Milky Mist

Saturday, 27 July 2024

50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி 324 கோடி ரூபாய் குவித்த இயற்கை ஆர்வலரின் வெற்றிப்பயணம்!

27-Jul-2024 By சோபியா டேனிஷ் கான்
புதுடெல்லி

Posted 15 Sep 2018

ஹர்பிரீத் சிங் மல்ஹோத்ரா, இயற்கையை, வனவிலங்குகளை ரசிப்பதை வெறுமனே மனதுக்குள் மட்டும் மறைத்து வைத்துக்கொளவில்லை. தம்முடைய நிறுவனத்துக்கு டைகர் லாஜிஸ்டிக்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். அலுவலகத்தில், அவருடைய கேபினுக்கு அடுத்து, ஒரு சிறிய தோட்டத்தை உருவாக்கி உள்ளார். அங்கே பல சந்திப்புகளை அவர் நடத்தி இருக்கிறார்.

“புலி எனக்கு விருப்பமான விலங்கு,” என்று நம்மிடம் தெரிவிக்கும் ஹர்பிரீத், 50 ஆயிரம் ரூபாயில் தொடங்கிய, 324 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் தமது லாஜிஸ்டிக் நிறுவனத்தைக் கவனிப்பது, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலர்களின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு சமீபத்தில் சென்று வந்தது போன்றவற்றில் ஈடுபடுதல் என தமது வேலைக்கும், பொழுதுபோக்குக்கும் இடையே நேரத்தைப் பகிர்ந்து கொள்கிறார். தவிர, உற்சாகமான புத்தக வாசிப்பாளராகவும் இருக்கிறார். அமிஷ் திரிபாதி எழுதிய Sita: Warrior of Mithila என்ற புத்தகத்தை இப்போது வாசித்து வருகிறார். 

https://www.theweekendleader.com/admin/upload/07-09-18-08tiger1.jpg

ஹர்பிரீத் சிங் மல்ஹோத்ரா, கடந்த 2000ம் ஆண்டு டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்கு முன்பு ஒரு பங்குதாரர் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஆனால், அது எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்பதால் அதனை மூடிவிட்டார்(புகைப்படங்கள்: நவ்நிதா)


டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், சர்வதேச லாஜிஸ்டிக் வசதிகளைத் தருகிறது. ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளையும் செய்து தருகிறது. போக்குவரத்து, நூலாடை தொழில் நிறுவனங்கள்தான் அவரது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. பிலோஸா  இன்டஸ்ட்ரீஸ், சங்கம் டெக்ஸ்டைல், யமஹா, ஹோண்டா, பஜாஜ் ஆட்டோ, எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் இருந்து டி.ஆர்.டி.ஓ., இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் உள்ளிட்ட முக்கிய வாடிக்கையாளர்கள் அவரது நிறுவனத்துக்கு உள்ளனர்.

ஹர்பிரீத் மேஜைக்குப் பின்னால், சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பழம்பொருளான துப்பாக்கி, அவரது கவுரவமிக்க சொத்தாகும். அவரது குடும்பத்துக்கும் ராணுவத்துக்கும் உள்ள தொடர்புக்கு அது சாட்சியாக இருக்கிறது.

“இந்த துப்பாக்கி என்னுடைய தாத்தாவினுடையது. அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். என்னுடைய தந்தை கடற்படையில் பணியாற்றினார். நான் கடற்படைக்குச் சொந்தமான பள்ளியில் படித்தேன்,” என்கிறார் 46 வயதாகும் ஹர்பிரீத். இந்த பின்னணியில் வளர்ந்ததால்தான் அவர் இப்படி நல் ஒழுக்கங்களுடன் இருக்கிறார். எனினும், அவர் ஒரு வித்தியாசமான வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பகத்சிங் கல்லூரியில் 1992-ம் ஆண்டு வணிகத்தில் ஹர்பிரீத் பட்டம் பெற்றார். பின்னர் 1993-ம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் கல்வி நிறுவனத்தில் ஃபாரின் டிரேடில் டிப்ளமோ முடித்தார். 

படிப்பு முடித்த பின்னர், ஒரு சிறிய லாஜிஸ்டிக் நிறுவனத்தில் முதன்முதலாக ஹர்பிரீத் வேலைக்குச் சேர்ந்தார். 700 ரூபாய் சம்பளத்தில் அங்கே அவர்  பணியாற்றினார். மூன்று ஆண்டுகள் கழித்து, ஹீரோ குழுமத்தில், அவர்களின் லாஜிஸ்டிக் பிரிவில் மூத்த நிர்வாகியாக அடுத்த சில ஆண்டுகள் பணியாற்றினார்.

பின்னர், ஒரு நண்பருடன் சேர்ந்து சொந்தமாக ஒரு லாஜிஸ்டிக் நிறுவனம் தொடங்கினார். ஆனால், அது சரியாகப் போகவில்லை. எனவே இரண்டு வருடத்தில் அதனை மூடி விட்டார். குறைந்தகாலமே நீடித்த பங்குதாரர் நிறுவனம் பற்றிக் குறிப்பிடும் போது, “உங்கள் பங்குதாரருக்கு இலக்குகள் பெரிதாக இல்லாதபோது, வளர்ச்சி என்பது குறுகியதாக இருக்கும். நான் தனியாக இருந்திருந்தால், நல்லதோ அல்லது கெட்டதோ எது நடந்தாலும், என்னுடைய முடிவின் படியே இருந்து இருக்கும் என்று உணர ஆரம்பித்தேன்.”

டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், 2000 ஆண்டில்  தொடங்கினார். எட்டு பேர்களைக் கொண்ட சிறிய குழுவுடன் நிறுவனம் செயல்படத் தொடங்கியது. தொழில் நன்றாக நடைபெற ஹர்பரீத்தின் பழைய வாடிக்கையாளர்கள், அவருக்கு முன் பணம் கொடுத்து ஆதரவு அளித்தனர். முதல் ஆண்டில் மட்டும், அவரது நிறுவனம் 40 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியது. 

https://www.theweekendleader.com/admin/upload/07-09-18-08tiger2.jpg

டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. ஹர்பிரீத் கேபினுக்குப் பின்னால் உள்ள அலமாரியில் விருதுகள் வைக்கப்பட்டுள்ளன.


‘செலவை குறைப்பதற்கான சுய முயற்சி’ என்ற சாதனைக்காக ஜில்லெட் இந்தியாவிடம் இருந்து அடுத்த ஆண்டே அவரது நிறுவனம் விருது பெற்றது. இதுதான் அவரது நிறுவனம் பெற்ற முதல் விருது. அவரது இதயத்தில் இதற்குச் சிறப்பான இடம் இருக்கிறது. அதே போல, அது அவரது அலுவலகத்திலும் சிறப்பான இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடின உழைப்பின் மூலம் நிறுவனத்தைக் கட்டமைத்தார். அவரது கடின உழைப்பு, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப்  பல விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது. கண்டெய்னர் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் சார்பில், வட இந்தியாவில் நம்பர் ஒன் கஸ்டம் ஹவுஸ் ஏஜென்ட்(No 1 Custom House Agent) என்ற விருது 2003, 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில் கிடைத்தது. 2018-ம் ஆண்டில் அசோசெம் (ASSOCHAM)அமைப்பால், சிறந்த லாஜிஸ்டிக் நிறுவனமாக டைகர் லாஜிஸ்டிக்ஸ் தேர்வு செய்யப்பட்டது.

இன்றைக்கு, டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 259 வாகனங்களை இயக்கி வருகிறது. 375 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் 14 முக்கிய நகரங்களில் அவர்களின் அலுவலகங்கள் உள்ளன. தவிர சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்டிலும் அலுவலகங்கள் உள்ளன.

2013-ம் ஆண்டில் தமது நிறுவனத்துக்கு ஹர்பிரீத் பங்குகள் வெளியிட்டார். இதன் மூலம் அவரது நிறுவனம் பப்ளிக் லிமிடெட் நிறுவனம் ஆனது. அதே ஆண்டில் ஆண்டு வருவாய் 100 கோடி ரூபாயைத் தொட்டது. “சரியான தொழிலுக்கு, சரியான நேரம் என்று ஒன்று இருக்கும். டைகர் லாஜிஸ்டிக்ஸ்  நிறுவனத்துக்கும் அது சரியான நேரமாக இருந்தது,” என்கிறார் ஹர்பிரீத். “இப்போதைய ஆண்டு வருவாய் 324 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால், இன்னும் நாங்கள் சாதிக்கவில்லை என்று உணர்கிறேன். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. அடுத்த நிதி ஆண்டில் 400 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். 2023-ம் ஆண்டில் 1000 கோடி ரூபாய் இலக்கை எட்ட வேண்டும்.”

https://www.theweekendleader.com/admin/upload/07-09-18-08tiger3.jpg

ஹர்பிரீத் தம் ஊழியர்களை பெரும் சொத்தாக கருதுகிறார்.  பதிலுக்கு தங்கள் நிறுவனத்தின் உரிமையாளரை ஊழியர்களும் நேசிக்கின்றனர் என்பதை அவர்களின் புன்னகை முகங்களே வெளிப்படுத்துகின்றன.


ஹர்பிரீத் தமது ஊழியர்களை புகழ்கிறார். அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சொல்கிறார். அந்த ஊழியர்களில் 70 சதவிகிதம் பேர், ஹர்பிரீத்தின் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுகின்றனர்.

“சிறந்த செயல் திறன் கொண்டவர்களுக்கு முறையாக சம்பள உயர்வு கொடுக்கிறேன். மாதம் தோறும் மீட்டிங் நடத்தி, நடப்பு நிலவரங்களைப் பெறுவேன். நிறுவனம் சந்திக்கும் எந்த ஒரு பிரச்னை பற்றியும் நேரடியாகக் கையாளுவேன்,” என்று பகிர்ந்து கொள்கிறார் ஹர்பிரீத். முக்கியமான வாடிக்கையாளர்களை, அவரே நேரில் சந்திக்கிறார். எதிர்காலத்துக்கான வாடிக்கையாளர்களையும் கண்டறிகிறார்.

அவரது தொழில்முறை, நேர்மை ஆகியவை பல வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில், ராணுவ சேவைகளையும் கையாண்டு வருகிறார். இந்த நிறுவனம், அண்மையில் இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் இருந்து நீர்மூழ்கி கப்பல்களை இறக்குமதி செய்தது. 2009-ம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து இந்திய விமானப்படைக்காக வான் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு முறை விமானத்தை (Airborne Warning and Control System (AWACS))இறக்குமதி செய்தது.

இந்த தொழிலில் ஹர்பிரீத் முக்கியமான சவாலாக நினைப்பது பணப்புழக்க விவகாரம்தான். வேலை முழுவதுமாக முடிந்த உடன்தான் வாடிக்கையாளர்கள் பணம் தருகின்றனர். “பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தொடர்ச்சியாக இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டோம்,” என்று வருத்தப்படுகிறார் ஹர்பிரீத்.

https://www.theweekendleader.com/admin/upload/07-09-18-08tiger4.jpg

ஹர்பிரீத் கடின உழைப்பை நம்புகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டு்ம். பின்னணியில் தெரியும் பழமைவாய்ந்த துப்பாக்கி அவரது தாத்தாவுக்குச் சொந்தமானது.


