Milky Mist

Monday, 7 July 2025

எட்டே மாதத்தில் 67 லட்சம் வருவாய்! கல்லூரி நண்பர்களின் கலக்கல் சாதனை!

07-Jul-2025 By பார்த்தோ பர்மன்
கொல்கத்தா

Posted 08 Apr 2021

ஒரு சொந்த நிறுவனம் தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருந்த இரண்டு கல்லூரி நண்பர்களுக்கு கொரோனா ஊரடங்கு கைகொடுத்தது. இருவருக்கும் வேலை கிடைக்கவில்லை என்பதால் தொழில் முனைவோர் ஆகினர்.

சந்திரசேகர் சிங் (27), பிரதிக் போஸ்லே (28) இருவரும் வெல்ஸ்பையர் என்ற  மின்னணு பிரஷர் குக்கர் பிராண்டை அமேசானில் ரூ.20 லட்சம் முதலீட்டில் தொடங்கினர்.

சந்திர சேகர் சிங் மற்றும் பிரதிக் போஸ்லே இருவரும் வெல்ஸ்பையர் என்ற பல்வேறு சமையல்கள் செய்யும் பாத்திர விற்பனையை ஊரடங்கின்போது அமேசானில் தொடங்கினர்(புகைப்படங்கள்: சிறப்பு ஏற்பாடு)

வெறும் எட்டு மாதங்களில் ரூ.67 லட்சத்துக்கு விற்பனை செய்ததாகவும், இதன் வாயிலாக தங்களுடைய முதலீட்டை திரும்ப பெற்றதுடன் இப்போது லாபத்துடன் இயங்கி வருவதாகவும் இருவரும் கூறினர்.  

“நாங்கள் 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கினோம். இதுவரை 3000 குக்கர் பாத்திரங்கள் விற்பனை செய்துள்ளோம்,” என்றார் சிங்.

“இப்போது நாங்கள் சீனா மற்றும் ஜப்பானில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை இறக்குமதி செய்கின்றோம். அடுத்த ஆண்டு இந்தியாவில் சொந்த தொழிற்சாலை அமைப்பது என்று திட்டமிட்டுள்ளோம்.” என்றனர்.

இந்த குக்கர்கள் பல சமையல் வேலைகளை செய்யும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது இவை அரிசி குக்கர், பிரஷர் குக்கர், சமைப்பதற்கான பான், மெதுவான குக்கர், வேகவைத்தல், தயிர் தயாரிப்பு, உணவை சூடு செய்தல் மற்றும் எரிவாயு சிலிண்டர் ஆகியற்றின் செயல்களையும் செய்கின்றன. வெறும் 30 நிமிடத்தில் வேகவைத்தல், வறுத்தல், ரொட்டி சுடுதல், நீராவியில் வேக வைத்து சமைத்தல் உள்ளிட்ட  14 வெவ்வேறு விதமான உணவு முறைகளை இந்த வீட்டு உபயோக கருவியில் சமைக்க முடியும்.  

இவர்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் சென்னை, ஐதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்களாவர். இப்போது மும்பை, டெல்லி மற்றும் இதர நகரங்களிலும் இருந்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து  விசாரணைகள் வர தொடங்கி இருக்கின்றன.

  இந்த நிறுவனத்தின் நிறுவன பங்குதாரர்களான சந்திர சேகர் மற்றும் பிரதிக் இருவரும் வெவ்வேறு நகரங்களை சேர்ந்தவர்களாவர். இவர்கள் இருவரும் சென்னையில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல்  பொறியியல் பி டெக்(2011-2015) படிப்பதற்காக சேரும் போது சந்தித்துக் கொண்டனர் பிரதிக் மும்பையை சேர்ந்தவர். சந்திர சேகர் ராஞ்சியில் பிறந்து வளர்ந்தவர். இருவரும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

பிரதிக்கின் பெற்றோர் இருவரும் வேலைக்கு செல்பவர்கள். அவருடைய தந்தை ஓஎன்ஜிசி யில் பணியாற்றினார். அவரது தாய் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் பணியாற்றுகிறார்.
சந்திரசேகர் தமது பிஜிடிஎம் படிப்பை கடந்த ஆண்டு முடித்தார். வேலை இல்லாத நிலையில் வெல்ஸ்பையர் தொடங்குவது என்று தீர்மானித்தார்.


சந்திரசேகரின் தந்தை ஒரு விவசாயி ஆவார். அவரது தாய் ஒரு குடும்பத்தலைவி. அவர் ராஞ்சி குருநானக் மேல்நிலைப்  பள்ளியில் படித்தார். அவர் அந்தப் பள்ளியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு படித்தார்.  

பிரதிக் சென்னைக்கு வந்த கதை சுவாரசியமானது. பிரதிக் பத்தாம் வகுப்பில் 96 சதவிகிதம் மதிப்பெண் பெற்றிருந்த நிலையில் பனிரெண்டாம் வகுப்பில் 46 சதவிகிதம் மதிப்பெண் மட்டுமே வாங்கினார். இதனால் அவரது குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. இதில் கடுப்பான பிரதிக்கின் தந்தை, மகனை சென்னைக்கு படிக்க அனுப்புவது என்று தீர்மானித்தார்.

“என்னுடைய படிப்பில் அதிருப்தி ஏற்பட்டதால், என் தந்தை  திட்டினார்.  மும்பையில் படித்தால், ஒருபோதும் நீ பொறியாளர் ஆக மாட்டாய் என்று சொன்னார்,” என்கிறார் பிரதிக். இவர் வெல்ஸ்பையர் குக்கரை சந்தைப்படுத்தும் வியாங்கா எண்டர்பிரைசஸ் என்ற பங்குதாரர் நிறுவனத்தின் துணை நிறுவனர். இப்போது வெறும் எட்டு மாதத்தில் லாபத்துடன் இயங்கும் ஒரு நிறுவனத்தை தொடங்கியதை தனது ஒட்டுமொத்த குடும்பத்தையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தினார்.   பட்டப்படிப்புக்குப் பின், மும்பையில் ஐசிஎஃப்ஏஐ வணிக பள்ளியில்(ஐபிஎஸ்) பிரதிக் எம்பிஏ படித்தார். இந்தியன் ஆயில் நிறுவனத்தில் கிடைத்த வேலைவாய்ப்பை மறுதலித்து விட்டு ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.

  “நான் ஒரு பெரிய நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினால், வழக்கமான வேலையைச் செய்வேன். புதிதாக எதையும் கற்றுக்கொள்ள மாட்டேன் என நினைத்தேன்” என்று தம்மைப் பற்றி பிரதிக் பகிர்ந்து கொள்கிறார்.

“நான் சேர்ந்த நிறுவனமானது மிகவும் சிறிய நிறுவனமாகும். அந்த நிறுவனத்துக்கு முறையான ஓர் அலுவலகம் கூட இல்லை. நான் அங்கிருந்து விலகிய நேரம், அந்த நிறுவனத்தின் மதிப்பு மூன்று ஆண்டுகளில் ரூ 100 கோடியாக அதிகரித்திருந்தது.’’

மும்பையை அடிப்படையாகக் கொண்ட அந்த நிறுவனத்தில் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பழரசங்கள் தயாரிக்கப்பட்டன. அதன் முன்னெடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக போரிவலி ரயில் நிலையத்தில் இவர்  அந்த பானத்தை விற்பனை செய்துள்ளார். பின்னர் இந்த பிராண்ட் மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட் டீமின் அதிகாரப்பூர்வ பானமாக மாறியது
12ஆம் வகுப்பில் மிகவும் குறைந்த மதிப்பெண் பெற்றதால் பிரதிக்கின் பெற்றோர் அவரை சென்னைக்கு  அனுப்பினர்.  அங்கு அவர் பிடெக் படிப்பு படித்தார்.  


  இதற்கிடையே, பட்டப்படிப்பு முடித்த பின்னர் சந்திரசேகர் ஒரு சென்னை நிறுவனத்தில் நிர்வாக பொறியாளராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர் அவர், டெல்லியில் ஒரு நிறுவனத்தில் வணிக செயல் ஆய்வாளராக பணியில் சேர்ந்தார்.

