Milky Mist

Saturday, 3 January 2026

“கிலோ இரண்டரை லட்ச ரூபாய் விலையுள்ள மாம்பழத்தை இரண்டாயிரத்துக்கு விற்க விரும்புகிறேன்!”

03-Jan-2026 By சோபியா டேனிஷ்கான்
ஜபல்பூர்

Posted 13 Aug 2021

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் எனும் சிறுநகரில் இருந்து 20 கிமீ  தொலைவில் உள்ள தேத்கவா கிராமம்.  இங்குள்ள பண்ணையில் உலகின் மிக அதிக விலை கொண்ட மாம்பழங்களை விளைவிப்பவர் என்ற வகையில் சங்கல்ப் சிங் பரிஹார் என்பவர் அண்மையில் சர்வதேச ஊடகங்களின் கவனத்தைப் பெற்றார்.  

அவரது பண்ணையில் விளையும் மாம்பழங்கள் சர்வதேச சந்தையில் பல கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை ஆகக் கூடியவை. எனவே, இந்த பண்ணையில் 24 மணி நேரமும் மூன்று பாதுகாவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஆறு ஜெர்மன் ஷெப்பர்ட் நாய்களும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளன.

மத்திய பிரதேச மாநிலம் தேத்கவா கிராமத்தில் உள்ள தனது பண்ணையில் மியாசாகி என்ற உலகிலேயே மிக அதிக விலைக்கு விற்கும் மாம்பழ வகையை சங்கல்ப் சிங் பரிஹார் விளைவிக்கிறார்.(புகைப்படங்கள்: உமா சங்கர் மிஸ்ரா)

அவரது பண்ணையில் விளைவிக்கும் மியாசாகி வகை மாம்பழங்கள் ஜப்பானில் கிலோ ஒன்றுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு விற்கப்படுகின்றன. எனினும், இன்னும் சங்கல்ப் தனது விற்பனையைத் தொடங்கவில்லை. இப்போதைக்கு இந்த வகையை அதிகம் விளைவிப்பதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

  “இப்போதைக்கு மாம்பழத்தை விற்கும் எண்ணம் எனக்கு இல்லை. மேலும் அதிக நாற்றுகளை நட வேண்டும் என்று விரும்புகின்றேன். கிலோ ஒன்றுக்கு ரூ.2000 என்ற விலையில் இந்தியர்களுக்கு ஏற்ற விலையில் இந்த மாம்பழத்தை விற்க வேண்டும் என்று நினைக்கின்றேன்,” என்கிறார் 46 வயதான இந்த விவசாயி. இப்போது தமது இரண்டு மாம்பழத்தோட்டங்களின் வாயிலாக ஆண்டுக்கு ரூ.9 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். 

அவரது மியாசாகி வகை மாம்பழங்கள் ஆயிரக்கணக்கில் விளையும்போது, அதனை அவர் சந்தையில் விற்றால், அவரது வருவாய் என்பது விண்ணளவு உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   மலைக்கா, அம்ராபாலி, ஹபஸ், அல்போன்சோ, லாங்டா மற்றும் பாம்பே கிரீன்.போன்ற பொதுவான உயர் வகை மாம்பழங்களைத் தரும் 3500 மரங்களை சங்கல்ப் வளர்த்துள்ளார். அவரது பண்ணையானது ஜபல்பூர்-ஜார்காவான் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

மாம்பழங்களைத் தவிர  ஒன்பது வகை கொய்யா, மாதுளை, அத்தி, ஷாஹூத் மல்பெர்ரி, விதை இல்லாத நாவல், சப்போட்டா மற்றும் ரோஸ் ஆப்பிள் போன்ற பழ மரங்களையும் வளர்க்கின்றார்.   நரசிங்க்பூர், சாகர், செட்னி மற்றும் கப்னி போன்ற அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து வார இறுதி நாட்களில் பண்ணைக்கு வரும் மக்களுக்கு தாராளமாக தள்ளுபடி விலையில் இந்த பழங்களை அவர் வழங்குகிறார்.

மியாசாகி வகை மாம்பழ பண்ணையானது, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்ட ஜெர்மன் ஷெப்பர்ட் வகை நாய்களால் பாதுகாக்கப்படுகிறது.  


சாதாரண மாம்பழ வகைகளை ரூ.100 முதல் 130 வரை விற்பனை செய்கிறார். 25 கி.மீ வரை எந்தவித விநியோகக் கட்டணமும் இன்றி மாம்பழங்களை கொண்டு சென்று  விற்பனை செய்து வருகிறார். மாம்பழங்களை விற்பனை செய்வதற்காக தினமும் காலையில் 8 மணிக்கு வீட்டை விட்டுக் கிளம்புகிறார். நண்பகல் 12மணிக்கு வீடு திரும்புகிறார். பின்னர் நாள் முழுவதும் தனது பண்ணையில் நேரத்தை செலவழிக்கிறார். அருகில் உள்ள கிராமங்களில் இருக்கும் எளியவர்களுக்கு குறைந்த விலையில் மாம்பழங்களை விற்பனை செய்கிறார்.

சங்கல்ப் ஒரு விவசாயக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவராவார். அவரது வாழ்க்கை எப்போதுமே கடினமான சூழல்களைக் கொண்டிருந்தது.  ஒருமுறை சென்னைக்கு ரயிலில் சென்று கொண்டிருந்த அவரிடம் ஒருபுதிய மனிதர் அறிமுகம் ஆனார். அவர் மியாசாகி வகை மாம்பழங்கள் குறித்து சொன்னது  இவரது வாழ்க்கையில் திருப்பம்  உருவாக்கியது. இந்த சம்பவம் அவரை இன்றைக்கு ஒரு பிரபலமாக மாற்றி இருக்கிறது. 

“சில விதைகள் வாங்குவதற்காக 2016ஆம் ஆண்டு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். ரயில் பயணத்தின்போது சென்னையை சேர்ந்த ஒரு நபரை சந்தித்தேன்,” என்று சங்கல்ப் அந்த சந்திப்பு பற்றி சொல்கிறார். அந்த நபர் சங்கல்ப் வாழ்க்கையில் ஒரு தேவதை போல வந்திருக்கிறார். மியாசாகி வகை மரக்கன்றுகளை அவருக்கு விற்பனை செய்தார்.

  “நாங்கள் இரண்டு பேரும் சொந்தமாக வைத்திருந்த பண்ணைகள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் அவர், சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் இருந்த அரிய வகை மாம்பழத்தின் புகைப்படங்களை என்னிடம் காட்டினார். அது என்னை மிகவும் ஈர்த்தது. இதற்கு முன்பு ஒருபோதும் அந்த மாம்பழங்கள் குறிந்து நான் அறிந்திருக்கவில்லை.”

மியாசாகி வகை மாம்பழங்கள் குறித்து அந்த மனிதர் சங்கல்ப்பிடம் விவரித்தார். அந்த மரத்தின் கன்றுகளையும் அவரிடம் காண்பித்தார்.

புத்தம் புதிதாக அறுவடை செய்யப்பட்ட மாம்பழங்களை வாங்குவதற்காக சங்கல்ப் பண்ணைக்கு  அருகாமை மாவட்டங்களில் இருந்து மக்கள் வருகின்றனர்.  


“அவரிடம் இருந்து ஒரு கன்று ரூ.2500 வீதம் 100 மரக்கன்றுகளை வாங்கினேன்,” என்கிறார் சங்கல்ப். மேலும் அவர் கூறுகையில், “நான் அதுபோல அதிக பணம் என்னோடு எடுத்துச் செல்வதில்லை.  பெரிய தொழிலதிபர் ஒருவருக்கு ஒரு பழப்பண்ணையை அமைத்துக் கொடுக்க முன்பணம்பெற்றிருந்ததால் என்னிடம் அவ்வளவு பணம் இருந்தது. கடவுள்தான் என்னை அவரை சந்திக்க வைத்தார் என்றும், இது போன்ற நிகழ்வுகள் நடக்கவும் வழி செய்தார் என்றும் நான் நிச்சயமாக நம்புகின்றேன்,”

அந்த மனிதர் பற்றி அதற்குப் பின்னர் எந்த தகவல்களும் கிடைக்கவில்லை. ஊடகங்களில் சங்கல்ப் பற்றிய கட்டுரைகள் வெளியானபின்னரும் கூட  அந்த மனிதரும் தொடர்பு கொள்ளவே இல்லை.   இதற்கிடையே 2016ஆம் ஆண்டு நட்டு வைத்த மரங்களில் இருந்து அறுவடை நடந்தது. திருடர்கள் கடந்த ஆண்டு மதிப்பு மிக்க சில மாம்பழங்களை திருடிச் சென்று விட்டனர். இதனால் வேறு வழியின்றி பாதுகாவலர்களை பணி அமர்த்த வேண்டியதாயிற்று. மேலும் நாய்களையும் பாதுகாப்பில் ஈடுபடுத்த  நேர்ந்தது.  

தொலை தூர இடங்களில் இருந்தும் பலர் பண்ணையை பார்வையிட வர ஆரம்பித்தனர். எனவே, பண்ணையில் ஒரு ரெஸ்டாரெண்ட் திறக்க வேண்டும் என்று யோசனை செய்தார். இந்த ஆண்டு பிப்ரவரியில் 'மஹாகால் பாபா கி ரசோய்', என்ற சைவ உணவுகள் வழங்கும் ஒரு உணவகத்தை தொடங்கினார். பண்ணையிலேயே தயாரிக்கப்பட்ட இயற்கை உணவு தானியங்கள் மற்றும் மசாலா வகைகளைக் கொண்டு சமைக்கப்பட்ட பாரம்பர்ய சுல்ஹால்  உணவை  அன்லிமிடெட் ஆக  ரூ.300க்கு யார் வேண்டுமானாலும் ருசிக்கலாம்.

“பட்டி, பருப்பு, கதி, ரொட்டி, அப்பளம், பழக்கலவை, சட்னி, ஆம் கா பன்னா,  அமுல் தயாரிப்புகள் மற்றும் பிராண்ட் எண்ணெய் வகைகளைக் கொண்டு  சமைக்கப்பட்ட உணவு வகைகள் வழங்கப்படுகின்றன. மேலும் இவை மாம்பழ ஷேக் உடன் வழங்கப்படும்,” என்கிறார் சங்கல்ப் .

பண்ணையில் உள்ள தங்களது வீட்டில் மனைவி ராணியுடன் சங்கல்ப்

“நகரங்களில் இதே போன்ற அனுபவத்துக்கு நீங்கள் இருமடங்கு விலை கொடுக்கவேண்டும். ஒரு குழுவில் பலர் இருக்கும்பட்சத்தில் அதில் சிலருக்கு கட்டணத்தைக் குறைத்துக்கொள்வேன்.” “வார இறுதியில் 50-100 வாடிக்கையாளர்களை நீங்கள் இங்கு பார்க்க முடியும். வருவோரில் பலர் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் மீண்டும் மீண்டும் வருகின்றனர். புதிய நபர்களையும் அவர்கள் பண்ணைக்கு அறிமுகம் செய்கின்றனர்.”

மக்களின் இதயங்களையும், ஆன்மாவையும் தொடவே சங்கல்ப் முயற்சிக்கிறது. அன்புடன் கூடிய சேவை நிச்சயம் இதயங்களை வெல்லும்.

பண்ணையில் அவரிடம் 10 ஊழியர்கள் உள்ளனர். அந்தப் பகுதியில் உள்ள தொழிலதிபர்கள் மற்றும் பண்ணை உரிமையாளர்களுக்கு பழப்பண்ணைகள் அமைத்துத் தரும் சில திட்டங்களையும் அவர் மேற்கொண்டு வருகிறார். அதிலும் இந்த ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மாம்பழங்கள் அறுவடையாகும் நான்கு மாதங்கள் உச்சகட்ட சீசனாகும். சந்தையில் பழங்கள் விற்பனை செய்யப்படும். சீசன் இல்லாத நாட்களில் ரெஸ்டாரெண்ட்டிலும், இதர பண்ணை அமைக்கும் வேலைகளிலும் அந்த ஊழியர்கள் ஈடுபடுவர்.

“பண்ணைக்கு வரும் மக்களிடம் இருந்து சிறப்பான அன்பை நாங்கள் பெறுகின்றோம். அதே போல எதிர்காலத்திலும் சிறப்பான வெற்றிக்கு கடவுள் என்னை வழிநடத்துவார் என்று நம்புகின்றேன்,” என்கிறார் சங்கல்ப்.

அவருடைய தந்தையும் ஒரு விவசாயிதான். அவரது தந்தை இளம் வயதில் போக்குவரத்து தொழிலில் ஈடுபட்டார். சில பேருந்துகளையும் இயக்கி வந்தார். சங்கல்ப் ஜபல்பூரில் உள்ள குரு கோபிந்த் சிங் கால்சா சாகிப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு வரை படித்தார். ஜபல்பூரில் உள்ள குரு போகிந்த் சிங் கால்சா கல்லூரியில் பிகாம் முடித்தார்.

பள்ளி முடிந்த உடன், சின்னசின்ன வேலைகளை செய்து வந்தார். தனது செலவுகளுக்காக பெற்றோரிடம் அவர் பணம் கேட்பதில்லை என்ற வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

சங்கல்ப் ரெஸ்டாரெண்ட்டில் ஆரோக்கியமான சைவ உணவு பரிமாறப்படுகிறது.

“என்னுடைய தந்தையின் நண்பருடைய செங்கற் சூளையில் கமிஷன் அடிப்படையில் பணியாற்றினேன். வாரத்துக்கு எனக்கு ரூ.300 கிடைத்தது. அது போதுமானதாக இருந்தது,” என்கிறார் அவர். “இது தவிர ஒரு பினாயில் மற்றும் பெயிண்ட் நிறுவனத்தில் விற்பனை முகவராகவும் நான் பணியாற்றினேன்.”

தந்தை பார்த்து வந்த போக்குவரத்து தொழிலை அப்போது அவர் மூடி விட்டதால், பட்டப்படிப்பு முடித்த நிலையில் குடும்பத்துக்குச் சொந்தமான நிலத்தில் வேளாண்மையில் ஈடுபடுவது என்று தீர்மானித்தார்.

 பருப்பு  சாகுபடி செய்வது முதல் கலப்பின மாம்பழ மரங்கள் வளர்ப்பது வரை அனைத்துமே விதிவழியில் போய்க் கொண்டிருந்தபோதுதான் சென்னைக்கு செல்லும் ரயிலில் அதிர்ஷ்ட தேவதையைக் கண்டறிந்தார்.  

சங்கல்ப் தன் 32-வது வயதில் ராணி என்பவரை மணந்தார். இப்போது அவருக்கு 10, 12 வயதாகும் இரு மகன்கள் உள்ளனர். பசுமையான மரங்கள் சூழ்ந்த தங்கள் பண்ணையில் வீடுகட்டி இவர் வாழ்கிறார்.  

 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Daughter of Punjab

    மண்ணின் மகள்

    பஞ்சாப் மாநிலத்தில் தன் கிராமத்தில் ஐடி நிறுவனம் தொடங்கிய சித்து, இன்றைக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அளவுக்கு அந்த ஐடி நிறுவனத்தை கட்டமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • Story of believing in your dreams

    ஒரு கிராமம்; ஒரு கனவு; ஒரு வெற்றி!

    அபாரமான தன்னம்பிக்கையுடன், 50 ச.அடி ஸ்டோர் ரூம் இடத்தில் அலுவலகத்தைத் தொடங்கினார் சுமன். இப்போது இந்தியாவில் மட்டுமின்றி, ரஷ்யாவிலும் தமது அலுவலகத்தைத் தொடங்கி உயர்ந்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை

  • Mumbai couple's juice chain doing roaring business

    வெற்றியின் ஜூஸ்

    நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த காதலர்கள் அவர்கள். இணைந்து சொந்தமாக பல தொழில்கள் செய்து, இப்போது மும்பையில் பழச்சாறு விற்பனையில் கொடி கட்டிப் பறக்கிறார்கள். அவர்களின் சுவாரசியமான வெற்றிக்கதையைத் தருகிறார் பி சி வினோஜ்குமார்

  • Dustless paint! an innovative product

    ஆராய்ச்சி தந்த வெற்றி

    அதுல் அவரது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போது, தூசி பரவியதால், அவரது குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில்தான், தூசியில்லாத பெயிண்ட் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இப்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.

  • His success story which reads like a film script aptly started in a cinema hall

    எளிமையான கோடீசுவரர்

    திரையரங்கில் காண்டீனில் வேலை பார்த்தவர் அவர். அன்று அவருக்கு மாதச் சம்பளம் 90 ரூபாய் மட்டுமே. இன்று அவர் 1800 கோடி ருபாய் நிறுவனம் ஒன்றின் உரிமையாளர். தன் வாழ்க்கை வெற்றிக்கதையை மசுமா பர்மால் ஜாரிவாலிடம் சொல்கிறார்

  • Redesigning small shops

    மளிகையில் மலர்ச்சி!

    தந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார்  வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.