Milky Mist

Saturday, 9 December 2023

ஐயாயிரம் ரூபாய் முதலீடு; 25 கோடி ஆண்டு வருவாய்! அசத்தும் கோவை தம்பதி!

09-Dec-2023 By சோபியா டேனிஷ்கான்
கோவை

Posted 02 May 2021

பிரிதேஷ் ஆஷர் மற்றும் மேகா ஆஷர் இருவரும் குழந்தைப் பருவ நண்பர்களாக இருந்து   வாழ்க்கைத் துணையாக மாறியவர்கள். அவர்கள் மோசமான பொருளாதார நிலையில் இருந்தபோது சில சிறு தொழில்களில் ஈடுபட்டனர். அதில் ஒன்று அழகு சாதனைப் பொருட்களை வீட்டிலேயே தயாரிப்பது. வெறும் ரூ.5,000 முதலீட்டில் கடந்த 2014ஆம் ஆண்டு இதை கோவையில் தொடங்கினர்.  

ஒரு வேலைக்காரரை மட்டும் வைத்துக்கொண்டு தங்களது வீட்டின் சமையலறையில் தொடங்கிய ஜூஸி கெமிஸ்ட்ரி என்ற இந்த நிறுவனம் அடிமட்டத்தில் இருந்து வளர்ந்துள்ளது. “2020-21ஆம் ஆண்டின் ஆண்டு வருவாய் ரூ.25 கோடியைத் தாண்டியிருக்கிறது,” என்கிறார் பிரிதேஷ்.

பிரிதேஷ் ஆஷர் மற்றும் மேகா ஆஷர் இருவரும் ஜூஸி கெமிஸ்ட்ரியை தங்களது வீட்டு சமையலறையில் கடந்த 2014ஆம் ஆண்டில், ரூபாய் ஐயாயிரத்துடன் தொடங்கினர்(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

முகப்பரு, எண்ணெய் முடி, முடி உதிர்தல், கருவளையங்கள் (கண்களுக்குக் கீழே) மற்றும் நிறமி உதடுகள்  ஆகியவற்றுக்காக ஜூஸி கெமிஸ்ட்ரி 100க்கும் அதிகமான இயற்கையான பொருட்களை வழங்குகிறது.  

ஆனால், இந்த தம்பதிக்கு வாழ்க்கை எப்போதும் ரோஜா படுக்கையாக இருந்ததில்லை. திருமணத்துக்கு இரண்டு ஆண்டுகள் கழித்து 2011 ஆம் ஆண்டு பிரிதேஷ்,  கேன்சர் நோயால் அவரது தந்தையை இழந்திருந்தார். அப்போது அவருக்கு 26 வயதுதான் ஆகியிருந்தது.  அவரது தந்தை பெட்ரோலிய பொருட்கள் உற்த்தி செய்யும் பிரிவு வைத்திருந்தார். ஆனால், பிரிதேஷ் தன்னாலான எவ்வளவோ முயற்சிகள் செய்தும் அவரால் தந்தையின் வணிகத்தைத் தொடரமுடியவில்லை.

“முதலீடுகளை அதிகரிக்க முயன்றும், பங்குதாரர் தேடியும் சில இயந்திரங்களை விற்பதற்கும்  முயன்று 18 முறை தோற்றேன்,” என தனது கடந்த கால வாழ்கையின் கடினமான பக்கங்களைத் திரும்பி பார்க்கிறார். 

   “என்னுடைய சொந்த வாழ்க்கையில் அதே போல தொழிலிலும் இது ஒரு சிக்கலான காலகட்டம். நாங்கள் திவால் நிலையின் விளிம்புக்கே சென்றோம். ஒரு கட்டத்தில் என்னுடைய குடும்பம் மிகவும் மோசமான நிலைக்குச் சென்றதால், அத்தியாவசிய தேவைகளுக்கே சிரமப்பட வேண்டி இருந்தது.”  

வீட்டு செலவுகளுக்கு உதவுவதற்காக, மேகா ஆஷர் திருமணங்களுக்காக மெகந்தி போடும் ஆர்டர்களை எடுத்து செய்து வந்தார். பின்னர் அவர் மேகா ஆஷர் டிசைன் என்ற பெயரில் டிசைனர் சேலைகளை விற்பனை செய்வதற்காக சிறிய பொட்டிக் நிறுவனத்தைத் தொடங்கினார்.    “அவர் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வருவாய் ஈட்டுபவராக மாறினார்,” என்கிறார் பிரிதேஷ்.

திவால் ஆன நிலையில் கடன்களை அடைப்பதற்காக சொத்துக்களை விற்றார். “ 11 வங்கி கடன்கள்  மற்றும் தனியார் கடன்களை அடைத்து அப்பாவின் வணிகத்தில் இருந்து வெளியேறினேன்.”
பிரிதேஷ் மற்றும் மேகா இருவரும் பள்ளியில் சந்தித்துக் கொண்டனர். பின்னர் இருவரும் வாழ்க்கையில் இணைந்ததுடன் தொழிலிலும் பங்குதாரர் ஆயினர்


பின்னர் பிரிதேஷ் வாய்ப்புகளைத் தேடத் தொடங்கினார். “ குடும்ப வணிகத்தை தொடரப்போகிறேன் என்று நினைத்தபடி இருந்தால்  அது இல்லாத நிலையில் என்ன செய்வது என தெரியவில்லை.  மேகாவுக்கு உதவி செய்யத் தொடங்கினேன். வாய்ப்புகளைத் தேடி துபாயில் 30 நாட்கள் இருந்தேன். ஆனால், அது எதுவும் பலனளிக்கவில்லை.”  

 “கல்லூரி காலகட்டத்தில் இருந்தே எங்களுக்கு ஆஸ்திரேலியாவில் நண்பர்கள் இருந்தால், நாங்கள் அங்கே குடியேறுவது என்று திட்டமிட்டோம், ஆனால், அப்போது என்னுடைய தாயாரை கவனித்துக் கொள்ள வேண்டியிருந்தது, ” என்ற பிரிதேஷ். வாழ்க்கையின் அந்த காலகட்டத்தில் அனைத்து கதவுகளும் மூடியிருப்பது போல தோன்றியதைப் பிரதிபலித்தார். 

   மேகா பொட்டிக், நன்றாக போய் கொண்டிருந்தது. அவர்களின் வாழ்வாதாரங்களில் ஒன்றாக மாறியது. பொட்டிக் நிறுவனத்துக்கான ஆடைகள் மும்பையில் தயாரிக்கப்பட்டன. மும்பையில் இருக்கும் மேகாவின் தாய் அதைக் கவனித்துக் கொண்டார். ஆடைகளை அங்கிருந்து கோவைக்கு பார்சலில் அனுப்பினார்.  மேகா ஆஷரின் வடிவமைப்பு ஆண்டுக்கு 30 சதவிகித லாபத்துடன் ரூ.25 லட்சம் ஈட்டியது.

 “ஆடைகள் மீது எப்போதுமே எனக்கு ஒரு பேரார்வம் உண்டு. தனித்தன்மை வாய்ந்த ஆடைகளை அணிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. திருமணத்துக்குப் பின்னர் கோவைக்கு இடம் பெயர்ந்தபோது என்னுடைய உடை அலங்காரத்துக்கு  எப்போதுமே பாராட்டுகள் கிடைத்தன. அப்போதுதான் என்னுடைய சொந்த அடையாளத்தில் தயாரிக்கப்பட்ட ஆடைகளின் வழியே ஒரு தொழில் வாய்ப்பு இருப்பதை உணர்ந்தேன்,” என்றார் மேகா  

   “இந்த யோசனை  பலனளித்தது. வர்த்தகம் சூடுபிடிக்கத் தொடங்கியது.. இதன் முழுமையான பணியிடம் மும்பையில் அமைக்கப்பட்டது. இந்த பயணத்தில் என் தாயும் ஒரு அங்கமாக இருந்தார். இந்த பொட்டிக் நிறுவனத்தின் பின்புலமாக அவர் இருக்கிறார்.”   மேகாவின் தோலில் முகப்பருக்கள் தோன்றியபோது அதற்காக சில இயற்கை களிம்புகள் இருக்கிறதா என்று தேடினர். அச்சமயம் இயற்கையான தோல்பாதுகாப்பு பொருட்கள் உற்பத்தியை தொடங்குவது என்ற யோசனை இந்தத் தம்பதிக்கு உதித்தது.  

இயற்கை பொருட்கள் அல்லது அல்லது பதப்படுத்தப்பட்ட இயற்கை பொருட்கள் கொண்டவை என்ற அடையாளத்துடன் வந்த பொருட்கள் பெட்ரோலியப் பொருட்களைக்  கொண்டிருந்தன. தந்தையின் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் இது போன்ற ரசாயனங்களை உபயோகித்திருப்பதால் அது குறித்து பிரிதேஷ் அறிந்திருந்தார்.
குடும்பம் கடினமான சூழலை சந்தித்தபோது நிதி நிலையை சரி செய்ய  மேகா  தொடங்கிய பொட்டிக் நிறுவனம் உதவியது. 


இயற்கை தேயிலை என்று சொல்லப்பட்ட பொருட்களிலும் ரசாயனம் இருந்ததை பிரிதேஷ் கண்டுபிடித்தார். “அந்த பொருட்களில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து அதனை உபயோகிக்கும் போது மக்களுக்குத் தெரிவதில்லை,” என்ற அவர், தொடர்ந்து, “இயற்கை பொருட்கள் என்று சொல்லிக் கொண்ட குழந்தைகள் பாதுகாப்புப் பொருட்கள் கூட ரசாயனங்களைக் கொண்டிருந்தன,” என்றார்.  

பிரிதேஷ், மேகா இருவரும் கோவையில் உள்ள சர்வதேச விடுதியுடன் கூடிய சின்மயா பள்ளியில் சந்தித்துக் கொண்டனர். 11ஆம் வகுப்புப் படிக்கும்போது இருவரும் ஒரே வகுப்பில் படித்தனர். அதனால் இருவரும் நண்பர்கள் ஆயினர்.

 “நாங்கள் சந்தித்தபோது, நான் தனிமை விரும்பியாக இருந்தேன். என்னைச் சுற்றி எப்போதும் புத்தகங்கள் மற்றும் இசைதான் தான் இருக்கும். அப்போது பள்ளியில் பிரிதேஷ் மிகவும் பிரபலமான மாணவராக  இருந்தார்,” என்றார் மேகா.

 “ நாங்கள்  எதிரெதிர் துருவங்கள் என்றவகையில் ஈர்க்கப்பட்டோம் என்று நினைக்கின்றேன். ஒவ்வொரு முறை அவரோடு இருக்கும்போது இதுதான் எனக்குத் தோன்றும்.”    பின்னர் இருவரும் ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிப்த் பல்கலைக்கழகத்தில் படித்தனர். பிரிதேஷ் வணிக மேலாண்மையில் இளநிலை முடித்தார். மேகா குற்ற அறிவியல் மற்றும் நீதிமுறைகள் படிப்பை  தேர்வு செய்தார்.

 2009ஆம் ஆண்டு மேகா 25 வயதாக இருந்தபோது, பிரிதேஷ் 26வது வயதில் இருந்தார். இருவீட்டாரின் பெற்றோர் ஆசிர்வாதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.  “நாங்கள் ஜூஸி கெமிஸ்ட்ரியை தொடங்கியபோது, அதற்கான வரவேற்பு நன்றாக இருந்தது,” என்கிறார் மேகா.

ஆனால் உண்மையான சவால் என்பது அதுவரையிலும் சந்தையில் இருந்த உற்பத்தி பொருட்களை விடவும் இது பார்ப்பதற்கும் உணர்வதற்கும் வித்தியாசமாக இருப்பதை  வாடிக்கையாளர்களுக்கு விவரிப்பதுதான்.

  “வணிகம் வளர்வதற்கு இந்த உத்தி மட்டுமே தேவை என்பதை நாங்கள் விரைவிலேயே புரிந்து கொண்டோம். எந்தவித போலியான வாக்குறுதிகளையும் அளிக்கவில்லை. என்னென்ன பொருட்களால் தயாரிக்கப்படுகின்றன. ஏன் இந்த உப பொருட்கள் முக்கியத்துவமாக இருக்கின்றன. எப்படி இந்த பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்பதுதான் எங்களுடைய வலிமை,” என்றார் மேகா.   

 ஆரம்ப காலகட்டங்களில் முகநூல் மற்றும் வாட்ஸ் ஆப் வாயிலாக தங்களது தயாரிப்புப்பொருட்களை விற்றனர். 2016ஆம் ஆண்டு அமேசானில் அவர்கள் தங்கள் பொருட்களைப் பட்டியலிட்டனர்.   அதே ஆண்டில், அவர்களின் பொருட்களைப் பற்றிய ஒரு வீடியோ வைரல் ஆனது. அதன் காரணமாக வணிகம் அதிகரித்தது.

“எங்களால் போனை கீழே வைக்கவே முடியவில்லை. தொடர்ந்து ஆர்டர்கள் வந்த வண்ணம் இருந்தன. டெல்லி, மும்பை மற்றும் இதர மெட்ரோ நகரங்களிலும் நாங்கள் கண்காட்சிகளில் பங்கேற்றோம்,” என்றார் பிரிதேஷ்.  



பிரித்தேஷ் ஈகோசெர்ட் எனும் சான்றிதழ் பெறுவதை, அதிகம் செலவு பிடிக்கும் என்றாலும் அவசியமானது எனக் கருதினார்.

2017ஆம் ஆண்டு வீடு-அலுவலகத்தை நகரின் இதயப்பகுதியான 2.500 ச.அடி கொண்ட இடத்துக்கு மாற்றினர். அங்கே அவர்கள் தங்களது அலுவலகம் மற்றும் தொழிற்சாலையை அமைத்திருக்கின்றனர்.  

அவர்கள் தங்களுடைய பொருட்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்த ஈகோசெர்ட் சான்றிதழும் கிடைக்கப்பெற்றனர். (அழகுசாதன இயற்கை பொருட்களுக்கான சான்றிதழை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த அமைப்பான சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஈகோசெர்ட்(Ecocert) வழங்குகிறது)    “இதற்கு அதிகம் செலவாகும். சான்றிதழ் பெறுவதும் சிக்கலானது. அதனை நாம் பெற வேண்டும் என்று சொன்னேன். எங்களுடைய கட்டமைப்பை முழுமையாக மாற்றவும் அந்த நிறுவனம் கோரியது.”    “அவர்கள், நீண்டதொரு சரிபார்ப்பு பட்டியலை வைத்திருந்தனர். நாங்கள் யாரிடம் இருந்து மூலப்பொருட்களைப் பெறுகின்றோம் என்பது உள்ளிட்ட விவரங்களை அவர்கள் கேட்டனர். இந்த சான்றிதழ் செயல்பாடுகள் முடிவடைய இரண்டு ஆண்டுகள் பிடித்தது,” என்று பகிர்ந்து கொள்கிறார் பிரிதேஷ்.   

இன்றைக்கு ஜூஸி கெமிஸ்ட்ரி உலகின் பல இடங்களில் இருந்து மூலப்பொருட்களை இறக்குமதி செய்கிறது. அவர்களுக்கு 35 நாடுகளில் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். 6 நாடுகளில் விநியோகஸ்தர்கள் உள்ளனர்.

அவர்களுடைய பொருட்களின் விலையானது குறைந்தபட்சம் உதட்டுக்கான தைலம்  ரூ.350 முதல் அதிகப்படியாக தலைமுடிக்கான எண்ணெய் ரூ.1,100 ஆகியவற்றுக்கு இடையேதான் இருக்கிறது.  

2019ஆம் ஆண்டு  ரூ.4.5 கோடியை முதலீடாகப் பெற்றனர். புதிய இயந்திரங்கள் அமைப்பதற்கும், உற்பத்தி வசதியை விரிவாக்கம் செய்யவும் அதனைப் பயன்படுத்தினர்.  

கோவிட் ஊரடங்கானது, அவர்களின் வளர்ச்சியை மெதுவாக்கி இருக்கிறது. “நாங்கள் எங்கள் உற்பத்தியை நிறுத்தி விட்டோம். ஊழியர்களை தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தும் வகையில் சானிடைசர்களை தயாரிக்கத் தொடங்கினோம்,” என்கிறார் பிரிதேஷ்.

   “நான் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவ் ஆக இருக்கின்றேன். தோல் பராமரிப்பில் தாங்களே செய்துகொள்ளும் வகையில் குறிப்புகளை கொடுக்கின்றேன். என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 80 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆக அதிகரித்திருக்கிறது. இப்போது நாங்கள் மீண்டும் உற்பத்தியை தொடங்கி இருக்கின்றோம்,” என முடிக்கிறார் பிரிதேஷ்.  

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Chasing the dream

    கனவைப் பின்தொடர்ந்தவர்!

    சிறுவயதில் இருந்தே தனியாக ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்த இளம் பெண் ஆஸ்தா.  படிப்பு முடித்த பின்னர் நிகழ்ச்சிகள் நடத்தித்தரும் நிறுவனத்தைத் தொடங்கினார். நல்ல சம்பளம் தரும் வேலையை விட்டு விலகி அவர் ஆரம்பித்த இந்த முயற்சிக்கு  அவரது சகோதரரும் கை கொடுக்க, வெற்றியை தொட்டார் ஆஸ்தா. குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.

  • The success story of a Small-Time Contractor who became owner of a Rs 2,000 Crore Turnover Company

    போராடு, வெற்றிபெறு!

    பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே வீட்டின் வசதியின்மை காரணமாக சின்ன சின்ன வேலைகள் செய்து சம்பாதித்துப் படித்தவர் ஹனுமந்த் கெய்க்வாட். இன்று பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்யும் பிவிஜி என்ற நிறுவனத்தை நடத்துகிறார். ஆண்டு வருவாய் 2000 கோடி! தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை

  • Even in your forties you can start a business and become a successful businessman

    நாற்பதிலும் வெல்லலாம்!

    பெரும்பாலானோர் ஓய்வுபெறுவதைத் திட்டமிடும் வயதில்அதாவது 40 வயதைத் தாண்டிய நிலையில் கொல்கத்தாவைச்சேர்ந்த மூன்று பேர் தங்கள் பிஎப், கிராஜுட்டி பணத்தைப் போட்டுதொழில் தொடங்கினார்கள். ஆறு ஆண்டுக்குப் பின்னால் என்ன ஆனது? ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • The success story of an entrepreneur who started a restaurant chain serving traditional Odiya food

    ஒடிஷாவின் சுவை!

    ஒரிய பாரம்பரிய உணவுவகைகளைப் பரிமாறும் எந்த உணவகமும் ஒடிஷாவில் இல்லை என்பதை உணர்ந்த டெபஷிஷ் பட்நாயக், தானே முன் வந்து 2001-ல் உணவகங்களை ஆரம்பித்தார். 7 உணவகங்கள் , 6 கோடி ரூபாய் விற்பனை என்று வளர்ந்திருக்கும் அவரது பாதையை விவரிக்கிறார் ஜி சிங்

  • Madurai to Tokyo

     ஒலிம்பிக் தமிழச்சி!

    மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமமான சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி. பள்ளி அளவிலான தடகளப் போட்டிகளில் விளையாட்டு போக்கில் பங்கேற்றார். அவருக்குள் மறைந்திருந்த திறமையை கண்டறிந்த பயிற்சியாளர் கண்ணன் ரேவதியை ஒலிம்பிக் தகுதி வரை உயர்த்தியிருக்கிறார். ரேவதியின் வெற்றிக்கதை.    

  • Kamath started Rs 108 crore turnover icecream business with Rs 1 lakh

    ஐஸ்க்ரீம் மனிதர்

    கர்நாடகாவில் ஏழையாக பிறந்து, மும்பையில் இன்றைக்கு பிரபலமான ஐஸ்க்ரீம் நிறுவனத்தின் தலைவராக ஆகியிருக்கிறார் காமத். இது மண்குடிசையில் இருந்து மாளிகைக்கு உயர்ந்திருக்கும் அவரது வாழ்க்கைக் கதை. சோமா பானர்ஜி எழுதும் கட்டுரை