“அவர்கள் பாலிஸ்டர் உருவாக்கினர். அவர்களின் ஏற்றுமதி-இறக்குமதி பிரிவை கவனித்துக் கொள்வதற்காக என்னை வேலைக்கு எடுத்தனர்,” என்றார் சந்திரசேகர். பின்னர் அவர் பிஜிடிஎம்(2018-20) படிப்பதற்காக நொய்டாவில் உள்ள ஜெய்புரியா நிர்வாக மையத்தில் சேர்ந்தார். இருவரும் அடிப்படையில் வெவ்வேறு நகரங்களை சேர்ந்தவர்கள் என்றாலும், சந்திரசேகர், பிரதிக் இருவரும் தொடர்ந்து தொடர்பில் இருந்தனர். பல்வேறு வணிக வாய்ப்புகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். 2019 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் புதிய வாய்ப்புகள் பற்றி தெரிந்து கொள்வதற்கான சீனா, ஜப்பான் சென்றனர்.

பிரதிக் 2019 ஆம் ஆண்டு டிசம்பரில் தனது வேலையை விட்டு விலகினார். அந்த சமயத்தில் சந்திரசேகர் தனது பிஜிடிஎம் படிப்பை முடித்து விட்டார். அப்போது தேசமே முழுமையாக ஊரடங்கில் இருந்தது. வளாக நேர்காணல் வேலைவாய்ப்புகளோ அவர் ஒரு வேலையில் சேருவதற்கான வாய்ப்புகளோ கிடைக்கவில்லை. 

மின்சார குக்கர் திட்டத்தை செயல்படுத்தும் நேரமாக அதைக் கருதினர். கூகுள் ஃபார்ம் களைப் பயன்படுத்தி சர்வே எடுத்து நேரத்தை வீணாக்க இருவரும் விரும்ப விலை. நண்பர்கள் முதல் உறவினர்கள் வரை ஒவ்வொருவரிடமும் இது குறித்து ஆலோசனை செய்தனர் அது போன்ற ஒரு பொருளுக்கு சந்தையில் நல்ல வாய்ப்பிருந்ததை அவர்கள் கண்டுபிடித்தனர். தங்களது வணிகத்தை 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட்டில் தொடங்கினர். அமேசான் வாயிலாக விற்பனை செய்தனர். பின்னர் தங்களது இணையதளம் வாயிலாக விற்றனர். இ-வணிக தளங்களின் சாத்தியம் குறித்த அவர்களின் நம்பிக்கை பலித்தது. 

“இப்போது வரை 5 சதவிகித இந்தியர்கள் மட்டுமே இ-வணிக தளங்கள் உபயோகிக்கின்றனர். பெரிய வாய்ப்பு இதில் உள்ளது. இந்த சந்தையில் வெறும் 2 சதவிகிதம் நாம் கைப்பற்றினால் போதும். பெரிய லாபம் கிடைக்கும்,“என்கிறார் சந்திரசேகர். நல்ல வாடிக்கையாளர் சேவையைத் தருவதில் தாங்கள் கவனம் செலுத்துவதாக சந்திர சேகர் சொல்கிறார். இதற்காக  வெளியே இருந்து சரக்கு டெலிவரி நிறுவனங்களையும் இணைத்துள்ளனர்.

இந்த இளைஞர்களுக்கு கல்லூரி நாட்களில் எல்லாமே வேடிக்கைதான். இவர்கள் இப்போது தொழில்முனைவோர்கள்.  


“ஏதேனும் பழுது ஏற்பட்டால், வாடிக்கையாளர்கள் இடத்தில் இருந்து பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து அதை பழுது நீக்குவோம். பின்னர் எந்த ஒரு கட்டணமும் வசூலிக்காமல் அதை வாடிக்கையாளரிடம் திருப்பித் தருகிறோம்,” என்றார் அவர்.

அவர்கள் நிறுவனத்தின் மூன்றாவது பங்குதாரரான காகன் ஜாரால், பேக்கிங் முதல் விநியோகம் வரை அனைத்து செயற்பாடுகளுக்குமான பொறுப்பாளர் ஆக இருக்கிறார்.     இப்போது இந்த ஸ்டார்ட் அப் நிறுவனம்  கிளிங்க் என்ற கண்ணாடி பாட்டில் பிராண்ட் தொடங்கி இருக்கின்றனர். ஒரு பேக்கில் நான்கு பாட்டில்களை ரூ.520-க்கு விற்கின்றனர்.  இந்த 1000 மிலி பாட்டில்களில் தண்ணீர், பால், பழரசம் அல்லது எண்ணெய் ஊற்றி வைக்க முடியும்.

கிளாஸ் ஜார், ஏர் ஃபிரையர், சமைலறை தட்டுகள் போன்ற மூன்று பொருட்களை விரைவில் தொடங்குவது என அவர்கள் திட்டமிட்டுள்ளனர். தனிப்பட்ட விருப்பங்களைப் பொருத்தவரை , இருவருமே கிரிக்கெட் விளையாடுவதில் ஆர்வம் கொண்டவர்கள். சந்திர சேகர், பல்கலைக்கழக அளவிலான கிரிக்கெட் குழுவின் கேப்டனாக மூன்று ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

மார்க் மெக்கார்மேக் எழுதிய ‘What They Don’t Teach You at Harvard Business School என்ற தலைப்பிலான ஆங்கில புத்தகம் அவருக்கு விருப்பமான புத்தகமாகும்.  “நான் த வீக்எண்ட் லீடரின் பெரிய ரசிகன். இணையதளத்தில் தொழில் முனைவோர்களின் வெற்றி கதைகள் குறித்து ஈர்ப்புடன் படிப்பதை விரும்புகிறேன்,” என்று கூறும் சந்திரசேகர் அதனாலேயே இந்த தளத்தை தங்கள் வெற்றிக்கதையுடன் தொடர்பு கொண்டதாகக் கூறுகிறார்.  



 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • How a grocer's son started a biscuit factory and became a crorepati

    பிஸ்கட்டில் விளைந்த தங்கம்!

    அவர் சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகன். குடும்பத்துக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இல்லை. இருந்தும் பெரிதாக யோசித்து பிஸ்கட் நிறுவனம் தொடங்கினார். இன்று 100 கோடிக்கும் மேல் விற்பனை செய்யும் ப்ரியா புட் ப்ராடக்டஸ் உருவான கதை இது. கட்டுரை: ஜி சிங்

  • The kid who ran away from his home in Udipi is now owner of a Rs 200 crore hotel chain

    ருசியின் பாதையில் வெற்றி!

    சிறுவனாக இருக்கும்போது உடுப்பியிலிருந்து ஒருநாள் வீட்டை விட்டு மும்பை ஓடி வந்தார் ஜெயராம் பானன். இன்று  சாகர் ரத்னா ஹோட்டல்கள் நடத்தும் ஜேபி குழுமத்தின் தலைவராக 200 கோடி மதிப்பில் வர்த்தகம் செய்யுமளவுக்கு வளர்ச்சி! பிலால் ஹாண்டூ எழுதும் கட்டுரை

  • juice at low price

    பத்து ரூபாய் பழரசம்!

    பிரபு காந்திகுமார் அமெரிக்காவில் ஆண்டுக்கு ரூ.48 லட்சம் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். குடும்பத்தொழிலைக் கவனிக்க கோவை திரும்பினார். இப்போது பழரசங்கள் தயாரிக்கும் தொழிலில் ஆண்டுக்கு ரூ. 35 கோடி வருவாய் தரும் சாம்ராஜ்யத்தை ஐந்தே ஆண்டுகளில் கட்டமைத்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • Jacket makes money for Saneen

    சம்பளத்தைவிட சாதனை பெரிது!

    ஐ.பி.எம் நிறுவனத்தில் மாதம் 15,000 ரூபாய் சம்பளத்தில் பணியாற்றினார் சனீன். பின்னர் சொந்த தொழில் செய்யும் ஆர்வத்தில் வேலையை விட்டு விலகி, நண்பர் நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார். இன்றைக்கு 1.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனத்தின் உரிமையாளர். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • The Magnificent Seven

    அவங்க ஏழு பேரு…

    சிறுவயது நண்பர்கள், பள்ளி படிப்பு முடிந்த உடன், தனித்தனிப்பாதைகளில் பயணித்தவர்கள். வார இறுதி பயணங்களில் மீண்டும் கைகோத்து தொழிலதிபர்களாக உயர்ந்திருக்கின்றனர். 3 டி பிரிண்டர்களை பள்ளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • born in a small town he is now fighting brands like reebok and nike

    விளையாட்டாக ஒரு வெற்றி!

    அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ரோஷன் பெய்த், விளையாட்டு ஆர்வம் கொண்டவர். இன்றைக்கு விளையாட்டு வீரர்களுக்கான ஆடைகள் உற்பத்தி செய்யும் இரண்டு வெற்றிகரமான நிறுவனங்களின் உரிமையாளர். சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை