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசைக் கூப்பிடவேண்டி இருந்தது,’’ என்கிறார் 34 வயதாகும் இந்த முதல் தலைமுறை தொழிலதிபர். தெற்கு டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ராக்கிங் டீல்ஸ் நிறுவனம் ஆண்டுக்கு 50,000 பழுதுநீக்கப்பட்ட பழைய போன்களை விற்கிறது. அதேபோல் பழைய டேப்லட்கள், பவர் பேங்குகள், மொபைல் போன் உபகரணங்கள் ஆகியவற்றையும் விற்கிறார்கள். டெக்னிக்ஸ் க்ரூப் ஆப் கம்பனிகள் என்ற குழுமத்தின் உப குழுமமாக ராக்கிங் டீல்ஸ் உள்ளது.
ஆப்பிள், சாம்சங், சோனி எரிக்சன், எல்ஜி, மைக்ரோமாக்ஸ், நோக்கியா, ஹெச்டிசி, சோனி, சியாமி, ப்ளாக்பெரி போன்ற நிறுவனங்களிடம் இருந்து திருப்பி வாங்கப்பட்ட, பெட்டியில் அடைக்கப்படாத, மற்றும் பழைய போன்களை வாங்கி அவற்றை சரிசெய்கிறார்கள். இதற்காக டெல்லி (15000 ச.அடி), பெங்களூரு (3000 ச.அடி) ஆகிய இடங்களில் தொழிற்சாலைகள் வைத்திருக்கிறார்கள். அத்துடன் நோய்டாவில் 5000 ச.அடி யூனிட் ஒன்றும் உள்ளது. இங்கே பழைய எலெக்ட்ரானிக் பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக சரிசெய்கிறார்கள். அவர்களின் மொத்த விற்பனையில் 10 சதவீதம் ஏற்றுமதியில் கிடைப்பதாக சிங் கூறுகிறார்.
ஆன்லைனிலும் டெல்லியில் இருக்கும் 16 கடைகளிலும் இந்த போன்களை வாரண்டியுடன் விற்கிறார்கள். புதிய போன்களைவிட 40 சதவீதம் குறைந்த விலையில் இவை விற்கப்படுகின்றன.
|
சிங் தலைமையில் ராக்கிங் டீல்ஸ் 200 பேர் வேலைபார்க்கும் நிறுவனமாக மாறி உள்ளது. |
டெக்னிக்ஸ் எலெக்ட்ரானிகஸ் பிரைவேட் லிமிடட் மற்றும் ராக்கிங் டீல்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிர்வாக இயக்குநரான சிங் இங்கிலாந்தில் மிடில்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் நிர்வாகவியல் படித்துள்ளார்.
அவர் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் தன் மைத்துனரின் வேர்ஹவுஸ் ஒன்றில் வேலை பார்த்தார். 2003-ல் இந்தியா திரும்பியதும் டாடா டெலிசர்வீசஸின் பிரான்சைஸ் ஒன்றை எடுத்தார்.
டாடா நிறுவனத்தின் கருவிகளை விற்பதிலும் டாடா ஸ்கை இணைப்புகளைக் கொடுப்பதிலும் சிறப்பாக செயல்பட்டாலும் இந்த புதிய பொருட்களை விற்பதில் லாபம் மிகக்குறைவாக இருப்பதைக் கண்டார்.
“டீலர்களே பெருமளவு லாபத்தைப் பெறுகிறார்கள். கீழே இருப்பவர்களிடம் அவர்கள் தார்மீக முறைப்படி நடந்துகொள்வதில்லை,’’ என்கிறார் சிங்.
2005-ல் முன்னாள் டாடா பணியாளர் ஒருவர், சோனி எரிக்சன் பணியாளர் ஒருவரை அறிமுகம் செய்வித்தார். அவர் சோனி எரிக்சனின் பழைய போன்களை விற்கும் வாய்ப்பைத் தந்தார்.
தெற்கு டெல்லியில் உள்ள சோனி எரிக்சன் கடையின் வாசலில் பழைய போன்களை விற்க ஆரம்பித்தார் சிங்.
|
பெங்களூரு, டெல்லி, நோய்டாவில் உள்ள ராக்கிங் டீல்ஸ் தொழிற்சாலைகளில் பழையபோன்களை சரிசெய்கிறார்கள் |
நல்ல வரவேற்பு இருந்தது. அதிலிருந்து சிங் திரும்பிப்பார்க்கவே இல்லை. “இதுதான் நான் தேடிக்கொண்டிருந்த தொழில் என்பதை உணர்ந்தேன். இதில் நல்ல லாபமும் இருந்தது,’’ என்கிறார்.
சாம்சங் நிறுவனத்துடன் 2008-ல் அவர்களின் பழைய போன்களை திரும்பப்பெறுவதற்காக ஒப்பந்தம் செய்துகொண்டார். அவற்றை சரிசெய்து ப்ளிப்கார்ட் மூலம் விற்றார். ராக்கிங் டீல்ஸ் உருவானது. முதல் ஆண்டிலேயே 20 கோடிக்கு விற்பனை. ஷாப் க்ளூஸ், இபே, ஸ்னாப் டீல், குயிக்கர், ஜங்க்லீ, ஸாப்பர் ஆகிய தளங்களிலும் இவர்களின் போன்கள் கிடைக்கின்றன.
அமெரிக்காவில் விற்பனைக்காக ஒரு பிரிவு வைத்துள்ளனர். வேறு சில நாடுகளுக்கும் விரிவு படுத்தும் திட்டம் உள்ளது. ராக்கிங் டீல்ஸ் நிறுவனம் 3 மாதம் முதல் ஒரு ஆண்டுவரை வாரண்டியுடன் பழைய போன்களை விற்கிறது. சுமார் 24 பரிசோதனைகளுக்குப் பின் அவை விற்பனைக்கு வருகின்றன.
இவை மூன்று பிரிவாக உள்ளன. ஏ (கீறல்கள் இல்லாதவை), பி (சிறு கீறல்கள் உள்ளவை), மற்றும் சி (ஒரளவு சிதைவு உள்ள போன்கள்) - விலையும் வேறுபடுகிறது. ப்யூச்சர்டயல், டெராஸிபார் போன்ற அமெரிக்க நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து போன்களை சரிசெய்வதில், சான்றளிப்பதில், அவர்களையும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.
டிடிடிசி கூரியர் நிறுவனத்துடனான ஒப்பந்தம் மூலமாக தங்களால் விற்கப்பட்ட பழைய போன்களை மறு பழுதுபார்ப்பதற்காக திரும்பப்பெறுகிறார்கள். 200 பேர் பணிபுரியும் நிறுவனமாக ராக்கிங் டீல்ஸ் வளர்ந்துள்ளது.
ப்ரேம் சிங் என்கிறவர்தான் தன் நிறுவனமான டெக்னிக்ஸில் நீண்டகாலமாகப் பணிபுரிகிறவர் என்கிற சிங், தன் நிறுவனத்தில் இருக்கும் மூத்த பணியாளர்களை அவர்களின் உழைப்புக்காகப் புகழ்கிறார்.
நிறுவனத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்தும் சிங்கின் அடுத்த இலக்கு ராக்கிங் டீல் என்கிற பிராண்டை பலப்படுத்துவதுதான். “நான் வாங்கி விற்கும் நிலையைக் கடந்துவிட்டேன். எங்கள் பிராண்டை மேலும் வலுப்படுத்துவதுதான் இப்போது முக்கியம்,’’ என்கிறார் அவர்.
|
ராக்கிங் டீல்ஸ் நிறுவனத்தின் பிராண்ட் இமேஜை வலுப்படுத்துவதும் பங்குகள் வெளியிடுவதும் சிங்கின் எதிர்கால திட்டங்கள் |
சிங் இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகள் நிறைந்த குடும்பத்தில் இருந்து வந்தவர். அவரது தாத்தா, அப்பா இருவருமே ஐபிஎஸ் அதிகாரிகள். தன் நிறுவனத்துக்கு இன்னும் மூன்று ஆண்டுகளில் பங்குகள் வெளியிடும் திட்டமும் வைத்திருக்கிறார் இவர்.
ஷாப்க்ளூஸ் இணையதளம் சமீபத்தில் நடத்திய சர்வே அதன் மொபைல் போன் வாங்கும் வாடிக்கையாளர்களில் 70 சதவீதம் பேர் குறைந்த விலையில் கிடைக்கும் பழுதுபார்க்கப்பட்ட பழைய போன்களையே வாங்க விரும்புவதாகத் தெரிவித்துள்ளது.
ராக்கிங் டீல்ஸ் வரும் காலங்களில் போன் சந்தையை குலுங்கச் செய்யும் என்றே தோன்றுகிறது.
அதிகம் படித்தவை
-
நாட்டுக்கோழி நாயகன்
ஐபிஎம், சிட்டிபேங்க் என்று பெருநிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்தவர் செந்தில்வேலா. இந்த உயர் பதவிகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு உள்நாட்டு கோழி இனங்களை மீட்டெடுக்கும் தீவிரத்துடன் கோழிப்பண்ணை தொடங்கி உயர்ந்திருக்கிறார். இரண்டே ஆண்டில் ஆண்டு வருமானம் 1.2 கோடிகளாக ஆகி உள்ளது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.
-
சவாலே சமாளி!
கல்லூரியில் நண்பர்கள் இல்லை என்ற சவாலை சந்தித்தவர் விக்ரம் மேத்தா. இப்போது நிகழ்வுகளை மேலாண்மை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். திருமண விழாக்களை ஒருங்கிணைப்பதில் பல சவால்களை சந்தித்து வெற்றிகரமான முன்னேறி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
நாற்பதிலும் வெல்லலாம்!
பெரும்பாலானோர் ஓய்வுபெறுவதைத் திட்டமிடும் வயதில்அதாவது 40 வயதைத் தாண்டிய நிலையில் கொல்கத்தாவைச்சேர்ந்த மூன்று பேர் தங்கள் பிஎப், கிராஜுட்டி பணத்தைப் போட்டுதொழில் தொடங்கினார்கள். ஆறு ஆண்டுக்குப் பின்னால் என்ன ஆனது? ஜி.சிங் எழுதும் கட்டுரை
-
கார் கழுவியவர், இன்று கோடீஸ்வரர்
ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கார் கழுவும் வேலையில் தொடங்கி, இப்போது குடிநீர் சுத்திகரிக்கும் ஆர்.ஓ தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார் பாலகிருஷ்ணா. 20 கோடி வர்த்தகத்துடன் நாட்டின் முதல் 20 ஆர்.ஓ தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது இவரது நிறுவனம். எஸ்.சாய்நாத் எழுதும் கட்டுரை
-
நிஜ ஹீரோ
கொல்கத்தாவில் சலவைத் தொழிலாளியின் மகனாகப் பிறந்த பிகாஷ், ஒரு கிரிக்கெட் வீரர் குடும்பத்தின் உதவியுடன், படித்து சமூகத்தில் உயர்ந்த இடத்தைத் தொட்டிருக்கிறார். பிரபலமான வங்கிகளில் பணியாற்றியவர் இப்போது பெருநிறுவனம் ஒன்றில் உயர்பதவியில் இருக்கிறார். சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை
-
இளம் சாதனையாளர்
பொறியியல் படித்திருந்தாலும் ஃபேஷன் துறை மீதுதான் நிதி யாதவுக்கு ஆர்வம். எனவே அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஃபேஷன் தொழிலை தொடங்கி ஆண்டுக்கு ரூ.137 கோடி வருவாய் தரும் நிறுவனமாக கட்டமைத்துள்ளார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை