Milky Mist

Tuesday, 22 October 2024

உடுப்பியிலிருந்து அன்று வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் இன்று 200 கோடி மதிப்பிலான ஹோட்டல்களுக்கு அதிபர்!

22-Oct-2024 By பிலால் ஹாண்டூ
புது டெல்லி

Posted 11 Jul 2017

ஜெயராம் பானன் உடுப்பியில் உள்ள தன் வீட்டிலிருந்து ஓடி வந்த அந்த நாளை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். இன்று அவருக்கு 64 வயதாகிறது. 1960களின் நடுவில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் வட இந்தியாவின் நிகரற்ற ’தோசை கிங்‘ ஆகத் திகழ்கிறார்.

மும்பையில் ஒரு  கேண்டீனில் பாத்திரம் கழுவி 18 ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்த இவர், இன்று சாகர் ரத்னா உணவகங்கள் குழுமத்தைத் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறார். அவற்றின் ஆண்டு வர்த்தகம் 70 கோடி! இவரது வளர்ச்சி விண்முட்டும் வளர்ச்சி அல்லவா?

https://www.theweekendleader.com/admin/upload/27-05-17-08may27-17-bananlead1.JPG

உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், மலிவு விடுதிகள், தொழில்பேட்டைகளில் கேண்டீன்கள் ஆகியவற்றை ஜெயராம் பானன், தன் பெயரில் உள்ள குழுமத்தின் மூலம் நடத்துகிறார்.


பானன் ஏழு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர். தந்தை சற்றுக் கொடூரமாக நடந்துகொள்வார் என்று பானன் நினைவுகூர்கிறார். ஓட்டுநராக இருந்தவர் தந்தை. பள்ளியில் ஒழுங்காகப் படிக்காவிட்டால் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிவிடுவார்

13 வயதில் பானன் தேர்வில் தோற்றுப்போனார். அப்பாவின் பர்சில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடினார்.

அவர் மும்பைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டார். அழுகை முட்டியது. அவர் அழுவதைப் பார்த்த அதே ஊர்க்காரர் ஒருவர் மும்பையில் ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவன காண்டீனுக்கு அழைத்துச் சென்றார்.

அந்த நிறுவன காண்டீனில் பாத்திரம் கழுவும் வேலைதான் அவருக்குக் கிடைத்த முதல் வேலை. மாத சம்பளம் ரூ.18. அந்நாட்களில் உடுப்பியைச் சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக மும்பைக்குச் செல்வதுதான் வழக்கம்.

 “அவர்கள் தான் மும்பைக்கு தோசையைக் கொண்டுவந்தார்கள். மசாலா தோசை இந்தியாவின் நம்பர் 1 உணவு ஆனது,” என்கிறார் பானன். அவரது ஹோட்டல்களான சாகர் ரத்னா, ஸ்வாகத், ஷ்ரமன் போன்றவை மிகவும்  புகழ்பெற்றவையாக இருக்கின்றன.

அவர் கவனத்துடன் வேலை செய்ததால் பாத்திரம் கழுவுவதில் இருந்து சர்வராக உயர்ந்தார். பின்னர் மேலாளர் ஆனார். எட்டு ஆண்டுகளுக்கு அங்கேயே வேலை செய்து, வியாபாரத்  திறமையைப் பெருக்கிக்கொண்டார். மாதம் 200 ரூபாய் வரை சம்பாதித்தார்.

அங்கு வேலை செய்த நாட்கள் கடினமானவையாக இருந்தாலும் சொந்தத் தொழில் தொடங்கும் ஆர்வத்தை அவருக்குள் விதைத்தன.

மும்பையில் தென்னிந்திய உணவகம் ஒன்று தொடங்க அவர் யோசித்தார். ஆனால் அவை நிறைய இருந்ததால் அந்த யோசனையைக் கைவிட்டார். 1973ல் மும்பையில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவரது சகோதரர் உடுப்பி ரெஸ்டாரண்ட் ஒன்றில் மேலாளராக வேலை செய்துகொண்டிருந்தார்.  அதன் பின்னர் பானனுக்கு ப்ரேமா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது

அச்சமயம் அரசு செண்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடட் நிறுவனத்தை காஸியாபாத்தில் 1974-ல் அமைத்தது. அங்கு காண்டீன் நடத்தும் உரிமத்தை பானன் பெற்றார். முதலீடு  ‘2000 ரூபாய்க்கும் குறைவு.’

https://www.theweekendleader.com/admin/upload/27-05-17-08may27-17-bananvert.JPG

சாகர் ரத்னா ஹோட்டல்கள் உட்பட பானனுக்கு வட இந்தியாவில் 90 ஹோட்டல்கள் உள்ளன



இது அவரது வாழ்வில் திருப்புமுனை. மூன்று சமையல்காரர்களை வைத்து தரமான உணவைக் கொடுத்தார். அவரது வாடிக்கையாளர்கள் சுவையான உணவுக்கு ரசிகர்கள் ஆயினர். அந்த கேண்டீன் வெற்றிகரமானதாக மாறியது.

“பெரிதாக எதாவது செய்ய அதுதான் தேவையான தூண்டுதலாக அமைந்தது,” புன்னகையுடன் பானன் கூறுகிறார்.

“அப்போதெல்லாம் உடுப்பி உணவு என்ற பெயரில் ஹல்திராமின் தோசைதான் டெல்லியில் கிடைக்கும். அது பிரபலமாகவும் எளிதில் கிடைப்பதாகவும் இருந்தது. ஆனால் அது போலியானது,” அவர் விளக்குகிறார்.

“நிஜமான சுவையுடன் கூடிய தோசை இரு இடங்களில் மட்டும் கிடைத்தது. ஒன்று லோதி ஹோட்டலில் இருக்கும் வுட்லண்ட்ஸ் உணவகம், மற்றொன்று அம்பாசடர் விடுதியில் இருந்த தாசபிரகாசா. ஆனால் இரு இடங்களிலும் விலை மிக அதிகம்.”

இதில் ஒரு வாய்ப்பு இருப்பதை அவர் உணர்ந்தார். தெருமுனையில் கிடைக்கும் உணவின் விலையில் வுட்லேண்ட்ஸ் இட்லி தோசையை வழங்க முடிவு செய்தார்.  

https://www.theweekendleader.com/admin/upload/27-05-17-09may27-17-banandosa.jpg

தரமான தோசையை மலிவான விலையில் பானன் கொடுத்தார்.



அவரிடம் இருந்த 5000 ரூபாய் சேமிப்பைப் போட்டு டெல்லி டிபன்ஸ் காலனியில் 4 டிசம்பர் 1986-ல் அவர் தன் முதல் உணவகத்தைத் திறந்தார். 40 பேர் அமரக்கூடிய அந்த உணவகத்துக்கு சாகர் என்று பெயரிட்டு இட்லி, தோசை, சாம்பார் போன்ற தென்னிந்திய உணவுகளை வழங்கினார்.

முதல்நாள் விற்பனை ரூ 408. வாடகை ஒரு வாரத்துக்கு ரூ 3,250. ஆகவே அவர் ஆரம்பத்தில் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றாலும் தரத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தார்

காலை முதல் நள்ளிரவு வரை கடும் உழைப்பு. சாகரில் விற்பனை அதிகரித்தது. “தரமான உணவு, கட்டுப்படியாகும் விலை, நல்ல சேவை ஆகியவை இதற்கு உதவின என்று நினைக்கிறேன்,” என்கிறார் அவர்.

விரைவில் கடைக்கு மேலே இருந்த இடத்தையும் வாடகைக்குப் பெறவேண்டி வந்தது. அவ்வளவு கூட்டம்!  ஆனால் அந்த இடமும் போதவில்லை! நீண்ட வரிசை சாப்பிடக் காத்திருந்தது.

நான்கு ஆண்டுகள் கழித்து 1991-ல் பானன் தான் முன்னர் போட்டியிட்ட வுட்லேண்ட்ஸ் என்ற உணவகத்தை வாங்கினார்.  டிபென்ஸ் காலனியில் அவரது உழைப்புக்கு பலன் இதுவாகும்!

”உடுப்பி போன்ற சின்ன நகரில் இருந்து வந்த எனக்கு இது பெரிய சாதனை. டிபென்ஸ் காலனி போல் அல்லாமல் இதற்கு நல்ல ஆடம்பரமான தோற்றம் அளிக்கத் தீர்மானித்தேன்.

https://www.theweekendleader.com/admin/upload/27-05-17-08may27-17-bananrest.JPG

பானனின் ஓர் உணவகத் தோற்றம்


“நான் மேசை நாற்காலிகளுக்காக ரூ 50,000 செலவழித்தேன். விலையை 20 சதவீதம் அதிகரித்து, இந்த உணவகத்துக்கு சாகர் ரத்னா என்று பெயர் சூட்டினேன்,” பெருமையுடன் கூறுகிறார் பானன்.

சாகர் ரத்னா வேகமாக வளர்ந்தது. டெல்லியில் 35 இடங்களில் அது தொடங்கப்பட்டது. சாமானியர்களும் அடல்பிஹாரி வாஜ்பாயி போன்ற பிரபலங்களும் விரும்பி உண்ணும் இடமாக இது மாறியது.

1999-ல் லூதியானாவில் உள்ள மஹாராஜா ரீஜென்சி ஹோட்டலில் முதல் ப்ரான்சைஸ் தொடங்கினார். அடுத்த 15 ஆண்டுகளில் சண்டிகார், மீரட், குர்காவோன்,  மற்றும் பல இந்திய நகரங்களில்  பிரான்சைஸ் முறையில் 36 உணவகங்கள் தொடங்கப்பட்டன. அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் உணவகங்கள் தொடங்கினர்.

சாகர் ரத்னா பெரிய பிராண்டாக வளர்ந்தது. ஆயினும் பானன் கடலோர உணவு வகைகளிலும் கவனம் செலுத்த விரும்பினார்.

“என் சொந்த ஊர் உடுப்பி கடற்கரை ஊர் அல்லவா? எனவே  தென்னிந்திய கடல் உணவை அறிமுகப்படுத்த விரும்பினேன். 2001-ல் ஸ்வாகத் என்ற கிளையை டிபென்ஸ் காலனியில் என்னுடைய முதல் உணவகத்தில் இருந்து சற்றுத் தொலைவில் தொடங்கினேன்.”

இந்த வகை உணவு அப்போது அரிதாக இருந்தது. எனவே  இந்த உணவகம் உடனே வெற்றிகரமானதாக மாறியது. வெளிநாட்டவர்களும் இந்தியர்களும் அங்கே உணவுண்ண படையெடுத்தனர்.

ஸ்வாகத் இப்போது 17 கிளைகளுடன் உள்ளது. மங்களூரு, செட்டிநாடு, மலபார் உணவுவகைகளை வழங்குகிறது. 2005-ல் மீலெ கைடு என்கிற ஆசிய உணவகங்கள் பற்றிய வழிகாட்டி நூல் ஸ்வாகத் முன்னணி கடலுணவு நிறுவனம் என்று குறிப்பிட்டது.

இப்போது பானன் வட இந்தியாவில் சாகர் ரத்னா, ஸ்வாகத் கிளைகளையும் சேர்த்து 90 உணவகங்களை நடத்துகிறார். இந்த விரிவாக்கம் அவரது வர்த்தகத்தைக் கூட்டி உள்ளது. 20-25 சதவீதம் லாபம் கிடைக்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/27-05-17-08may27-17-banancu.JPG

பெற்றோர் நினைவில்:  உடுப்பியில் கார்கலாவில் அவரது பெற்றோர் நினைவாகத் தொடங்கப்பட்ட சாகர் ரத்னா உணவகம் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்குகிறது


2000த்தில் சாகர் ரத்னாவின் வர்த்தகம் 12 கோடி. 2005-ல் அது 25 கோடியாக மாறி, இன்று சாகர் ரத்னா சங்கிலி உணவகங்கள் 200 கோடியாக மதிப்பிடப்படுகின்றன.

2011 ஆகஸ்டில்  நியூயார்க்கைச் சேர்ந்த  இந்தியா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் (இஈபா) என்ற தனியார் நிதி நிறுவனம் சாகர் ரத்னா குழுமத்தில் முதலீடு செய்தது. 180 கோடி ரூபாய் அளித்து 75 சதவீத பங்குகளைப் பெற்றுக்கொண்டது. புதிய சிஇஓ வை நியமித்தது. பானன் வசம் 22.7 சதவீத பங்குகள். அவர் இக்குழுமத்தின் தலைவராக இருந்தார். இதற்கு ஜெயராம் பானன் குழுமம் என்று புதுப்பெயர் சூட்டப்பட்டது. இந்தியா முழுக்க உணவகச் சங்கிலியை விரிவாக்க செய்யப்பட்ட நடவடிக்கை  இந்த பங்கு விற்பனை ஆகும்.

ஆனால் அக்டோபர் 2013ல் இஈபா நிறுவனத்துடன் பானனுக்கு கருத்துவேறுபாடு உருவானது. அவர் பங்குகளைத் திரும்ப வாங்க முடிவெடுத்தார்.  தன் மகன் ரோஷனுடன் இணைந்து தன் குழுமத்தை பிற உப தொழில்களிலும் விரிவாக்கம் செய்யத் தொடங்கினார்.

இக்குழுமத்துக்கு இப்போது நட்சத்திர விடுதிகள், மலிவு விடுதிகள், கேண்டீன்கள், வெதுப்பகம் ஆகியவை உள்ளன. தின்பண்டங்கள், ஊறுகாய்கள், உடனே உண்ணும் உணவுவகைகள் ஆகியவையும் தயார் செய்கிறார்கள்.

பானன் மேலும் வளர ஆர்வமாக உள்ளார். மார்வாடிகள், ஜெயினர்கள் ஆகியோரின் உணவுப் பழக்கத்தை கவனித்து ஷ்ரமன் என்ற பெயரில் சங்கிலி உணவகங்களை உருவாக்கி உள்ளார். இங்கு பூண்டு, வெங்காயம் இல்லாமல் சாப்பாடு கிடைக்கும். “சந்தைக்கு ஏற்ப தொடர்ந்து  மாறவேண்டும். நாங்களும் அப்படியே வளர்ந்துள்ளோம்,” என்கிறார் அவர்.

https://www.theweekendleader.com/admin/upload/27-05-17-08may27-17-bananrest1.JPG

பானனின் பல்வேறு தொழில்களில் 10,000 பேருக்கு மேல் வேலை கிடைக்கிறது


அவருடைய வெற்றியின் பலன்களை தர்மச் செயல்களுக்கும் பயன்படுத்துகிறார். 2010-ல் அவரது பெற்றோர் நினைவாக உடுப்பி கார்கலாவில் தொடங்கிய உணவகம் 10 ரூபாய்க்கு முழுச்சாப்பாடு தருகிறது.  கிட்டத்தட்ட அவரிடம் வேலைபார்க்கும் பத்தாயிரம் பேரும் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். “நாம் வளர உதவிய சமூகத்துக்குத் திருப்பிச் செய்யவேண்டியது அவசியம்,” என்கிறார் அவர்.

பானன் தன் விடுதிகள் உணவகங்களுக்கு வருகிறவர்களுக்கு இன்னும் தலைவணங்கி வரவேற்பு அளிக்கிறார். இன்னும் டிபென்ஸ் காலனியில் உள்ள உணவகத்துக்கு தினமும் 2000 பேர் வருகை தருவதன் காரணத்தை இதை வைத்துப் புரிந்துகொள்ளலாம்.

 அன்று வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் இன்று , ருசியின் பாதையில் பயணித்து சிகரங்களைத் தொட்டுள்ளார்!


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Food for night

    இரவுக் கடை

    கொல்கத்தாவைச் சேர்ந்த மூன்று நண்பர்கள் இணைந்து நள்ளிரவில் பசித்தவர்களுக்கு உணவு டெலிவரி செய்யும் சேவை தொடங்கினர். தொடக்கத்தில் ஒரு ஆர்டர் கூட கிடைக்கவில்லை. இப்போது மாதம்தோறும் 1800 ஆர்டர்கள் மூலமாக 8 லட்சம் வருவாய் ஈட்டுகின்றனர். ஜி.சிங் எழுதும் கட்டுரை.

  • Dustless paint! an innovative product

    ஆராய்ச்சி தந்த வெற்றி

    அதுல் அவரது வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கும் போது, தூசி பரவியதால், அவரது குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அந்தத் தருணத்தில்தான், தூசியில்லாத பெயிண்ட் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். இப்போது அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். தேவன் லாட் எழுதும் கட்டுரை.

  • How heath food turned into multi-crore rupee business

    உணவு கொடுத்த கோடிகள்

    நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்து மருந்துக் கம்பெனி ஒன்றில் மாதம் 350 ரூபாய் சம்பளத்துக்கு வேலை பார்த்தவர், இன்றைக்கு 100 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் ஆரோக்கிய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் தலைவராக உயர்ந்திருக்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை

  • Redesigning small shops

    மளிகையில் மலர்ச்சி!

    தந்தையின் மளிகைக்கடையை புதுப்பித்து விற்பனையை அதிகப்படுத்தினார்  வைபவ் என்ற இளைஞர். இதே போல் பிற மளிகைக் கடைகளையும் நவீனப்படுத்தும் தொழிலைத் தொடங்கி இரண்டு ஆண்டுகளிலேயே ஒரு கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டி உள்ளார் இவர். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • The kid who ran away from his home in Udipi is now owner of a Rs 200 crore hotel chain

    ருசியின் பாதையில் வெற்றி!

    சிறுவனாக இருக்கும்போது உடுப்பியிலிருந்து ஒருநாள் வீட்டை விட்டு மும்பை ஓடி வந்தார் ஜெயராம் பானன். இன்று  சாகர் ரத்னா ஹோட்டல்கள் நடத்தும் ஜேபி குழுமத்தின் தலைவராக 200 கோடி மதிப்பில் வர்த்தகம் செய்யுமளவுக்கு வளர்ச்சி! பிலால் ஹாண்டூ எழுதும் கட்டுரை

  • father sold fruits in bus stand, son ceo of Rs 220 crore fruit chain

    கனிந்த தொழில் கனவு!

    கோவை அருகே கிராமத்தில் இருந்து 1950களில் படிப்பைத் துறந்து விட்டு பழக்கடையில் இரண்டு சிறுவர்கள் வேலைக்குச் சேர்ந்தனர். இன்றைக்கு அவர்கள் பெரிய தொழில் அதிபர்களாக இருகின்றனர். அக்குடும்பத்தின் அடுத்த தலைமுறை இளைஞர் செந்தில் இத்தொழிலைத் தொடர்கிறார். பி.சி.வினோஜ் குமார் எழுதும் கட்டுரை