தமது மனைவி பீனுவின் ஆதரவு குறித்து ஹர்பரீத் பெருமையுடன் கூறுகிறார். அவரது மகள் ஷிமர் மல்ஹோத்ரா கல்லூரியில் படிக்கிறார். அவரது மகன் இஷ்கான் மல்ஹோத்ரா 12-ம் வகுப்புப் படிக்கிறார். குழந்தைகள் தமது நிறுவனத்தில் சேர்ந்து, தமது கனவை நனவாக்கும் வகையில் டைகர் லாஜிஸ்டிக் நிறுவனத்தை 1000 கோடி ரூபாய் நிறுவனமாக மாற்ற உதவி செய்வார்கள் என்று  நம்புகிறார். 


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • The success story of a Small-Time Contractor who became owner of a Rs 2,000 Crore Turnover Company

    போராடு, வெற்றிபெறு!

    பள்ளியில் படிக்கும்போதிலிருந்தே வீட்டின் வசதியின்மை காரணமாக சின்ன சின்ன வேலைகள் செய்து சம்பாதித்துப் படித்தவர் ஹனுமந்த் கெய்க்வாட். இன்று பிரதமர் இல்லம், நாடாளுமன்றம் உள்ளிட்ட பல இடங்களில் ஒப்பந்தப் பணிகளை எடுத்துச் செய்யும் பிவிஜி என்ற நிறுவனத்தை நடத்துகிறார். ஆண்டு வருவாய் 2000 கோடி! தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை

  • Madurai to Tokyo

     ஒலிம்பிக் தமிழச்சி!

    மதுரை மாவட்டத்தின் சின்னஞ்சிறிய கிராமமான சக்கிமங்கலத்தை சேர்ந்தவர் ரேவதி. பள்ளி அளவிலான தடகளப் போட்டிகளில் விளையாட்டு போக்கில் பங்கேற்றார். அவருக்குள் மறைந்திருந்த திறமையை கண்டறிந்த பயிற்சியாளர் கண்ணன் ரேவதியை ஒலிம்பிக் தகுதி வரை உயர்த்தியிருக்கிறார். ரேவதியின் வெற்றிக்கதை.    

  • toilet business

    புதுமையின் காதலன்!

    அபிஷேக் நாத்தை பல்மருத்துவப் படிப்பதற்காக குடும்பத்தினர் பெங்களூரு அனுப்பினர். அவரோ ஏழு மாதங்களுக்குள் படிப்பில் இருந்து விலகிவிட்டார். ஹோட்டல் மேனேஜ் மெண்ட் முடித்து கேட்டரிங் நடத்தி தோல்வியடைந்தார். இப்போது லூ கஃபே எனும் சங்கிலித்தொடர் கஃபேவை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை.

  • How did daily wager son become crorepati

    கனவுகளைக் கட்டுதல்

    தினக்கூலியின் மகனான விபி லோபோ கையில் 50 ரூபாயுடன் மங்களூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து மும்பை வந்தவர். ஆறு ஆண்டுகளில் 75 கோடி ரூபாய் வர்த்தகம் செய்திருக்கும் நிறுவனத்தை அவர் இப்போது நடத்துகிறார். இது எப்படி? சோமா பானர்ஜி எழுதுகிறார்

  • He slept in the railway platform. Today he owns Rs 100 crore turnover company

    பயணங்கள் முடிவதில்லை!

    அவர் ரஜினிகாந்த் போல ஒரு சூப்பர்ஸ்டார் ஆகவேண்டும் என்ற கனவுடன் சென்னைக்கு வந்தவர். ஆனால் பசித்த இரவுகளும் பிளாட்பார தூக்கமும்தான் காத்திருந்தன. பி சி வினோஜ் குமார், இன்று 100 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் நிறுவன உரிமையாளரைச் சந்திக்கிறார்.

  • Flying top

    பீனிக்ஸ் பறவை!

    போபாலை சேர்ந்த இளம்பெண் கனிகாவுக்கு இளம் வயதில் கேன்சர் நோய் ஏற்பட்டது. எனினும் அதை நினைத்து முடங்கி விடாமல், அதோடு போராடி வென்றவர், விமான போக்குவரத்து நிறுவனம் தொடங்கி ஆண்டுக்கு ரூ.150 கோடி வருவாய் ஈட்டுகிறார். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை