பத்தாயிரம் ரூபாய் முதலீடு... இருபத்திஐந்து லட்சம் வருவாய்! டெல்லிப்பெண்ணின் வெற்றிக்கதை
15-Mar-2025
By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி
டெல்லியில் பழைமையான, குறுகிய சந்து ஒன்றில் வசிக்கும் மார்வாரி குடும்பத்தில் பிறந்தவர் ஆன்சல் மித்தல். அவரது பெற்றோர் முற்போக்கான எண்ணம் கொண்டவர்கள். பாரம்பர்ய சமூக நெறிகள் படி தமது மகளை வளர்க்க விரும்பாதவர்கள்.
ஆன்சல் மற்றும் அவரது சகோதரி ஸ்வாதி இருவரும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என அவர்கள் ஊக்குவித்தனர். “எங்கள் பெற்றோர் நாங்கள் சம்பாதிக்கத் தொடங்கியபின்னர்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றனர்,” என்கிறார் ஆன்சல். 27 வயதான இவர் டெல்லி நிஃப்ட் (NIFT)கல்வி நிறுவனத்தின் முன்னாள் மாணவி. தமது பெற்றோரை அவர் ஏமாற்றவிரும்பவில்லை. ஆனால், அதே நேரத்தில் ஒரு வேலைக்குச் செல்வதற்குப் பதில் அதற்கும் மேலாக பிராண்ட்லெஸ் (Brandless) என்ற தோல் கைவினைப் பொருட்கள் பிராண்ட்டை நிறுவினார்.
|
ஆன்சல் மித்தல், பிராண்ட்லெஸ் என்ற தோல் கைவினைப்பொருட்கள் பிராண்ட்டை ரூ.10,000 முதலீட்டில் 2015-ம் ஆண்டு நிறுவினார். இன்றைக்கு 25 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டும் லாபகரமான நிறுவனமாக வளர்ந்திருக்கிறது.
|
புக்மார்க்ஸ், கைப்பைகள், பர்ஸ்கள், பாஸ்போர்ட் வைக்கும் பவுச்கள், கீ செயின், சூட்கேஸ்கள் போன்ற தோல்பொருட்களை பிராண்ட்லெஸ் வழங்குகிறது. இந்த தோல்பொருட்கள் இளம்பச்சை நீலம், பழுப்பு, வன பச்சை, கருப்பு பழுப்பு நிறம் போன்ற நவநாகரீக வண்ணங்களில் வந்திருக்கின்றன. இந்தப் பொருட்கள் ரூ.200 (தோல் கீ செயின்) முதல் ரூ.18000 வரையிலான சூட்கேஸ்கள் வரை கிடைக்கின்றன. கைப்பைகள் ரூ.5000 முதல் கிடைக்கின்றன.
ஆன்சல்,டெல்லியில் உள்ள ஒரு பாரம்பர்யமான கான்வென்ட் பள்ளியில் படித்தார். “விளையாட்டு மட்டுமே என்னுடைய மூச்சாக இருந்தது. மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் அளவுக்கு டேபிள் டென்னிஸ் விளையாடினேன்,” என்கிறார். “பின்னர், நான் ஊடகம் மற்றும் விளம்பரம் தொடர்பான படிப்பில் ஹன்ஸ்ராஜ் கல்லூரியில் சேர்ந்தேன். எனக்கு இந்தப் படிப்பின் மீது விருப்பம் இல்லை. எனவே, ஒரு ஆண்டு கழித்து அந்தப் படிப்பில் இருந்து விலகினேன்.”
தோல் வடிவமைப்புப் பயிற்சி பெறுவதற்காக டெல்லியில் உள்ள நிஃப்ட் கல்வி நிறுவனத்தில் 2010ம் ஆண்டு சேர்ந்தார். “ஃபேஷன் என்று வந்தால், இந்தியாவில் பெருமைமிகு கல்லூரிகளில் இதுவும் ஒன்று. அந்த இடம் புத்துணர்ச்சியூட்டும் மாற்றத்தை தருவதாக இருந்தது,” என்கிறார் ஆன்சல். “துறை ரீதியான பெரும் தொடர்புகள் கிடைக்கப்பெற்றேன். பயிற்சியாளராகப் பணியைத் தொடங்கினேன். இந்தப் படிப்பின்போது, புகழ்பெற்ற வடிவமைப்பாளர்களுக்கு உதவியாக இருந்தேன்.
’’2010ம் ஆண்டு நடந்த ஃபேஷன் வாரவிழாவின் போது ஒரு வடிவமைப்பாளருக்கு உதவியாக இருந்ததில் முதன் முறையாக ரூ.1500 பணம் கிடைக்கப்பெற்றேன். பெரும்பாலான சமயங்களில் பணம் வாங்காமல் பணியாற்றினேன். இப்படி பணி புரிந்தபோது, கிடைத்த அனுபவம், எதிர்காலத்தில் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது.
|
ஆன்சல் , பிராண்ட்லெஸ் என்ற பிராண்ட்டை ஒரு மாஸ்டர் தையல்காரரை வைத்துத் தொடங்கினார்.
|
ஜலந்தரில் உள்ள ஒரு தோல் தொழிற்சாலையில் நடந்த மூன்று வார கால பயிற்சிதான் தோல் தொழிலில் அவருக்குக் கிடைத்த முதல் அனுபவம். “எங்கிருந்து வருகிறது என்ற தோல்பற்றிய எனது முக்கிய புரிதல் தொடங்கியது,” என்று சொல்லும் அவர், “தோல் உருவாக்கம் குறித்த முழுமையான செயல்முறைகளை நான் கற்றுக் கொண்டேன். உபயோகமான, உபயோகமற்ற தோல் எது என்ற வித்தியாசத்தையும் கற்றுக் கொண்டேன். “
இறுதியாண்டு புராஜெக்ட்டின் ஒரு பகுதியாக , முதன்மையான வடிவமைப்பாளர் சாமாந்த் சவுகானுடன் அவர் பணியாற்றினார். அவரது வழிகாட்டுதலின் பேரில் தோல்பைகள், ஜாக்கெட்களை பற்றி கற்றுக் கொண்டார். அவரது இறுதி ஆண்டு புராஜெக்ட் , வகுப்பிலேயே சிறந்ததாகப் பரிசு பெற்றது.
“இறுதி ஆண்டின் முடிவில், முழுநேரப் படிப்பு மற்றும் பல்வேறு புராஜெக்ட்கள் என்ற இரண்டுக்கும் இடையே தவித்து மன அழுத்ததுக்கு உள்ளானேன். எனவே, 9 மணிமுதல் 5 மணி வரையிலான வேலைக்கு எதிரான முடிவை எடுத்தேன். பெரிய வடிவமைப்பாளருடன் பணியாற்றும் வாய்ப்பையும் மறுத்தேன். என்னுடைய ஃப்ரீலேன்ஸ் பணிகளில் நான் கவனம் செலுத்தினேன்,” என்றார் ஆன்சல்.
அது போன்ற வாய்ப்பில் , அவருக்கு ரூ.10,000 கிடைத்தது. சொந்தமாக தோல் தொழில் தொடங்குவது என்றும் அதற்காக அந்தப் பணத்தை முதலீடு செய்வது என்றும் ஆன்சல் தீர்மானித்தார். அவருக்கு ஏற்கனவே, அந்த தொழில் குறித்த அறிவு இருந்தது. தொழில்தொடர்புகளும் இருந்தது. மூலப்பொருட்கள் எங்கிருந்து கிடைக்கும் என்பதும் அவருக்கு தெரிந்திருந்தது.
“என் குடும்பத்தினருக்குக் கூடத் தெரியாமல் ஒன்பது மாதங்கள் நான் இது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டேன். அட்வான்ஸ் ஆக கொஞ்சம் பணம் பெற்றுக் கொண்டு மூலப்பொருட்கள் தருவதற்கு விநியோகிப்பாளர்கள் தயாராக இருந்தனர்,” என்று தம்முடைய தனிப்பட்ட நெஞ்சுரமிக்க தொழில்முனைவுப் பயணத்தை விவரித்தார்.
“ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பழைய தொடர்பு நபரான தோல் பொருட்களைத் தைக்கும் மாஸ்டர்ஜி(தையல்காரர்), என்னுடைய முதல் பணியாளரானார். அவருடைய வீடுதான், என்னுடைய தற்காலிக அலுவலகமாக இருந்தது. அங்குதான் முதன் முதலாக சில மாதிரிகளை நாங்கள் தயாரித்தோம்.”
|
90 சதவிகித பிராண்ட்லெஸ் பொருட்கள், நாட்டின் வெவ்வேறு இடங்களில் உள்ள குறிப்பிட்ட சில்லரை விற்பனைக்கடைகளில் விற்பனை செய்யப்படுகின்றன
|
ஆன்ஞ்சல் தமது நிறுவனத்துக்கு என் ஸ்கொயர் அக்சஸ்சரீஸ் என, அவரின் பெற்றோர்களான நிஷா, நவீன் என்ற பெயர்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு பெயரிட்டுள்ளார்.
முதல் ஆண்டில் அவர்கள் ரூ.50,000 அளவுக்கு வியாபாரம் செய்தனர். ஆண்டு தோறும் விற்பனை அதிகரித்து வந்தது. இப்போதைய ஆண்டு வருவாய் ரூ.25 லட்சம். “லாபகரமான நிறுவனமாக இயங்கி வருகின்றோம். எங்கள் பொருட்கள் நாட்டின் வெவ்வேறு இடங்களில் உள்ள குறிப்பிட்ட சில்லரை விற்பனைக்கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு நகரம், ஒரு விற்பனையாளர் என்ற கருத்தினை நான் இறுதி செய்திருக்கின்றேன். மிகக்குறைந்த விலை என்பது அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதால் இ-காமர்ஸ் இணையதளங்களுடன் இணைந்து கொள்ள எங்களுக்கு விருப்பம் இல்லை. குறைந்த லாபத்தில்தான் நாங்கள் பணியாற்றுகின்றோம். அதே நேரத்தில் தரத்தில் சமரசம் செய்து கொள்வதில்லை,” என்று ஏன் அவர், இணைய விற்பனையை முன்னெடுப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்ற கேள்விக்குப் பதில் அளிக்க்கிறார்.
ஆனால், ஆன்சல் பெருநிறுவனங்களுடன் இணைந்திருக்கிறார். விழாக்காலங்கள் மற்றும் இதர நிகழ்வுகளின் போது கீ செயின்கள் அல்லது பைகள் போன்ற பரிசுப் பொருட்களை அவர்கள் ஆர்டர் செய்கின்றனர். பத்து பேர் வரை அவரது அலுவலகம் மற்றும் தொழிற்சாலையில் பணியாற்றுகின்றனர். அங்குதான் அவரது முழுஉற்பத்தியும் நடைபெறுகிறது.
தமது தொழிலுக்கு சிறப்பான எதிர்காலம் இருப்பதாக அவர் நம்பிக்கையோடு இருக்கிறார். “ரெக்சின் மற்றும் சீன போலிப்பொருட்களின் காலமாக இது இருப்பினும் பாரம்பர்யமான தோல் பொருட்களுக்கு ஒரு முதன்மையான சந்தை இருக்கிறது. இதை விரும்பி தேர்வு செய்ய ஆட்கள் உண்டு.’’
|
ஆன்சல் ஒரு பயிற்சிபெற்ற ந டனக்கலைஞர். ஆனால், பொது மேடையில் பங்கேற்பதில் அவருக்கு ஆர்வம் இல்லை. |
ஆன்சலின் தினசரி பணிகள் காலை 7 மணிக்குத் தொடங்குகின்றன. கிளாஸிகல் நடனப் பயிற்சிக்குச் செல்கிறார். அது அவருக்கு மகத்தான சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அவரது மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும் இருக்கிறது. தவிர டெல்லியில் உள்ள பியர்ல் அகாதமி ஆஃப் ஃபேஷன் கல்வி நிறுவனத்தில் வருகைதரு ஆசிரியராகவும் உள்ளார்.
போதுமான பணம் இல்லாத சூழலில் தமது நிறுவனத்தின் இணையதளத்தை வடிவமைப்பதற்கான கணினிக் குறியீடுகளை அவரே கற்றுக் கொண்டார். “வெற்றிக்கு குறுக்குவழி ஏதும் இல்லை. நீடித்திருக்கும் உறுதி, கடின உழைப்பால் மட்டுமே தொடர்ந்து பயணிக்க முடியும்,” என்று சொல்லி விடைதருகிறார் ஆன்சல்
அதிகம் படித்தவை
-
தன்னம்பிக்கையே கண்களாக...
மதுரையைச் சேர்ந்த பூரண சுந்தரி 2019-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ் தேர்வில் இந்திய அளவில் 286-ம் இடம் பெற்றிருக்கிறார். மிக எளிமையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், 6 வயதில் பார்வையை இழந்தவர். இருப்பினும் பெற்றோர், தோழிகள், ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தில் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கிறார்.
-
ஒரு ஜூஸ் குடிக்கலாமா?
வசதியான குஜராத்தி குடும்பத்தில் பிறந்தவர் ஹேமங்க் பட். தந்தையின் தொழில் நஷ்டமடைந்ததால், 18 வயதில் மும்பையில் இன்ஷூரன்ஸ் ஏஜென்ட்டாக வாழ்க்கையைத் தொடங்கியவர், சங்கிலித்தொடர் ரெஸ்டாரெண்ட்கள், ஜூஸ் கடைகளைத் தொடங்கி வெற்றி பெற்றார். அன்வி மேத்தா எழுதும் கட்டுரை
-
காகிதத்தில் மலர்ந்த கோடிகள்
வெளிநாடுகளில் விதவிதமான பணிகள், தொழில்களில் ஈடுபட்ட ஹரிஷ், ராஷ்மி தம்பதி, இந்தியா திரும்பி வந்து காகிதப்பூக்களை தயாரித்து விற்பனை செய்கின்றனர். பல நாடுகளுக்கும் காகிதப்பூக்களை ஏற்றுமதி செய்கின்றனர். காகிதப்பூவில் உண்மையில் வாசனை இல்லை. ஆனால், இந்த தம்பதி தயாரித்து விற்கும் காகிதப்பூக்களால் பலரது வாழ்வில் வசந்தம் வீசியிருக்கிறது. உஷா பிரசாத் எழுதும் கட்டுரை
-
மில்லியன் டாலர் கனவு
அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ் கார்ட்னர், சிறுவயதில் அனுபவிக்காத துன்பம் ஏதும் இல்லை. அவரது தாயின் இரண்டாவது கணவரால் பெரும் துன்பத்துக்கு உள்ளாக்கப்பட்டார். அவர் பின்னாளில் மில்லியன் டாலர்களை சம்பாதிக்க வேண்டும் என்ற தன் இலக்கை வெற்றிகரமாக அடைந்தார். பி.சி. வினோஜ் குமார் எழுதும் கட்டுரை
-
கலக்குங்க கரோலின்!
பெற்றோரால் பாதுகாப்பாக வளர்க்கப்பட்ட பெண் கரோலின் கோம்ஸ். தந்தை இறந்த பின்னர், வெளிநாட்டில் எம்எஸ் படித்து விட்டு, தமது சொந்த அனுபவத்தின் பெயரில் உருவாக்கிய மூலிகை பொருட்கள் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.
-
இருளில் இருந்து வெளிச்சத்துக்கு
கொல்கத்தாவின் ஆயிரக்கணக்கான நடைபாதை வாசிகளைப் போல மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்தவர் ஜிலியன். இன்றைக்கு ஆண்டுக்கு கோடிக்கணக்கான ரூபாய்களைக் குவிக்கும் எழுத்தாளராக, பேச்சாளராக இருக்கிறார். ஜி.சிங் எழுதும் கட்டுரை