Milky Mist

Thursday, 9 October 2025

50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கி 324 கோடி ரூபாய் குவித்த இயற்கை ஆர்வலரின் வெற்றிப்பயணம்!

09-Oct-2025 By சோபியா டேனிஷ் கான்
புதுடெல்லி

Posted 15 Sep 2018

ஹர்பிரீத் சிங் மல்ஹோத்ரா, இயற்கையை, வனவிலங்குகளை ரசிப்பதை வெறுமனே மனதுக்குள் மட்டும் மறைத்து வைத்துக்கொளவில்லை. தம்முடைய நிறுவனத்துக்கு டைகர் லாஜிஸ்டிக்ஸ் என்று பெயர் வைத்திருக்கிறார். அலுவலகத்தில், அவருடைய கேபினுக்கு அடுத்து, ஒரு சிறிய தோட்டத்தை உருவாக்கி உள்ளார். அங்கே பல சந்திப்புகளை அவர் நடத்தி இருக்கிறார்.

“புலி எனக்கு விருப்பமான விலங்கு,” என்று நம்மிடம் தெரிவிக்கும் ஹர்பிரீத், 50 ஆயிரம் ரூபாயில் தொடங்கிய, 324 கோடி ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டும் தமது லாஜிஸ்டிக் நிறுவனத்தைக் கவனிப்பது, உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மலர்களின் பள்ளத்தாக்குப் பகுதிக்கு சமீபத்தில் சென்று வந்தது போன்றவற்றில் ஈடுபடுதல் என தமது வேலைக்கும், பொழுதுபோக்குக்கும் இடையே நேரத்தைப் பகிர்ந்து கொள்கிறார். தவிர, உற்சாகமான புத்தக வாசிப்பாளராகவும் இருக்கிறார். அமிஷ் திரிபாதி எழுதிய Sita: Warrior of Mithila என்ற புத்தகத்தை இப்போது வாசித்து வருகிறார். 

https://www.theweekendleader.com/admin/upload/07-09-18-08tiger1.jpg

ஹர்பிரீத் சிங் மல்ஹோத்ரா, கடந்த 2000ம் ஆண்டு டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தைத் தொடங்கினார். இதற்கு முன்பு ஒரு பங்குதாரர் நிறுவனத்தை நடத்தி வந்தார். ஆனால், அது எதிர்பார்த்தபடி செயல்படவில்லை என்பதால் அதனை மூடிவிட்டார்(புகைப்படங்கள்: நவ்நிதா)


டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம், சர்வதேச லாஜிஸ்டிக் வசதிகளைத் தருகிறது. ஏற்றுமதியாளர் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு போக்குவரத்து வசதிகளையும் செய்து தருகிறது. போக்குவரத்து, நூலாடை தொழில் நிறுவனங்கள்தான் அவரது நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக இருக்கின்றன. பிலோஸா  இன்டஸ்ட்ரீஸ், சங்கம் டெக்ஸ்டைல், யமஹா, ஹோண்டா, பஜாஜ் ஆட்டோ, எல்.ஜி. எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் பாதுகாப்புத் துறையில் இருந்து டி.ஆர்.டி.ஓ., இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் உள்ளிட்ட முக்கிய வாடிக்கையாளர்கள் அவரது நிறுவனத்துக்கு உள்ளனர்.

ஹர்பிரீத் மேஜைக்குப் பின்னால், சுவரில் மாட்டப்பட்டிருக்கும் பழம்பொருளான துப்பாக்கி, அவரது கவுரவமிக்க சொத்தாகும். அவரது குடும்பத்துக்கும் ராணுவத்துக்கும் உள்ள தொடர்புக்கு அது சாட்சியாக இருக்கிறது.

“இந்த துப்பாக்கி என்னுடைய தாத்தாவினுடையது. அவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். என்னுடைய தந்தை கடற்படையில் பணியாற்றினார். நான் கடற்படைக்குச் சொந்தமான பள்ளியில் படித்தேன்,” என்கிறார் 46 வயதாகும் ஹர்பிரீத். இந்த பின்னணியில் வளர்ந்ததால்தான் அவர் இப்படி நல் ஒழுக்கங்களுடன் இருக்கிறார். எனினும், அவர் ஒரு வித்தியாசமான வழியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் பகத்சிங் கல்லூரியில் 1992-ம் ஆண்டு வணிகத்தில் ஹர்பிரீத் பட்டம் பெற்றார். பின்னர் 1993-ம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் ஃபாரின் டிரேட் கல்வி நிறுவனத்தில் ஃபாரின் டிரேடில் டிப்ளமோ முடித்தார். 

படிப்பு முடித்த பின்னர், ஒரு சிறிய லாஜிஸ்டிக் நிறுவனத்தில் முதன்முதலாக ஹர்பிரீத் வேலைக்குச் சேர்ந்தார். 700 ரூபாய் சம்பளத்தில் அங்கே அவர்  பணியாற்றினார். மூன்று ஆண்டுகள் கழித்து, ஹீரோ குழுமத்தில், அவர்களின் லாஜிஸ்டிக் பிரிவில் மூத்த நிர்வாகியாக அடுத்த சில ஆண்டுகள் பணியாற்றினார்.

பின்னர், ஒரு நண்பருடன் சேர்ந்து சொந்தமாக ஒரு லாஜிஸ்டிக் நிறுவனம் தொடங்கினார். ஆனால், அது சரியாகப் போகவில்லை. எனவே இரண்டு வருடத்தில் அதனை மூடி விட்டார். குறைந்தகாலமே நீடித்த பங்குதாரர் நிறுவனம் பற்றிக் குறிப்பிடும் போது, “உங்கள் பங்குதாரருக்கு இலக்குகள் பெரிதாக இல்லாதபோது, வளர்ச்சி என்பது குறுகியதாக இருக்கும். நான் தனியாக இருந்திருந்தால், நல்லதோ அல்லது கெட்டதோ எது நடந்தாலும், என்னுடைய முடிவின் படியே இருந்து இருக்கும் என்று உணர ஆரம்பித்தேன்.”

டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தை 50 ஆயிரம் ரூபாய் முதலீட்டில், 2000 ஆண்டில்  தொடங்கினார். எட்டு பேர்களைக் கொண்ட சிறிய குழுவுடன் நிறுவனம் செயல்படத் தொடங்கியது. தொழில் நன்றாக நடைபெற ஹர்பரீத்தின் பழைய வாடிக்கையாளர்கள், அவருக்கு முன் பணம் கொடுத்து ஆதரவு அளித்தனர். முதல் ஆண்டில் மட்டும், அவரது நிறுவனம் 40 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் ஈட்டியது. 

https://www.theweekendleader.com/admin/upload/07-09-18-08tiger2.jpg

டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது. ஹர்பிரீத் கேபினுக்குப் பின்னால் உள்ள அலமாரியில் விருதுகள் வைக்கப்பட்டுள்ளன.


‘செலவை குறைப்பதற்கான சுய முயற்சி’ என்ற சாதனைக்காக ஜில்லெட் இந்தியாவிடம் இருந்து அடுத்த ஆண்டே அவரது நிறுவனம் விருது பெற்றது. இதுதான் அவரது நிறுவனம் பெற்ற முதல் விருது. அவரது இதயத்தில் இதற்குச் சிறப்பான இடம் இருக்கிறது. அதே போல, அது அவரது அலுவலகத்திலும் சிறப்பான இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

கடின உழைப்பின் மூலம் நிறுவனத்தைக் கட்டமைத்தார். அவரது கடின உழைப்பு, தொடர்ந்து மூன்று ஆண்டுகளாகப்  பல விருதுகளைப் பெற்றுக் கொடுத்தது. கண்டெய்னர் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தின் சார்பில், வட இந்தியாவில் நம்பர் ஒன் கஸ்டம் ஹவுஸ் ஏஜென்ட்(No 1 Custom House Agent) என்ற விருது 2003, 2004 மற்றும் 2005ம் ஆண்டுகளில் கிடைத்தது. 2018-ம் ஆண்டில் அசோசெம் (ASSOCHAM)அமைப்பால், சிறந்த லாஜிஸ்டிக் நிறுவனமாக டைகர் லாஜிஸ்டிக்ஸ் தேர்வு செய்யப்பட்டது.

இன்றைக்கு, டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 259 வாகனங்களை இயக்கி வருகிறது. 375 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்தியாவில் 14 முக்கிய நகரங்களில் அவர்களின் அலுவலகங்கள் உள்ளன. தவிர சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்டிலும் அலுவலகங்கள் உள்ளன.

2013-ம் ஆண்டில் தமது நிறுவனத்துக்கு ஹர்பிரீத் பங்குகள் வெளியிட்டார். இதன் மூலம் அவரது நிறுவனம் பப்ளிக் லிமிடெட் நிறுவனம் ஆனது. அதே ஆண்டில் ஆண்டு வருவாய் 100 கோடி ரூபாயைத் தொட்டது. “சரியான தொழிலுக்கு, சரியான நேரம் என்று ஒன்று இருக்கும். டைகர் லாஜிஸ்டிக்ஸ்  நிறுவனத்துக்கும் அது சரியான நேரமாக இருந்தது,” என்கிறார் ஹர்பிரீத். “இப்போதைய ஆண்டு வருவாய் 324 கோடி ரூபாயாக இருக்கிறது. ஆனால், இன்னும் நாங்கள் சாதிக்கவில்லை என்று உணர்கிறேன். இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது. அடுத்த நிதி ஆண்டில் 400 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்ட வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். 2023-ம் ஆண்டில் 1000 கோடி ரூபாய் இலக்கை எட்ட வேண்டும்.”

https://www.theweekendleader.com/admin/upload/07-09-18-08tiger3.jpg

ஹர்பிரீத் தம் ஊழியர்களை பெரும் சொத்தாக கருதுகிறார்.  பதிலுக்கு தங்கள் நிறுவனத்தின் உரிமையாளரை ஊழியர்களும் நேசிக்கின்றனர் என்பதை அவர்களின் புன்னகை முகங்களே வெளிப்படுத்துகின்றன.


ஹர்பிரீத் தமது ஊழியர்களை புகழ்கிறார். அவர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் என்று சொல்கிறார். அந்த ஊழியர்களில் 70 சதவிகிதம் பேர், ஹர்பிரீத்தின் நிறுவனத்தில் 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றுகின்றனர்.

“சிறந்த செயல் திறன் கொண்டவர்களுக்கு முறையாக சம்பள உயர்வு கொடுக்கிறேன். மாதம் தோறும் மீட்டிங் நடத்தி, நடப்பு நிலவரங்களைப் பெறுவேன். நிறுவனம் சந்திக்கும் எந்த ஒரு பிரச்னை பற்றியும் நேரடியாகக் கையாளுவேன்,” என்று பகிர்ந்து கொள்கிறார் ஹர்பிரீத். முக்கியமான வாடிக்கையாளர்களை, அவரே நேரில் சந்திக்கிறார். எதிர்காலத்துக்கான வாடிக்கையாளர்களையும் கண்டறிகிறார்.

அவரது தொழில்முறை, நேர்மை ஆகியவை பல வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொண்டுள்ளன. இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவெனில், ராணுவ சேவைகளையும் கையாண்டு வருகிறார். இந்த நிறுவனம், அண்மையில் இந்திய கடற்படைக்காக ரஷ்யாவில் இருந்து நீர்மூழ்கி கப்பல்களை இறக்குமதி செய்தது. 2009-ம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து இந்திய விமானப்படைக்காக வான் எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு முறை விமானத்தை (Airborne Warning and Control System (AWACS))இறக்குமதி செய்தது.

இந்த தொழிலில் ஹர்பிரீத் முக்கியமான சவாலாக நினைப்பது பணப்புழக்க விவகாரம்தான். வேலை முழுவதுமாக முடிந்த உடன்தான் வாடிக்கையாளர்கள் பணம் தருகின்றனர். “பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது தொடர்ச்சியாக இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டோம்,” என்று வருத்தப்படுகிறார் ஹர்பிரீத்.

https://www.theweekendleader.com/admin/upload/07-09-18-08tiger4.jpg

ஹர்பிரீத் கடின உழைப்பை நம்புகிறார். வாழ்க்கையில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டு்ம். பின்னணியில் தெரியும் பழமைவாய்ந்த துப்பாக்கி அவரது தாத்தாவுக்குச் சொந்தமானது.


தமது மனைவி பீனுவின் ஆதரவு குறித்து ஹர்பரீத் பெருமையுடன் கூறுகிறார். அவரது மகள் ஷிமர் மல்ஹோத்ரா கல்லூரியில் படிக்கிறார். அவரது மகன் இஷ்கான் மல்ஹோத்ரா 12-ம் வகுப்புப் படிக்கிறார். குழந்தைகள் தமது நிறுவனத்தில் சேர்ந்து, தமது கனவை நனவாக்கும் வகையில் டைகர் லாஜிஸ்டிக் நிறுவனத்தை 1000 கோடி ரூபாய் நிறுவனமாக மாற்ற உதவி செய்வார்கள் என்று  நம்புகிறார். 


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Money in Refurbished Mobiles

    பழசு வாங்கலையோ! பழசு!

    பழைய பொருட்களை வாங்கும் பழக்கம் இந்தியர்களுக்கு உண்டு. இதுதான் கொல்கத்தாவை சேர்ந்த சதனிக் ராயின் மூலதனமாக உருவானது. ஆம், அவர் பழைய மொபைல்களை புதுப்பித்து ஆன்லைனில், உத்தரவாதத்துடன் விற்பனை செய்து அசத்துகிறார். குர்விந்தர் சிங் எழுதும் கட்டுரை

  • Food for night

    இரவுக் கடை

    கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.

  • Fresh Juice Makers

    சர்க்கரை இல்லாமல் இனிக்கிறதே!

    தள்ளுவண்டியில் ஜூஸ் கடை வைத்தால் வாழ்க்கையில் முன்னேற முடியுமா? முடியும் என்று நிரூபித்திருக்கின்றனர் கொல்கத்தாவின் இரண்டு இளைஞர்கள். சர்க்கரை சேர்க்காமல் அவர்கள் தயாரிக்கும் ஜூஸ் விற்பனையில் ஒரு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் இலக்குடன் அவர்கள் நடைபோடுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை

  • with amla cultivation, he is making money grow on trees

    பணம் காய்க்கும் மரங்கள்

    மரத்தில் பணம் காய்க்குமா? ஆம், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் சிங் என்கிற தொழிலதிபரின் பண்ணையில் உள்ள நெல்லி மரங்கள் ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் வருவாய் தருகின்றன. நெல்லியைப் பதப்படுத்தி பல்வேறு வகை உணவுப் பொருட்களையும் தயாரிக்கிறார். பார்தோ பர்மான் எழுதும் கட்டுரை

  • Becoming rich by selling second-hand cars

    கார் காதலன்

    புதுடெல்லியைச் சேர்ந்த  ஜதின் அகுஜா, கார்களின் காதலனாக இருக்கிறார். பழைய கார்களை வாங்கி புதுப்பித்து, வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கிறார். புதிய காரைப்போலவே தரசோதனைகளைச் செய்து விற்கும் அவர் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வர்த்தகம் ஈட்டுகிறார். சோபியா டானிஷ் கான் எழுதும் கட்டுரை

  • success in honey industry

    தேனாய் இனிக்கும் வெற்றி

    யாருடைய வழிகாட்டுதலும் இன்றி, சுயமாக தேன் விற்பனையில் இறங்கிய சாயா, இன்றைக்கு ஆண்டுக்கு பத்துக்கோடி வருவாய் ஈட்டும் பிராண்டை உருவாக்கி இருக்கிறார். சர்வதேச தேன் பிராண்ட்டுகளுக்கு மத்தியில் அவரது நெக்டார் ஃபிரஷ் தேனுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. பிரீத்தி நாகராஜ் எழுதும் கட்டுரை