தள்ளுவண்டிக் கடையில் தளராத சாதனை! ஒரு கோடி ரூபாய் வருவாயை எட்டும் இளைஞர்கள்
22-May-2025
By ஜி சிங்
கொல்கத்தா
கொல்கத்தாவில் 2014-ம் ஆண்டு த யெல்லோ ஸ்ட்ரா(‘The Yellow Straw’) என்ற ஒரு ஜூஸ் கடையை, தொடங்கிய பியூஷ் கன்காரியா மற்றும் விக்ரம் கின்வாசாரா இருவரின் வெற்றிகரமான பயணம் இது. இரண்டு ஆண்டுகள் எனும் குறுகிய காலகட்டத்துக்குள், அவர்கள் 6 சங்கிலித் தொடர் ஜூஸ் கடைகளைத் தொடங்கி, ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்ட வேண்டும் என்பதை நோக்கி முன்னேறுகின்றனர்.
நெருங்கிய நண்பர்கள் மற்றும் தொழில் பங்குதாரர்கள் மட்டுமின்றி இருவரும் நெருங்கிய உறவினர்கள். விக்ரம்(37), பியூஷ்(32) இருவருக்கும், குளிர்பானங்களைக் காட்டிலும் பழ ஜூஸ் வகைகளைக் குடிக்கும், உடல் நலனில் அக்கறை உள்ள வாடிக்கையாளர்களே இலக்கு. அந்த வாடிக்கையாளர்களின் ஆதரவு குவிகிறது!
|
த யெல்லோ ஸ்ட்ரா நிறுவனர்களான பியூஷ் கன்காரியா மற்றும் விக்ரம் கின்வாசாரா இருவரும் தங்கள் போட்டியாளர்களை விடவும் துணிச்சலான வித்தியாசமானவர்கள். கடைகளின் மூலமும், தள்ளுவண்டிகளிலும் விற்பனை செய்கின்றனர். (புகைப்படங்கள்: மோனிருல் இஸ்லாம் மல்லிக்)
|
இந்த இருவரும், தங்களின் போட்டியாளர்களிடம் இருந்து வித்தியாசப்பட்டு இருக்கின்றனர். எந்த ஒரு சிறப்பு அம்சங்களும் இன்றி, ஜூஸ் வகைகளை தள்ளுவண்டியில் விற்கின்றனர். கொல்கத்தாவின் முன்னணி கிளப்களில் ஒன்றான டோலிகுஞ்சே கிளப்பில் ஒரே ஒரு கடை வைத்துள்ளனர். அங்கு வார இறுதி நாட்கள், தேசிய விடுமுறை நாட்களில் மட்டும் ஜூஸ் விற்பனை.
“நான் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதில் ஆர்வம் உள்ளவன். தொடர்ந்து உடற்பயிற்சிகள் செய்து வருகிறேன். குழந்தைப் பருவத்தில் இருந்தே, உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும் காற்றடைக்கப்பட்ட குளிர்பானங்களைவிடவும், பழ ஜூஸ்களைக் குடிப்பதில் எனக்கு விருப்பம் உண்டு,” என்கிறார் விக்ரம். 37 வயதை விடவும், அவர் பார்ப்பதற்கு இளமையாகத் தோற்றம் அளிக்கிறார். உற்சாகத்துடன் இருக்கிறார்.
“என்னுடைய சொந்த நிறுவனத்தைத் தொடங்க வேண்டும் என்று நான் திட்டமிட்டபோது, அது உடல்நலத்தோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன்,” என்கிறார் மத்திய கொல்கத்தாவில் ஆர்.என்.முகர்ஜி சாலையில் உள்ள தமது கடையில் உட்கார்ந்தபடி.
|
தி யெல்லோ ஸ்ட்ரா, பைன்ஆப்பிள்,கிவி பழம்,பச்சை மிளகாய் ஆகியவை கலந்த சில்லி படாகா ஸ்ட்ரா என்பது போன்ற ஜூஸ் வகைகளையும் வழங்குகிறது.
|
மூன்று குழந்தைகள் கொண்ட குடும்பத்தில் இரண்டாவதாக பிறந்த விக்ரமுக்கு இயல்பாகவே வணிகத்தில் நாட்டம் உண்டு. அவரது தந்தை எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தொடர்பான வணிகம் செய்து வருகிறார். கொல்கத்தா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட சேத் ஆன்ந்த்ராம் ஜெய்பூரியா கல்லூரியில், இவர் வணிகத்தில் இளநிலை நிலைப்பட்டம் பெற்றிருக்கிறார்.
இதற்கு முன்பு அவர், மொபைல் போன் கடையை சொந்தமாக வைத்திருந்தார். இது தவிர, கார்மன்ட் தொழிலும் ஈடுபட்டார், அதற்கு முன்பாக 2004-ம் ஆண்டு ஒரு எம்.என்.சி முதலீட்டு நிறுவனத்தில் ரிலேஷன்ஷிப் எக்ஸ்க்யூட்டிவ் ஆகப் பணியில் சேர்ந்தார்.
“முதலீடு மற்றும் நிதி தொடர்பான ஒப்பந்தங்களில் நான் கற்றுக்குட்டியாகவே இருந்தேன். இந்த நிறுவனத்தில் சேர்ந்த பின்னர்தான், எனக்கு நிதி சந்தைகள் குறித்துப் பழக்கமானது. எப்படி தொழில் நடத்த வேண்டும் என்பதையும் கற்றுக்கொண்டேன்.”
“பத்து ஆண்டுகளுக்கு நெருக்கமாக அங்கு நான் பணியாற்றினேன். அங்கே நான் உதவி தலைவர் பதவிக்கான தகுதியை அடைவதற்கு முன்பாக இந்தியாவில் இருந்து அந்த நிறுவனம் தமது செயல்பாடுகளை முடிவுக்கு கொண்டு வர முடிவு செய்தது. எனவே, 2013-ம் ஆண்டு என்னுடைய பதவி விலகல் கடிதத்தைக் கொடுத்தேன்,” என்று நினைவு கூறுகிறார்.
இதன் தொடர்ச்சியாக,வேறு ஒரு எம்.என்.சி.நிறுவனத்தில் அவர் பணியில் சேர்ந்தார். “சொந்தத் தொழில் தொடங்குவதற்கான யோசனை, என் மனதில் ஏற்கனவே தோன்றியிருந்தது.”
இதற்கிடையே, பியூஷுக்கும் ஏறக்குறைய இதே போன்ற யோசனை தோன்றியது. அவர் அப்போது பெங்களூருவில் உள்ள ஒரு எம்.என்.சி. நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
“சாப்பாட்டுப் ப்ரியன் என்பதால், ஒரு உணவு சங்கிலித் தொடர் நிறுவனம் தொடங்க வேண்டும் என்று விரும்பினேன்,”என்கிறார்.
இருவரின் ஆர்வமும் ஒரே திசையில் இருந்ததால், விக்ரம், பியூஷ் இருவரும் ஒரு ஜூஸ் கடை வைப்பது என்று முடிவு செய்தனர். இந்த தொழிலில் இறங்குவதற்கு முன்பு, சில ஆய்வுகளில் ஈடுபட வேண்டும் என்று பியூஷ் யோசனை கூறினார்.
|
ஆரம்ப கால கட்டங்களில், பியூஷ், விக்ரம் இருவருமே ஜூஸ் தயாரித்து வாடிக்கையாளர்களுக்கு தாங்களே வழங்கி வந்தனர்.
|
அடுத்த 9 மாதங்கள் அவர், நாடு முழுவதும் ஒரு விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டெல்லி, லூதியானா, அகமதாபாத், அமிதசரஸ் போன்ற இடங்களில் உள்ள ஜூஸ் கடைகளுக்குச்சென்று பார்த்தார். பெங்களூரில் உள்ள ஜூஸி ஜங்ஷன், மும்பையில் உள்ள ஹஜ் அலி ஜூஸி சென்டர், பூஸ்ட் ஜூஸிபால் டெல்லி, ஜூஸி லாஞ்ச் அமிதசரஸ் ஆகிய புகழ்பெற்ற ஜூஸ்கடைகளுக்கும் சென்று பேசினர்,
”நல்ல யோசனைதான். ஆனால், இது கொல்கத்தா நகருக்குச் சரிப்படாது. சாலை ஓரத்தில் உள்ள ஜூஸ் கடைகளில் குறைவான விலையில் ஜூஸ் குடிப்பதையே மக்கள் விரும்புகின்றனர் என்ற கருத்தை முன்வைத்தனர். இதனால், கொஞ்சம் நம்பிக்கை குறைவு ஏற்பட்டது. அதே நேரத்தில், இந்த யோசனை கொல்கத்தா நகரில் நன்றாக எடுபடும் என்றும் நாங்கள் நம்பினோம்,” என்று நினைவு கூறுகிறார் பியூஷ்.
உணவு மற்றும் பானங்கள் விற்பனைத்துறையில் அனுபவம் பெற வேண்டும் என்பதற்காக ஒரு ஃபாஸ்ட் ஃபுட் சங்கிலித் தொடர் நிறுவனத்தில் பியூஷ் 9 மாதங்கள் வரை பணியாற்றினார்.
2014-ம் ஆண்டு, தலா 10 லட்சம் ரூபாய் முதலீட்டில், நிறுவனத்தைத் தொடங்க அவர்கள் திட்டமிட்டனர்.
|
த யெல்லோ ஸ்ட்ரா நிறுவனத்தின் கடைகளில் மொத்தம் 25 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
|
“பல ஆண்டுகளாக சேமித்து வந்த பணத்தை இதற்காக நாங்கள் பயன்படுத்தினோம். அந்தப் பணத்தைக் கொண்டு கல்கத்தா ஐகோர்ட் அருகே சிறிய 26 ச.அடி இடத்தை நாங்கள் வாடகைக்கு எடுத்தோம். அடுத்தவர்களிடம் இருந்து வித்தியாசமாக நாங்கள் செயல்பட வேண்டும் என்பதால், என்னென்ன ரெசிபிக்கள் விற்பனை செய்யலாம் என்பதை முடிவு செய்ய ஆலோசகர்களை நியமித்தோம்,” என்கிறார் விக்ரம்.
‘உங்களுடைய பழத்தை அருந்துங்கள்’ என்ற வாசகத்துடன், த யெல்லோ ஸ்ட்ரா என்று தங்களது கடைக்கு இருவரும் பெயர் வைத்தனர். “சர்க்கரை, தண்ணீர் அல்லது வேறு எந்த பொருட்களையும் எங்களது தயாரிப்பில் சேர்க்கக் கூடாது என்ற எங்களின் கொள்கையுடன், எங்களது நிறுவனத்தின் வாசகம் ஏற்றதாக இருந்தது. ஃபிரஷ்ஷான பழங்களை மட்டும் உபயோகித்து ஜூஸ் தயாரிக்க வேண்டும், அதைத்தவிர வேறு எதையும் செய்யக் கூடாது என்பதில் தீர்மானமாக இருந்தோம்,” என்கிறார் பியூஷ்.
அவர்கள் தங்களுடைய முதல் கடையை, இரண்டு ஊழியர்களுடன் 2014-ம் ஆண்டு மே 2-ம் தேதி தொடங்கினர். ”ஆரம்பத்தில் எல்லா வேலைகளையும் நாங்களே செய்தோம். ஜூஸ் தயாரிப்பது, அதனை வாடிக்கையாளர்களுக்குக் கொடுப்பது ஆகியவை. முதன் முதலாகக் கடை திறந்த அன்று, 85 கிளாஸ் ஜூஸ்களை விற்பனை செய்தோம்,” என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் விக்ரம்.
பிரஷ் ஆப்பிள், கொய்யா ஜூஸ் வகைகளை, ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லாமல் தயாரிக்கின்றனர். இதுதவிர, பைன் ஆப்பிள், கிவி பழம் மறும் பச்சை மிளகாய் ஆகியவற்றை கலந்து செய்யும் சுவையான சில்லி படாகா ஸ்ட்ரா போன்ற ஜூஸ்களையும் தயாரிக்கின்றனர். கீரை, ஆப்பிள், ஆரஞ்ச், பீட் ரூட் ஆகியவற்றை கலந்து பவர் பஞ்ச் ஸ்ட்ரா என்ற ஜூஸ், சுரைக்காய், மஞ்சள், இஞ்சி, பீட் ரூட் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றைக் கலந்து ஹெல்தி ஸ்ட்ரா உள்ளிட்ட ஜூஸ் வகைகளையும் தயாரிக்கின்றனர்.
ஜூஸ்களின் விலை 40 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை இருக்கிறது.
|
நாட்டில் உள்ள இரண்டாம் நிலை நகரங்களிலும், தங்கள் வணிகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பியூஷ், விக்ரம் இருவரும் திட்டமிட்டுள்ளனர்.
|
தொழில் வளர்ச்சியடைந்து வருவதை அடுத்து, மத்திய கொல்கத்தாவின் டல்ஹவுசி பகுதியில் 2015-ம் ஆண்டு 250 ச.அடி இடத்தை வாடகைக்குப் பிடித்தனர். “ப்ரஷ் ஜூஸ், மில்க் ஷேக்ஸ் தவிர டோஸ்ட் வகைகள், சான்ட்விட்ச் வகைகளையும் நாங்கள் விற்கத் தொடங்கினோம்,” என்கிறார் பியூஷ்.
“2015-16-ல் நாங்கள் 60 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டினோம். இப்போதைய நிதி ஆண்டில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் என்ற இலக்கைத் தாண்ட வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறோம். எங்களிடம் வரும் 70 சதவிகித வாடிக்கையாளர்கள் மீண்டும், மீண்டும் எங்கள் கடைகளுக்கு வருகின்றனர்,” என்று சொல்கிறார் விக்ரம்.
“எங்களிடம் 25 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். தினம்தோறும் 600 கோப்பை ஜூஸ்கள் விற்பனை செய்கிறோம். நாடு முழுவதும் இரண்டாம் நிலை நகரங்களில் எங்கள் தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறோம்,” என்று இருவரும் சொல்கின்றனர். ஆம் நிச்சயமாக, சர்க்கரை சேர்க்காமலே அவர்களுக்கு வெற்றி இனிக்கிறது.
அதிகம் படித்தவை
-
ஆர்வத்தால் அடைந்த வெற்றி
ஆர்வம் காரணமாக எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்க கற்றுக் கொண்ட கூடலிங்கம், அந்த திறனை முதலீடாகக் கொண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை தயாரிக்கத் தொடங்கினார். இன்றைக்கு வெற்றிகரமாக கொரோனா தொற்றை தடுக்கும் சாதனத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை
-
ஒளிமயமான பாதை
மாதம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ரப்பர் ஸ்டாம்ப் விற்கும் நபராக இருந்தவர் ஜிதேந்திர ஜோஷி. இந்தியாவுக்கு எல்.இ.டி தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியவர். இப்போது 8 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் எல்.இ.டி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார். மாசுமா பார்மால் ஜாரிவாலா எழுதும் கட்டுரை
-
கனவுகளைக் கட்டுதல்
தினக்கூலியின் மகனான விபி லோபோ கையில் 50 ரூபாயுடன் மங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து மும்பை வந்தவர். ஆறு ஆண்டுகளில் 75 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்கும் நிறுவனத்தை அவர் இப்போது நடத்துகிறார். இது எப்படி? சோமா பானர்ஜி எழுதுகிறார்
-
வென்றது கல்லூரிக் கனவு!
கார்த்திக் ஒரு பிரபலமான ஹோட்டல் குழுமத்தின் வணிக வாரிசு. அவருக்கு தாமே ஏதாவது சொந்தமாக செய்ய வேண்டும் என்ற உந்துதல். எனவே கல்லூரி படிக்கும்போதே பயண ஏற்பாட்டாளராக தொழில் செய்தார். படிப்பு முடிந்த உடன் தொழிலில் முழுமையாக மூழ்கி வெற்றி பெற்றார். சோஃபியா டானிஸ்கான் எழுதும் கட்டுரை.
-
குப்பையிலிருந்து கோடிகள்
அமெரிக்காவில் தூக்கி எறியப்படும் படுக்கை விரிப்புகளை ஜெய்தீப் சஜ்தே வாங்குவார். இந்தியாவில் உள்ள தொழிற்கூடத்தில் அவற்றை வண்ணமிகு பைகளாக மாற்றுவார். கடந்த ஆண்டு அவர் இத்தொழிலில் பெற்றது 4 கோடி ரூபாய்கள். பி சி வினோஜ்குமார் எழுதும் கட்டுரை
-
பீனிக்ஸ் பறவை!
போபாலை சேர்ந்த இளம்பெண் கனிகாவுக்கு இளம் வயதில் கேன்சர் நோய் ஏற்பட்டது. எனினும் அதை நினைத்து முடங்கி விடாமல், அதோடு போராடி வென்றவர், விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்கி ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டுகிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை