Milky Mist

Saturday, 17 January 2026

ஐயாயிரம் ரூபாய் முதலீட்டில் ஆண்டுவருவாய் 15 கோடியைத் தரும் பிரியாணி கடை! சாஹா சகோதரர்களின் ‘ஆஹா’ வெற்றி!

17-Jan-2026 By பார்த்தோ பர்மன்
கொல்கத்தா

Posted 08 Jul 2021

காற்றில் கலந்து வருகிறது ஆவாதி பிரியாணியின் நறுமணம். அது நம்மை கொல்கத்தாவில் உள்ள பராக்பூரில் இருக்கும் தாதா பாவ்டி என்ற உணவகம். வாடிக்கையாளர்களால் நிரம்பி வழியும் அதற்குள் நம்மையும் இழுக்கிறது.

1980களில் இருந்து இந்த உணவகம் பிரியாணி பிரியர்களால் விரும்பப்பட்டு வருகிறது. அப்போது இளம் வயதில் இருந்த சஞ்சீவ் சாஹா, ராஜீவ் சாஹா இருவரும் வாயில் எச்சிலட் ஊர வைக்கும் இந்த மெனுவை தங்களது குடும்பத்துக்கு சொந்தமான 200 ச.அடி கொண்ட உணவகத்தில் அறிமுகம் செய்தனர். இந்த உணவகம் அவர்களின் தாத்தாவால் 1961 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகும்.

சஞ்சீவ் சாஹா(வலது) மற்றும் ராஜீவ் சாஹா இருவரும் தாதா பாவ்டி உணவகத்தில் பிரியாணியை 1986ஆம் ஆண்டு அறிமுகம் செய்தனர். அவர்களது வணிகம் விரைவாக வளர்ச்சியடையத் தொடங்கியது.(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு, தி வீக் எண்ட் லீடர்)

 “ இந்த வணிகத்தில்  நாங்கள் ரூ.5000 முதலீடு செய்தோம். பிரியாணி தயாரிப்பதற்காக சில பாத்திரங்களை வாங்கினோம். பாசுமதி அரிசி மற்றும் இறைச்சியும் வாங்கினோம். ஆரம்ப கட்டத்தில் தினமும் மூன்று கிலோ மட்டன் பிரியாணி செய்தோம்,” என்கிறார் ராஜீவ்.

1986ஆம் ஆண்டு அந்த கடையில் பிரியாணியை வழங்கத் தொடங்கியதற்குப் பின்னால் தாதா பாவ்டியின் பயணத்தை பற்றிப் பேசுகிறோம்.   இன்றைக்கு அவர்களுக்கு மூன்று கடைகள் இருக்கின்றன. மதிய உணவு நேரத்தில் அனைத்து கடைகளும் நிரம்பி வழிகின்றன.  தினமும் 700 கிலோ பிரியாணி சமைக்கின்றனர்.  மட்டன்  பிரியாணி ரூ.260 எனவும், சிக்கன் பிரியாணி ரூ.200 எனவும் விற்கின்றனர். தாதா பாவ்டி ஆண்டு வணிகம் இப்போது ரூ.15 கோடியைத் தொட்டுள்ளது. ஆண்டுதோறும் வளர்ச்சியடைந்து வருகிறது.  

அவர்களது வாடிக்கையாளர்களில் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் சவ்ரவ் கங்குலி உள்ளிட்ட பிரபலங்களும் அடக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவில் அமெரிக்க தூதரகத்தில் இருந்த அப்போதைய இந்தியாவுக்கான அமெரிக்காவின் தூதர் கிரேக் எல் ஹால் தனது குடும்பத்தினர், அமெரிக்க செனட்டர் ஜேமி டிராகன் ஆகியோருடன் அவர்கள் கடைக்கு வருகை தந்தார்.

தாதா பாவ்டியின் வெற்றியானது இரு சகோதரர்களின் கடின உழைப்பில் அடங்கியிருக்கிறது. அவர்கள் இந்த குடும்ப வணிகத்தை புதிய உயரத்துக்கு எடுத்துச் சென்றிருக்கின்றனர். அவர்களது தாத்தாவோ அல்லது தந்தையோ இதுவரை அடைந்திராத உயரத்துக்கு அதை எடுத்துச் சென்றனர். சஞ்சீவ் 12ஆம் வகுப்பு முடித்திருக்கிறார். அவரது சகோதரர் ராஜீவ் 10ஆம் வகுப்புக்கு பின்னர் படிக்கவில்லை. ஆனால், அவர்கள் தயாரிக்கும் பிரியாணி தரமாக இருப்பதை உறுதி செய்கின்றனர். தரமான  பிரியாணியை தயாரித்து, வாடிக்கையாளர்களுக்கு நல்ல முறையில் போதுமான அளவில் மீண்டும், மீண்டும் தேடி வரும் வகையில் வழங்குகின்றனர்.  

ஒவ்வொரு பிளேட் பிரியாணியும், 800 கிராம் பிரியாணி அரிசியும், 200 கிராம் மட்டன்(அல்லது சிக்கன்) இறைச்சியை கொண்டிருக்கிறது. மேலும் ஆவாதி பிரியாணிக்கே உரிய முறையில் ஒரு உருளைக்கிழங்கு அடங்கியதாக இருக்கிறது.
அப்போதைய கொல்கத்தா அமெரிக்க தூதர் கிரேக் எல் ஹால், தமது குடும்பத்தினருடன் தாதா பாவ்டி பிரியாணி கடையில் உணவு உண்கிறார்


தொடக்கத்தில் ரூ.11 க்கு ஒரு பிளேட் பிரியாணி விற்க தொடங்கியதாக ராஜீவ் கூறுகிறார். இறைச்சி மற்றும் இதர மூலப்பொருட்கள் விலை அடிக்கடி உயர்ந்ததால், உணவின் விலையையும் அதற்கேற்ப மாற்றி அமைத்தனர்.

பாரக்பூர் ரயில் நிலையம் அருகே கோஸ் பாரா சாலையில் முதல் உணவகத்தை அவர்களின் தாத்தா ராம்பிரசாத் 1961ஆம் ஆண்டு தொடங்கினார். பீகாரின் கிழக்கு சம்பாரான் மாவட்டத்தில் உள்ள மோதிஹரியில் இருந்து மனைவி மற்றும் தனது 6 குழந்தைகளுடன் அவர் கொல்கத்தாவுக்கு குடி பெயர்ந்தார்.   இந்த உணவகத்துக்கு பல ஆண்டுகளாக பெயர் ஏதும் வைக்கப்படவில்லை.

ஆரம்பத்தில் அவர்கள் உணவகத்தில் பருப்பு , ரொட்டி, காய்கறிகள்(சைவம்) உணவு வழங்கினர். 15 ஆண்டுகள் கழித்து ராம்பிரசாத்தின் மகன் தீரன் சஹா, உணவகத்தின் பொறுப்புகளை கையில் எடுத்தார். உணவகத்தில் மெனுக்களின் எண்ணிக்கையை அதிகரித்தார். அரிசி சாதம் முதல் மீன் கறி, சிக்கன் மற்றும் ஆட்டிறைச்சி ஆகியவற்றுடன் புதிய மெனுக்களை அறிமுகம் செய்தார்.   ஒரு கட்டத்தில் தீரன் மனைவி சந்தியா சாஹா அவருடன் இணைந்து செயல்பட்டார்.

இந்த தம்பதியால்தான் தாதா பாவ்டி என்ற பெயர் இந்த உணவகத்துக்குக் கிடைத்தது. (தாதா என்றால் சகோதரர் என்றும் பாவ்டி என்றால் மனைவி என்றும் வங்க மொழியில் பொருள் கொள்ளப்படுகிறது.) இதையடுத்து அவர்கள் உணவகம் தாதா பாவ்டி என்று அழைக்கப்பட்டது. தீரன் மற்றும் சந்தியா இருவரும் மேலும் இருவரைக்கொண்டு உணவகத்தை பராமரித்தனர். மற்றும் அவர்களின் குழந்தைகளான சஞ்ஜீவ், ராஜீவ் இருவரும் பள்ளி முடிந்து வந்த பின்னர் அவர்களுக்கு உதவிகள் செய்தனர்.

 “அப்போது சோதனையான காலகட்டங்கள்,” என சந்தியா நினைவு கூறுகிறார். “உணவின் சுவை மாறக்கூடாது என்பதால் நாங்கள் மசாலாக்களை கைகளால் உரல்களில் அரைத்துத் தயாரித்தோம். எங்களது இரண்டு மகன்களும் எங்களுக்கு உதவி செய்யத் தொடங்கினர்.”

 “உணவு பரிமாறுதல்,டேபிள்கள் துடைத்தல், பாத்திரங்கள் கழுவுதல் ஆகிய பணிகளை நாங்கள் செய்தோம். பெற்றோர்களுக்கு உதவுவது எங்களது கடமை என்று நாங்கள் கருதினோம். இது போன்ற வேலைகளை செய்யும்போது ஒருபோதும் அவமானமாக உணரவில்லை.” என்றார் ராஜீவ். அவர்கள் வாடிக்கையாளர்களுக்கு இரவு 11 மணி வரை பரிமாறுவார்கள். இது அவர்கள் படிப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என சஞ்சீவ் நினைவு கூர்கிறார்.

“அனைத்து கஷ்டங்களுக்கு இடையேயும் நாங்கள் எங்களது அடிப்படை கல்வியை கற்று முடித்தோம்,” என்கிறார். “நாங்கள் பாரக்பூரில் உள்ள டெபி பிரசாத் மேல் நிலைப் பள்ளிக்கு  சென்றோம். நான் 1987ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்தேன். ஆனால், ராஜீவ் 10ஆம் வகுப்புக்கு மேல் படிக்கவில்லை.”

தாதா பாவ்டி பிரியாணி பல ஆண்டுகளாக அதே ருசியை தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. இதற்கு சலீம் கான் என்ற அவர்களது முக்கியமான சமையலர்தான் காரணம். தங்களது கடைகளில் பிரியாணியை அறிமுகம் செய்த தில் இருந்து இந்த சமையலர்தான் பொறுப்பாளராக இருந்து வருகிறார்.


தாதா பாவ்டி உணகம் முன்பு குவிந்திருக்கும் வாடிக்கையாளர்கள்


சலீம் கான் கண்காணிப்பில் தினமும் 15-20  பெரிய பாத்திரங்களில் பிரியாணி தயாரிக்கப்படுகிறது. மட்டன், சிக்கன் பிரியாணி மற்றும் வெஜிடபிள் பிரியாணி ஆகியவற்றை தயாரிக்கின்றனர். மேலும் பல இந்திய சீன, முகல் உணவு வகைகளையும் தயாரிக்கின்றனர். தந்தூரி உணவுகளும் அவர்களது கடைகளில் கிடைக்கிறது. 

  சாஹா சகோதரர்கள் பாரக்பூரில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவது உணவகத்தைத் தொடங்கினர். 2019ஆம் ஆண்டு ஜூலை மாதம் சோத்பூரில் உணவகத்தை தொடங்கினர். அவர்களிடம் 35 பேர் பணியாற்றுகின்றனர்.

அவர்களின் உணவகத்தில் இருந்து 10  நிமிட தூரத்தில் உள்ள பாரக்பூரில் ஷியாமஸ்ரீ பாலியில் குடியிருக்கும் அவர்கள், இருவரும் இன்று மகிழ்ச்சியான, வசதியான மற்றும் மனநிறைவான வாழ்க்கை வாழ்கின்றனர்.

சஞ்ஜீவ் பயணம் செய்வதில் விருப்பம் உள்ளவர். அனைத்து ஐரோப்பிய நாடுகள், தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். ராஜீவ் செல்லப்பிராணிகள் மீது ஆர்வம் கொண்டவர். நாய், பல்வேறு வகை பறவைகள், கிளி ஆகியவற்றுடன் வீட்டில் ஒரு அற்புதமான மீன் காட்சியகமும் வைத்திருக்கின்றனர்.  

 இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சஞ்ஜீவுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். ராஜீவ்வுக்கு ஒரு மகள் உள்ளார்.  

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Call of Outsourcing

    தேடி வந்த வெற்றி

    மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சுஷாந்த் குப்தா, அவுட்சோர்ஸ் முறையில் பணிகளை செய்து கொடுக்க தம் வீட்டு படுக்கையறையில் ஒரு நிறுவனம் தொடங்கினார். இன்றைக்கு 141 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக அது வளர்ந்துள்ளது. சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • Winning through finding an opportunity

    குழந்தைகளுக்காக ஒரு தாயின் தேடல்

    பெருநிறுவனங்களில் பணியாற்றிய வருண், காஸால் என்ற இளம் தம்பதி மமா எர்த் என்ற இயற்கை உடல்நலப்பாதுகாப்பு பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். தங்கள் குழந்தையைப் போல தொழிலையும் நேசிக்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை.

  • This businessman sold vada pav and repaid Rs 55 lakh debt

    சுவையான வெற்றி

    மும்பையில் தொழில் பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்தாலும் முதல் தொழில்முயற்சியில் 55 லட்ச ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்தார் தீரஜ். அவர் கடனில் இருந்து மீண்டது வடா பாவ் விற்றுத்தான். பிசி வினோஜ்குமார் எழுதும் வெற்றிக்கதை

  • Innovating mind

    ஆர்வத்தால் அடைந்த வெற்றி

    ஆர்வம் காரணமாக எலெக்ட்ரானிக் சாதனங்களை பழுது நீக்க கற்றுக் கொண்ட கூடலிங்கம், அந்த திறனை முதலீடாகக் கொண்டு காற்று சுத்திகரிக்கும் சாதனத்தை தயாரிக்கத் தொடங்கினார். இன்றைக்கு வெற்றிகரமாக கொரோனா தொற்றை தடுக்கும் சாதனத்தை தயாரிக்கும் பணியில் இறங்கி உள்ளார். சோஃபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • Dustless paint! an innovative product

    ஆராய்ச்சி தந்த வெற்றி

    அதுல் அவரது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போது, தூசி பரவியதால், அவரது குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில்தான், தூசியில்லாத பெயிண்ட் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இப்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.

  • Home made food flowing unlimited

    வீட்டுச்சாப்பாடு

    சுவையான மட்டன் குழம்பு, ரத்தப் பொறியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், பிராய்லர் சிக்கன், நாட்டுக்கோழி சிக்கன் வகைகள், மீன் குழம்பு... ஆ... அம்புட்டும் அன்லிமிடட்! எங்கே எங்கே...? ஈரோடு மாவட்டம் சீனாபுரத்தில் ஒரு தம்பதி வீட்டிலேயே நடத்தும் புகழ்பெற்ற உணவகம் பற்றி உஷா பிரசாத் எழுதும் கட்டுரை