Milky Mist

Wednesday, 7 June 2023

நொறுக்குத் தீனியில் பத்துகோடி வருவாய்! நாக்பூர் இளைஞரின் சுவையான வெற்றிக்கதை!

07-Jun-2023 By சோபியா டேனிஷ்கான்
நாக்பூர்

Posted 09 Oct 2021

சுதர்ஷன் குங்கரின் வணிகம் இழப்பை சந்தித்து, அவரது குடும்பம் கடினமான சூழலில் சிக்கியபோது அவரது மகன் மணீஷ் குங்கருக்கு 11 வயதுதான்.

“எங்கள் குடும்பம் எளிய வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தது. ஆடம்பரமாக வாழவில்லை. எனவே இந்த பின்னடைவு எங்களது அன்றாட வாழ்வில் பிரதிபலிக்கவில்லை. ஆனால், எந்த ஒரு பெரிய செலவும், பெரும் கவலைக்கு காரணமாக இருந்தது,” என்று நினைவுகூர்கிறார்  மணீஷ் (40), நாக்பூரை சேர்ந்த ராயல் ஸ்டார் ஸ்நாக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர். பப்ஸ், நொறுக்குத் தீனிகள், பாஸ்தா, வறுக்க தயாராக உள்ள நொறுக்குத் தீனிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஸ்நாக்ஸ்களை வழங்கும் நிறுவனம் இது.

2007ஆம் ஆண்டு ரூ.6 லட்சம் முதலீட்டில் ராயல் ஸ்டார் ஸ்நாக்ஸ் நிறுவனத்தை மணீஷ் குங்கர் தொடங்கினார்

அடிமட்டத்தில் இருந்து அவரது குடும்பத்தை மணீஷ் எப்படி மீட்டமைத்தார் என்பதை நாம் பார்க்கப்போகிறோம்.

  நாக்பூரில் ஒரு கல்லூரியில் எம்பிஏ படித்து முடித்தவுடன், 26வது வயதில் ரூ.6 லட்சம் முதலீட்டில்  மக்காசோளத்தில் குச்சிகுச்சியாக தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனி தயாரிப்பு வர்த்தகத்தைத் தொடங்கி, இன்றைக்கு அதனை ரூ.10 கோடி ஆண்டு வருவாய் தரும் பிராண்ட் ஆக கட்டமைத்திருக்கிறார்.

  “நான் எம்பிஏ படித்த கல்வி நிறுவனம் புகழ்பெற்ற கல்லூரியாக இருக்கவில்லை. எனவே, எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கவில்லை. கூடப்பிறந்த இரண்டு சகோதரிகளுக்கு திருமணம் ஆனநிலையில் ஒரே மகனான நான், பெற்றோரை தனிமையில் தவிக்க விட்டு விட்டு, வேலைக்காக இன்னொரு நகருக்கு இடம் பெயர்ந்து செல்ல விரும்பவில்லை,” என்றார் மணீஷ். மணீஷ் தனது படிப்பு முழுவதையும் நாக்பூரிலேயே மேற்கொண்டார். 

முதலில் பிகாம் முடித்தார். பின்னர் எம்காம் முடித்த‍ அவர், 2006ஆம் ஆண்டு எம்பிஏ முடித்தார்.   வேலைக்குச் செல்லக்கூடாது என்று தீர்மானித்த பின்னர், வணிக வாய்ப்புகள் என்னென்ன இருக்கின்றன என்று ஆராயத் தொடங்கினார். கடலை மிட்டாய் உற்பத்தி பிரிவை அமைப்பது குறித்து தெரிந்து கொள்வதற்கான யோசனையுடன் தமிழ்நாட்டின் கோவை நகருக்கு 2007ஆம் ஆண்டு வந்தார். கோவையில் அப்போது மக்காசோள குச்சிகள் கொண்ட நொறுக்குத் தீனி மொத்த வியாபாரம் செய்யப்படுவதைப்  பார்த்த அவர், அதே போன்ற வணிகத்தை நாக்பூரில் தொடங்குவது என்று முடிவு செய்தார். 

  “என் நண்பர்கள், குடும்பத்தினரிடம் இருந்து ரூ.2.5 லட்சம் கடனாகப் பெற்றேன். பின்னர் வங்கியில் ரூ.4.5 லட்சம் கடன் வாங்கினேன். மக்காசோள குச்சிகள் தயாரிப்பதற்கான தொழிற்பிரிவை 1000 ச.அடியில் அமைத்தேன்,” என்றார் மணீஷ். தொடக்கத்தில் உள்ளூர் சந்தையை குறிவைத்தே செயல்பட்டார்.

மணீஷ் மனைவி வர்ஷா, அவரது வணிகத்தில் இன்றைக்கு முக்கியமான பங்கு வகிக்கிறார்


கேபி ஃபுட்ஸ் எனும் தனிநபர் உரிமை நிறுவனமாக பதிவு செய்யப்பட்ட அவரது நிறுவனம் முதலாண்டில் ரூ.11 லட்சம் ஆண்டு வருவாயைக் கொண்டிருந்தது.  மெதுவாக அவர் தயாரிப்பு பொருட்களின் எண்ணிக்கையை அதிகரித்தார். புதிய சந்தைக்குள் காலடி எடுத்து வைத்தார். குறைவான பணத்தை கொண்டு பல இடங்களுக்கு சுற்றி வந்தார்.

“நான் எப்போதும் உள்ளூர் பேருந்துகளில்தான் பயணிப்பது வழக்கம், மலிவான கட்டணம் கொண்ட விடுதிகளில்தான் தங்குவேன். ஆரம்ப காலகட்டங்களில் பணத்தை சேமிப்பதற்காக இது போன்று செயல்பட்டேன்,” என்றார் அவர்.

“தமிழ்நாடு, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள நகரங்களுக்கு நான் அடிக்கடி செல்வது வழக்கம். பெரும்பாலான பயணங்களின் போது வெறும் ரூ.5000 வைத்துக் கொண்டு பயணம், உணவு, தங்கும் செலவு எல்லாவற்றையும் சமாளித்திருக்கின்றேன்.”

ஆரம்பத்தில் அவர் தொழிலைத் தொடங்கியபோது, மூன்று ஊழியர்கள்தான் இருந்தனர். பணிச்சுமை அதிகரித்தபோது, உற்பத்தியை அதிகரித்தார். “இரவில் நான் தொழிற்சாலையிலேயே தங்குவது வழக்கம்,” என்றார். “அங்கு சில ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள். இரண்டு ஷிப்ட்களிலும் கண்காணிப்பாளர் நியமிக்கவில்லை. எனவே, நான் இரவில் தொழிற்சாலையிலேயே தங்கியிருந்து பணிகளை மேற்பார்வை செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தேன்.’’ 2008-ஆம் ஆண்டு ஒரு வாடகை இடத்தில் மக்காச்சோளத்தை பிரித்தெடுப்பதற்கான இன்னொரு பிரிவை உருவாக்கினார். ஆனால், பொருளின் தரம் நன்றாக இல்லை.  இதன் காரணமாக பெரும் இழப்பை சந்தித்ததால் 15 நாட்களுக்குள் கருவிகளை விற்று விட்டார். அடுத்த ஆண்டில் தன்னுடன் படித்த வர்ஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவரது வாழ்க்கை சந்தோஷம் என்ற திரும்புமுனையை நோக்கி்ச் சென்றது. “அவர் உண்மையிலேயே என்னுடைய அதிர்ஷ்ட தேவதை,” என்கிறார்.

“நாங்கள் இருவரும் ஒரே வகுப்பில் எம்பிஏ படித்தோம். ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாயைத் தொட்ட ஆண்டில் நாங்கள் திருமணம் செய்து கொண்டோம்.” எம்பிஏ முடித்தவுடன் வர்ஷா ஐசிஐசிஐ வங்கியில் பணியில் சேர்ந்திருந்தார். “திருமணத்துக்குப் பின்னர் அவர் அந்த வேலையை விட்டு விட்டார். இப்போது அவர் ராயல் ஸ்டார் ஸ்நாக்ஸ்  நிறுவனத்தில் பணியாற்றுகிறார். நிறுவனத்தின் இ-வணிக பிரிவை கவனித்துக் கொள்கிறார்,” என்றார். கடினமான சூழல்களில் எல்லாம் அவர் மணீஷ் உடன் இருந்திருக்கிறார்.

“என்னால் வங்கி தவணைகளைத் திருப்பிச் செலுத்த இயலாதபோது அதனை திருப்பி செலுத்துவதற்கு கூட அவர் எனக்கு உதவி செய்தார். எனக்கு மிகவும் தேவைப்பட்ட சமயங்களில் அவர் என்னோடு இருப்பதற்காகவும், எப்போதுமே அவருக்கு நான் நன்றிக்கடன்பட்டிருக்கின்றேன்.”

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு புதிய உற்பத்திப் பிரிவை மணீஷ் தொடங்கினார்


2009ஆம் ஆண்டு ஏப்ரலில் தனக்கு திருமணம் நடந்த அதே ஆண்டு அதே மாதத்தில் வறுக்க தயார் நிலையில் இருக்கும் ஸ்நாக்ஸ் வகைகளை அறிமுகம் செய்தார். இது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 2011ஆம் ஆண்டு தன்னுடைய உற்பத்திப் பிரிவை  தானியங்கி முறைக்கு மாற்றினார்.

“தொழிலாளர் பிரச்னை இருந்தது. எனவே, தானியங்கி முறை தேவையாக இருந்தது. இந்த காலகட்டத்தில் நாங்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதியைத் தொடங்கினோம்,” என்றார் மணீஷ். இப்போது, அவர்கள், ஏற்றுமதியைக் குறைத்துக்கொண்டு உள்ளூர் சந்தையில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.

“எங்களது மொத்த உற்பத்தியில் ஏற்றுமதி என்பது இன்றைக்கு வெறும் 5 சதவிகிதம் மட்டும்தான் உள்ளது,” என்றார். 2013-14ஆம் ஆண்டில் வணிகம் விரிவாக்கம் பெற்றது. பிரியான்ஸி இன்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் உருவாக்கப்பட்டது. (மகள் பிரியான்ஸி பிறந்தவுடன் நிறுவனத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டது. இப்போது அவருக்கு 11 வயது ஆகிறது.) ஒரு புதிய பிரிவை உருவாக்கி, மக்காசோள பப்ஸ் தயாரிக்க ஆரம்பித்தனர்.

இன்றைக்கு அவர்களுடைய புகழ்பெற்ற நொறுக்குத் தீனி வகைகளில் ஒன்றாக அது திகழ்கிறது. 2017ஆம் ஆண்டு வறுக்கத் தயார் நிலை 3டி நொற்றுக்குத்தீனிகள், பாஸ்தா போன்றவற்றை அவர்கள் தயாரிக்கத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகள் கழித்து கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு புதிய 12,000 ச.அடி கொண்ட தொழிலகத்தைக் கட்டத் தொடங்கினார் மணீஷ். இந்த திட்டத்தின் பணிகள் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் முடிவடைந்தது.

“முதல் கட்ட கொரோனா தொற்று கட்டுப்பாடுகளில் இருந்து புத்தம் புதிதாக வெளியே வந்தோம். வணிகத்தை முன்னெடுக்க முயற்சி செய்தோம். அப்போதுதான் நாங்கள் வேக வைப்பதற்கு தயாராக உள்ள பாஸ்தாவை தயாரிக்கும் நிறுவனத்தைத் தொடங்கினோம்,” என்றார். ரூ.5 முதல் ரூ.35 வரையிலும் பல்வேறு வகைகளில் அவர்களின் நொறுக்குத் தீனிகள் கிடைக்கின்றன. நாடு முழுவதும் உள்ள பல அங்காடிகளில் அவர்களது உணவுப்பொருட்கள் கிடைக்கின்றன.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், அவர்களுடைய நொறுக்குத்தீனி பாக்கெட்களில் பிராண்ட் பெயர் அவ்வளவாக வெளியே தெரியாத வகையில் அச்சிடப்பட்டுள்ளது.

நாக்பூரில் உள்ள ஒரு உற்பத்தி ஆலையில் ஊழியர்களுடன் மணீஷ் மற்றும் வர்ஷா  

பப் நொறுக்குத் தீனிகள், பாகார் பப்கள், ராகி பப்கள் போன்ற  உணவுப்பொருட்களின் வகைகள்  எப்போதுமே அவர்களுடைய உணவு பாக்கெட்களில் பெரிய எழுத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும். ராயல் ஸ்டார் ஸ்நாக்ஸ் என்ற பெயரானது எப்போதுமே சிறிய எழுத்து வடிவத்தில், அவ்வளவாக கண்ணில் படாதவாறு இருக்கும்.

