Milky Mist

Sunday, 23 November 2025

ப்ளாஸ்டிக்கில் இருந்து உலகைக் காக்கும் தொழில்! பத்து ஆண்டுகளில் 25 கோடியாக வளர்த்த பெண் தொழிலதிபர்!

23-Nov-2025 By சோபியா டேனிஷ்கான்
புதுடெல்லி

Posted 28 May 2019

ரியா எம்.சிங்கால்  இந்தியா திரும்பியபோது, இங்கே உணவுப் பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்காக பிளாஸ்டிக், அலுமினியம் பொருட்களை உபயோகிப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இவற்றுக்கு மாற்றாக எளிதாக மட்கக் கூடியப் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்த ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார். அந்த நிறுவனத்தின் வருவாய் இந்த பத்து ஆண்டுகளுக்குள் 25 கோடி ரூபாயைத் தாண்டி உள்ளது.

ஈகோவேர் (Ecoware)என்ற பிராண்ட் பெயரில் உணவுப் பொருட்களை நறுக்கப் பயன்படும் உபகரணங்கள், பேக்கேஜிங் செய்யப்பயன்படும் கொள்கலன்களைத் தயாரித்தார். இவை, விரைவு சேவை ரெஸ்டாரெண்ட்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உணவுச் சங்கிலியில் புற்றுநோய் உண்டாக்கும் காரணிகளை குறைத்தல்,  பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை மற்றும் விவசாயிகளுக்கு உதவுதல் போன்ற நேர்மறை அம்சங்களையும் இந்த தொழில் முயற்சி கொண்டிருக்கிறது.  

https://www.theweekendleader.com/admin/upload/10-05-19-03rhea.jpg

ஈகோவேர் நிறுவனத்தின் நிறுவனர் ரியா சிங்கால். இந்நிறுவனம் விவசாயக் கழிவுகளில் இருந்து உணவு கொள்கலன்களை தயாரிக்கிறது.


இப்போது 100  கோடி ரூபாய் ஈட்டும் நிறுவனமாக மாறும் நிலையில் ஈகோவேர்  உள்ளது. சிங்காலின் (37 ) விடாமுயற்சியே  இதற்குக் காரணம். இங்கிலாந்தில் படித்த இவர், வாழ்க்கையில் பெரும்பாலான நாட்களை வெளிநாட்டில் கழித்தவர்.

இவரது நிறுவனம் முதல் ஆண்டில் 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஈட்டியபோது, அதற்காக இவர், ஊக்கமிழந்துவிடவில்லை. விருப்பத்துடனும், உறுதியுடனும் தொடர்ந்து நடத்தினார். புற்றுநோய் அதிகரிப்பதற்கான காரணங்களை  மட்டுமே முக்கிய இலக்காக கொண்டிருந்தார்.

அவரது அம்மாவுக்கு கேன்சர் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டபோது, சிங்காலின் வயது 19. “கேன்சர் நோயை அவ்வளவு நெருக்கத்தில் பாரத்தபோது, வித்தியாசமான நோக்கத்துடன் அதை அணுகினேன். புற்றுநோய் மருந்தியல் பிரிவில் இருந்த என்னுடைய அனுபவம் மற்றும் அறிவை இதோடு  தொடர்பு படுத்திப் பார்த்தேன,” என ஈகோவேர் தொடங்குவதற்கு உந்துதலாக இருந்தது பற்றி விவரித்தார்.

“சுகாதாரம் அதே போல சுற்றுச்சூழல் என்ற கண்ணோட்டத்தில், பிளாஸ்டிக் உபயோகிப்பதில்  மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு தேவை என்பதை நான் உணர்ந்தேன். 90 நாட்களில் மட்கக் கூடிய பொருட்களைக் கொண்டு தயாரிப்பது என்ற நோக்கில் ஈகோவேர் பிறந்தது.”

விரைவு சேவை ரெஸ்டாரெண்ட் தொழிற்துறைதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது. மக்களின் நம்பிக்கையைப் பெறும் விதத்தில் மொபைல் உணவு விநியோகச் செயலிகள் கடந்த சில ஆண்டுகளாக பெரும் அளவில் வளர்ந்துள்ளன.  செயலிகளில் உணவு ஆர்டர் செய்யும் போது பெரும்பாலான நேரங்களில் பார்சல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் அல்லது அலுமினியம் அல்லது டின் கொள்கலன்களில் இருந்து அப்படியே எடுத்து மக்கள் உணவு  உண்கின்றனர்.

பிளாஸ்டிக், டின், அலுமினியம் ஆகியவை விஷத்தை குறிப்பாக கார்சினோஜென்ஸ் எனும் புற்றுநோயை உருவாக்கும் விஷத்தை உமிழக்கூடியவை என்பது குறித்து போதுமான விழிப்புணர்வு இல்லை. இவற்றில் சூடான உணவுப் பொருட்களை கொண்டு வரும்போது அல்லது அந்த உணவுப் பொருட்களை மறுபடியும் சூடுபடுத்தும்போதும் விஷப்பொருட்கள் உணவில் சேருகின்றன.  இதுதான் சிங்காலின் கவலையாக இருந்தது. இது குறித்து ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவருக்குள் எழுந்தது. இங்கிலாந்தில் இருக்கும்போது, நிஷாத் சிங்கால் என்பவரை சந்தித்து , 2007-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2009ம் ஆண்டு நாடு திரும்பினார்.

இங்கிலாந்தில் சுற்றுச்சூழல் குறித்தும், பிளாஸ்டிக் கொள்கலன்களில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்து உண்பது உடல்நலத்துக்கு கேடான விளைவுகளே ஏற்படுத்தும் என்பதை உணர்ந்திருந்தனர். எனவே,அவர்கள் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பொருட்களைப் பயன்படுத்தினர். உணவுப் பொருட்களை நறுக்குவதற்கு மரத்தால் செய்யப்பட்ட கத்திகளை உபயோகித்தனர்.

அதே தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு ஏற்றார்போல செயல்படுத்த, விவசாயக் கழிவுகளை மட்கும் பொருளாகமாற்றி அதில் இருந்து பேக்கேஜிங் பெட்டிகள், தட்டுகளைத் தயாரித்தார். 

https://www.theweekendleader.com/admin/upload/10-05-19-03rhea1.jpg

விவசாயிகளிடம் இருந்து விவசாயக் கழிவுப் பொருட்களை வாங்குகிறார் ரியா. இதன் மூலம், விவசாயக் கழிவுகளை எரிப்பதால், ஏற்படும் சூழல் சீர்கேட்டை அவர் தவிர்க்க உதவுகிறார்.


“இந்தியாவில் விவசாயக் கழிவுகள் ஒவ்வொரு ஆண்டும் எரிக்கப்படுவதால், சூற்றுச்சூழல் மாசடைகிறது,” எனும் அவர், “இந்தப் பிரச்னையை முளையிலேயே கிள்ளி எறிவது என்று  நான் முயற்சித்தேன்.  விவசாயிகளுக்கும் அதே நேரத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் ஒரு தீர்வை கண்டுபிடித்தேன். விவசாயிகளிடம் இருந்து விவசாயக் கழிவுகளைப் பெற்றோம். சிறு பெட்டிகளாக, தட்டுகளாத் தயாரித்தோம். அதில் உணவு பொருட்களை பேக்கேஜிங் செய்து அவற்றை ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய வகையில் தயாரித்தோம்.  

நேரடியாகவும், மறைமுகமாகவும் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழி செய்வதன்மூலம் ஈகோவேர், அளவுகடந்த சமூகத் தாக்கத்தை ஏற்படுத்தியது.”சுகாதாரத்தைப் பொறுத்தவரை பெரும் பயனைஅளித்தது. உணவுப் பொருட்களை பேக் செய்வதற்கு பாதுகாப்பான மாற்றாக இருந்தது.  பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் இந்தப் பெட்டிகள் 90 நாட்களில் மண்ணில் மட்கி விடுகின்றன.

ஆனால், ஈகோவேர் நிறுவனத்தைத் தொடங்கியபோது, அப்பொருட்களை வாங்குவதற்கு பலர் முன்வரவில்லை. 2010-ம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டிகளின் போதுதான் ஈகோவேருக்குத் திருப்புமுனை ஏற்பட்டது.  விளையாட்டுப் போட்டிகளின் போது உணவுப் பொருட்களை விநியோகிப்பதற்காக தம்முடைய தயாரிப்புகளை அவர் சப்ளைசெய்தார். இதன் மூலம் அவரது நிறுவனத்துக்கு ஆரம்பகட்ட ஊக்கம் கிடைத்தது.  குடும்பத்தில் இருந்து ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் நிதி, அவருடைய சேமிப்புடன், 20 ஊழியர்களுடன் நிறுவனத்தை அவர் தொடங்கி இருந்தார்.

இப்போது அவரது நிறுவனத்தில், ரியா சிங்கால், அவரது கணவர் ஆகியோரைச் சேர்த்து 115 ஊழியர்கள் இருக்கின்றனர்.  அவரது கணவர் அவர் பார்த்து வந்த வங்கிப் பணியை ராஜினாமா செய்து விட்டு, இங்கு சி.ஓ.ஓ-வாக சேர்ந்திருக்கிறார்.

ஐ.ஆர்.டி.சி (இந்தியன் ரயில்வே), க்யூ.எஸ்.ஆர் சங்கிலித் தொடர் நிறுவனமான ஹால்திராம் மற்றும் சாயோஸ் உட்பட முக்கியமான வாடிக்கையாளர்கள் அவர்களுக்கு இருக்கின்றனர். அவர்களுக்கு 28 விநியோகஸ்தர்கள் உள்ளனர். “எங்களுடைய இணையதளத்தின் மூலம் விற்பனை செய்கிறோம். அதேபோல மாடர்ன் பஜார் கடைகள், டெல்லி சதார் பஜாரில் உள்ள மொத்த சந்தையில் இருக்கும் முகவர்கள் மூலமும் விற்பனை செய்கின்றோம். மொத்தம்-சில்லரை விற்பனை என்பது 80-20 என இருக்கிறது,” என்று பகிர்ந்து கொள்கிறார் ரேகா.

மொத்த வியாபார சந்தையில் சாதிப்பது மிகவும் சிக்கலானது. இவர்கள் ஈகோவேரின் சாதகங்கள் குறித்து விற்பனையாளர்களுக்கு எடுத்துக் கூறி சம்மதிக்க வைத்தனர்.   பிளாஸ்டிக், டின் கொள்கலன்களை விடவும் வெறும் 15 சதவிகிதம் மட்டுமே விலை அதிகம் இருந்தபோதிலும், இதில் உள்ள சாதகங்கள் அதிகம் என்று கூறினர்.

 

https://www.theweekendleader.com/admin/upload/10-05-19-03Rhea3.jpg

டெல்லியில் உள்ள தமது அலுவலகத்தில் ஊழியர்களுடன் ரியா.


“இது  மைக்ரோவேவ்,  ப்ரீஸர் ஆகிவற்றில் தாக்குப் பிடிக்கும்.  எளிதில் மட்கக் கூடியது. சுற்றுச்சூழலுக்கு ஏற்றது,” என்கிறார் ரியா.

25 ஈகோவேர் கரண்டிகள், முள் கரண்டிகள் கொண்ட ஒரு பை 90 ரூபாயில் தொடங்கி, 50 ஈகோவேர் கப்கள் கொண்ட ஒரு பேக் ரூ.195ஆக இருக்கிறது. 50 காம்ஷெல் பாக்ஸ் எனப்படும் அட்டைப்பெட்டிகள் கொண்ட பேக் 740 ரூபாய் என்றும், 50 வட்டவடிவிலான பிளேட்கள் 147 ரூபாய் என்றும் கிடைக்கின்றன. 

கடந்த 18 மாதங்களாக ஈகோவேரை சுற்றி ஓர் ஆர்வம் உள்ளது. மக்கள் இது குறித்து ஆர்வத்துடன் உள்ளனர் என்கிறார் ரியா. தொடர்ந்து அவர் கூறுகையில், “எனவே, நிர்ணயித்த எங்கள் இலக்கான ரூ.100 கோடி வர்த்தகத்தை விரைவில் அடைவோம். இதேப் பொருட்களில் மேலும் சில பயன்பாடுகளைக் கண்டறிய உள்ளோம். மேலும் பல பொருட்கள் உருவாவது விவசாயிகளுக்கு நன்மை தரும். அதேபோல இந்தியா முழுவதும் பல தொழிற்சாலைகள் உருவாகும். பெண்களின் முன்னேற்றமே முக்கியமான நோக்கமாக இருக்கும்.”

மும்பையில் பிறந்த சிங்கால், துபாயில் வளர்ந்தார். அங்குதான் அவரது பெற்றோர் இன்னும் கூட வசித்து வருகின்றனர்.

இங்கிலாந்தில் போர்டிங் பள்ளியில் படிப்பதற்காக அனுப்பப்பட்டார். 2004-ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் பார்மகாலஜி படிக்கச் சென்றார். லண்டனில் உள்ள ஃபைஸர் பார்மாசூட்டிக்கல் நிறுவனத்தின் பல்வேறு மையங்களில் நான்கு ஆண்டுகள் புற்றுநோய் குழுவில் பணியாற்றினார்.  திருமணத்துக்குப் பின்னர், தம்பதியினர் இந்தியாவுக்கு வந்தனர். கணவர் நிஷாந்த் சிங்காலின் பெற்றோருடன் இருக்கின்றனர்.

https://www.theweekendleader.com/admin/upload/10-05-19-03rhea4.jpg

ஈகோவேர் நிறுவனத்தை 100 கோடிரூபாய் வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவதே ரியாவின் தற்போதைய நோக்கமாகும்.


இப்போது இருவரும்,  டெல்லியில் ஜிகே2 மார்கெட்பகுதியில் எளிமையான சொந்த அலுவலகம், நொய்டாவில் 5000 ச.அடி தொழிற்சாலை ஆகியவற்றைக் கொண்டு செயல்படுகின்றனர்.  

இரண்டு குழந்தைகளின் தாயான அவரின் தினசரி நடவடிக்கைகள் காலை 5.45க்கு தொடங்குகிறது. குழந்தைகளை காலை 7.15-க்கு பள்ளியில் விட்டு வருகிறார். அதன் பின்னர் அவர் ஜிம்முக்குச் செல்கிறார். அது அவருக்கு மனதுக்கு இதமளிப்பதாக இருக்கிறது.

பள்ளியில் இருந்து குழந்தைகளை பிற்பகலில் அழைத்து வருகிறார்.  மதிய உணவுக்குப் பின்னர் அலுவலகம் செல்கிறார். 5.30 மணிக்குப் பின்னர் வெளியில் நேரத்தைச் செலவழிக்கிறார். தன் பிள்ளைகளுடன் விளையாடி பொழுதைக் கழிக்கிறார்.


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • How a grocer's son started a biscuit factory and became a crorepati

    பிஸ்கட்டில் விளைந்த தங்கம்!

    அவர் சாதாரண மளிகைக்கடைக்காரரின் மகன். குடும்பத்துக்குப் போதுமான அளவுக்கு வருமானம் இல்லை. இருந்தும் பெரிதாக யோசித்து பிஸ்கட் நிறுவனம் தொடங்கினார். இன்று 100 கோடிக்கும் மேல் விற்பனை செய்யும் ப்ரியா புட் ப்ராடக்டஸ் உருவான கதை இது. கட்டுரை: ஜி சிங்

  • father sold fruits in bus stand, son ceo of Rs 220 crore fruit chain

    கனிந்த தொழில் கனவு!

    கோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • Tea stall entreprenuer

    தேநீர் விற்கும் ஆடிட்டர்

    புது டெல்லியைச் சேர்ந்த ஆடிட்டரான ராபின் ஜா சம்பந்தமே இல்லாத ஒரு வேலையைச் செய்துவருகிறார். ஆம்... அது தேநீர் விற்பனை! டீபாட் எனும் சங்கிலித்தொடர் தேநீர் விற்கும் கடைகளைத் தொடங்கி மாதம் 50 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டுகிறார். நரேந்திர கவுசிக் எழுதும் கட்டுரை

  • Daughter of Punjab

    மண்ணின் மகள்

    பஞ்சாப் மாநிலத்தில் தன் கிராமத்தில் ஐடி நிறுவனம் தொடங்கிய சித்து, இன்றைக்கு ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் அளவுக்கு அந்த ஐடி நிறுவனத்தை கட்டமைத்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை

  • rags to riches builder

    தோல்வியில் இருந்து மீண்டெழுந்தார் !

    கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சரத் சோமன்னா, முதன் முதலில் செய்த கட்டுமான திட்டம் வெற்றி. ஆனால், அதனைத் தொடர்ந்து செய்த திட்டம் படு தோல்வி. ஆனால் மனம் தளராமல், அதில் இருந்து பாடம் கற்று இன்றைக்கு பெரும் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக உயர்ந்திருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை

  • A Rs 1500 crore turnover brand is headed by a communist

    கம்யூனிஸ்ட் தொழிலதிபர்!

    கன்னியாகுமரியில் ஒப்பந்த தொழிலாளராக இருந்தவர், டீக்கடை வைத்திருந்தவர் ஆகிய பின்னணியைக் கொண்டவர் மம்மது கோயா. இன்று 1500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் செய்யும் விகேசி காலணிகள் நிறுவனத்தின் தலைவர். அவரது வெற்றிக்கதையை எழுதுகிறார் ரெனிதா ரவீந்திரன்