“உணவுப் பொருள்தான் இங்கே கதாநாயகன்,” என இதில் உள்ள லாஜிக்கை விவரிக்கிறார் மணீஷ்.  “அரிசி, ராகி மற்றும் கம்பு போன்ற ஆரோக்கியமான உபப்பொருட்களைக் கொண்டு உருவாக்கப்பட்டவை இவை. ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை உருவாக்குவதுதான் இப்போதைக்கு என்னுடைய முதன்மையான தேர்வாக இருக்கிறது.”  

ஒரு குறிப்பிட்ட குழுவினருக்கு மட்டுமின்றி, பெரும் அளவிலான மக்களுக்கு ஆரோக்கியமான நொறுக்குத் தீனிகளை தயாரிக்கவே அவர் விரும்புகிறார். “இதர பிராண்ட்கள் எங்கள் விலையை விட மூன்று மடங்கு அதிக விலையில் வி்ற்பனை செய்யப்படுகின்றன. எனவே ஒரு சிறிய பாக்கெட் நொறுக்குத் தீனியானது,  ரூ.10 என்ற விலையில், எல்லோரும் வாங்குவதாக  இருக்க வேண்டும் என்று விரும்புகின்றேன்.”

தொழிலை விரிவாக்குவதற்கான தீவிரமான திட்டங்களைக் கொண்டிருக்கிறார். துணிகர முதலீட்டாளர்கள் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்ய தயாராக உள்ளனர் என்கிறார். நிறுவன மதிப்பு இப்போது ரூ.40 கோடி என்றும் சொல்கிறார்.

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • fashion success

    இளம் சாதனையாளர்

      பொறியியல் படித்திருந்தாலும் ஃபேஷன் துறை மீதுதான் நிதி யாதவுக்கு ஆர்வம். எனவே அந்த ஆர்வத்தின் அடிப்படையில் ஃபேஷன் தொழிலை தொடங்கி ஆண்டுக்கு ரூ.137 கோடி வருவாய் தரும் நிறுவனமாக கட்டமைத்துள்ளார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • He quit Rs 70,000 salaried job to start a business that is nearing Rs 10 crore turnover

    விளம்பரங்கள் தந்த வெற்றி

    நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து, மாதம் 70 ஆயிரம் ரூபாய் சம்பளத்துடன் பணியில் இருந்த தீபக், தமது வேலையை ராஜினாமா செய்து விட்டு டிஜிட்டல் விளம்பர நிறுவனம் தொடங்கினார். அவரது நிறுவனம் இந்த நிதியாண்டில் 10 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டுள்ளது. ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • Success of a NIFT student

    அசத்துகிறார் ஆன்சல்!

    மார்வாரி குடும்பம் ஒன்றில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் படித்தவரான இவர், தோல் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். 10 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொழிலைத் தொடங்கி இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். சோஃபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

  • Former child worker in a flower farm is now a rich man

    பூக்களின் சக்தி

    தெலுங்கானாவில் இருக்கும் தன் ஊரைவிட்டு பதினாறு வயதில் பொல்லாபள்ளி ஸ்ரீகாந்த் பெங்களூர் மலர்ப்பண்ணை ஒன்றில் வேலை பார்க்க வந்தார். மாத சம்பளம் 1000 ரூ. இன்று அவர் ஆண்டுக்கு 70 கோடி ருபாய்க்கு விற்பனை செய்யும் முன்னணி மலர் உற்பத்தியாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • steel man of jharkhand

    கரும்பாய் இனிக்கும் இரும்பு!

    ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குன்வந்த் சிங் மோங்கியா, தொழிலில் பல பின்னடைவுகளைச் சந்தித்தார். எனினும் மீண்டும் தொழிலில் சாதனை படைத்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தொழிலுக்கு அவரே விளம்பரத் தூதரும் கூட. குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை

  • How a man created a holiday homes website that makes Rs 52 crore annually

    பூட்டிக்கிடக்கும் வீடுகளும் பணம் தரும்

    பணக்காரர்களில் பெரும்பாலானோர் பிரபலமான சுற்றுலாதலங்களில், வீடுகள் கட்டிப்போட்டிருப்பார்கள். பெரும்பாலும் பூட்டியே இருக்கும் இந்த வீடுகளை வாடகைக்கு விட்டு வருவாய் ஈட்டலாம் என்று புதிய யோசனையைத் தந்து 52 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறார் ரோஷன். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை