Milky Mist

Saturday, 10 January 2026

உடுப்பியிலிருந்து அன்று வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் இன்று 200 கோடி மதிப்பிலான ஹோட்டல்களுக்கு அதிபர்!

10-Jan-2026 By பிலால் ஹாண்டூ
புது டெல்லி

Posted 11 Jul 2017

ஜெயராம் பானன் உடுப்பியில் உள்ள தன் வீட்டிலிருந்து ஓடி வந்த அந்த நாளை இன்னும் நினைவில் வைத்திருக்கிறார். இன்று அவருக்கு 64 வயதாகிறது. 1960களின் நடுவில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் வட இந்தியாவின் நிகரற்ற ’தோசை கிங்‘ ஆகத் திகழ்கிறார்.

மும்பையில் ஒரு  கேண்டீனில் பாத்திரம் கழுவி 18 ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருந்த இவர், இன்று சாகர் ரத்னா உணவகங்கள் குழுமத்தைத் தொடங்கி நடத்திக்கொண்டிருக்கிறார். அவற்றின் ஆண்டு வர்த்தகம் 70 கோடி! இவரது வளர்ச்சி விண்முட்டும் வளர்ச்சி அல்லவா?

https://www.theweekendleader.com/admin/upload/27-05-17-08may27-17-bananlead1.JPG

உணவகங்கள், நட்சத்திர விடுதிகள், மலிவு விடுதிகள், தொழில்பேட்டைகளில் கேண்டீன்கள் ஆகியவற்றை ஜெயராம் பானன், தன் பெயரில் உள்ள குழுமத்தின் மூலம் நடத்துகிறார்.


பானன் ஏழு குழந்தைகளில் ஒருவராகப் பிறந்தவர். தந்தை சற்றுக் கொடூரமாக நடந்துகொள்வார் என்று பானன் நினைவுகூர்கிறார். ஓட்டுநராக இருந்தவர் தந்தை. பள்ளியில் ஒழுங்காகப் படிக்காவிட்டால் கண்ணில் மிளகாய்ப்பொடி தூவிவிடுவார்

13 வயதில் பானன் தேர்வில் தோற்றுப்போனார். அப்பாவின் பர்சில் இருந்து கொஞ்சம் பணத்தை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு ஓடினார்.

அவர் மும்பைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துகொண்டார். அழுகை முட்டியது. அவர் அழுவதைப் பார்த்த அதே ஊர்க்காரர் ஒருவர் மும்பையில் ஹிந்துஸ்தான் ஆர்கானிக் கெமிக்கல்ஸ் நிறுவன காண்டீனுக்கு அழைத்துச் சென்றார்.

அந்த நிறுவன காண்டீனில் பாத்திரம் கழுவும் வேலைதான் அவருக்குக் கிடைத்த முதல் வேலை. மாத சம்பளம் ரூ.18. அந்நாட்களில் உடுப்பியைச் சேர்ந்தவர்கள் பிழைப்புக்காக மும்பைக்குச் செல்வதுதான் வழக்கம்.

 “அவர்கள் தான் மும்பைக்கு தோசையைக் கொண்டுவந்தார்கள். மசாலா தோசை இந்தியாவின் நம்பர் 1 உணவு ஆனது,” என்கிறார் பானன். அவரது ஹோட்டல்களான சாகர் ரத்னா, ஸ்வாகத், ஷ்ரமன் போன்றவை மிகவும்  புகழ்பெற்றவையாக இருக்கின்றன.

அவர் கவனத்துடன் வேலை செய்ததால் பாத்திரம் கழுவுவதில் இருந்து சர்வராக உயர்ந்தார். பின்னர் மேலாளர் ஆனார். எட்டு ஆண்டுகளுக்கு அங்கேயே வேலை செய்து, வியாபாரத்  திறமையைப் பெருக்கிக்கொண்டார். மாதம் 200 ரூபாய் வரை சம்பாதித்தார்.

அங்கு வேலை செய்த நாட்கள் கடினமானவையாக இருந்தாலும் சொந்தத் தொழில் தொடங்கும் ஆர்வத்தை அவருக்குள் விதைத்தன.

மும்பையில் தென்னிந்திய உணவகம் ஒன்று தொடங்க அவர் யோசித்தார். ஆனால் அவை நிறைய இருந்ததால் அந்த யோசனையைக் கைவிட்டார். 1973ல் மும்பையில் இருந்து டெல்லிக்கு இடம்பெயர்ந்தார். அங்கு அவரது சகோதரர் உடுப்பி ரெஸ்டாரண்ட் ஒன்றில் மேலாளராக வேலை செய்துகொண்டிருந்தார்.  அதன் பின்னர் பானனுக்கு ப்ரேமா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது

அச்சமயம் அரசு செண்ட்ரல் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடட் நிறுவனத்தை காஸியாபாத்தில் 1974-ல் அமைத்தது. அங்கு காண்டீன் நடத்தும் உரிமத்தை பானன் பெற்றார். முதலீடு  ‘2000 ரூபாய்க்கும் குறைவு.’

https://www.theweekendleader.com/admin/upload/27-05-17-08may27-17-bananvert.JPG

சாகர் ரத்னா ஹோட்டல்கள் உட்பட பானனுக்கு வட இந்தியாவில் 90 ஹோட்டல்கள் உள்ளன



இது அவரது வாழ்வில் திருப்புமுனை. மூன்று சமையல்காரர்களை வைத்து தரமான உணவைக் கொடுத்தார். அவரது வாடிக்கையாளர்கள் சுவையான உணவுக்கு ரசிகர்கள் ஆயினர். அந்த கேண்டீன் வெற்றிகரமானதாக மாறியது.

“பெரிதாக எதாவது செய்ய அதுதான் தேவையான தூண்டுதலாக அமைந்தது,” புன்னகையுடன் பானன் கூறுகிறார்.

“அப்போதெல்லாம் உடுப்பி உணவு என்ற பெயரில் ஹல்திராமின் தோசைதான் டெல்லியில் கிடைக்கும். அது பிரபலமாகவும் எளிதில் கிடைப்பதாகவும் இருந்தது. ஆனால் அது போலியானது,” அவர் விளக்குகிறார்.

“நிஜமான சுவையுடன் கூடிய தோசை இரு இடங்களில் மட்டும் கிடைத்தது. ஒன்று லோதி ஹோட்டலில் இருக்கும் வுட்லண்ட்ஸ் உணவகம், மற்றொன்று அம்பாசடர் விடுதியில் இருந்த தாசபிரகாசா. ஆனால் இரு இடங்களிலும் விலை மிக அதிகம்.”

இதில் ஒரு வாய்ப்பு இருப்பதை அவர் உணர்ந்தார். தெருமுனையில் கிடைக்கும் உணவின் விலையில் வுட்லேண்ட்ஸ் இட்லி தோசையை வழங்க முடிவு செய்தார்.  

https://www.theweekendleader.com/admin/upload/27-05-17-09may27-17-banandosa.jpg

தரமான தோசையை மலிவான விலையில் பானன் கொடுத்தார்.



அவரிடம் இருந்த 5000 ரூபாய் சேமிப்பைப் போட்டு டெல்லி டிபன்ஸ் காலனியில் 4 டிசம்பர் 1986-ல் அவர் தன் முதல் உணவகத்தைத் திறந்தார். 40 பேர் அமரக்கூடிய அந்த உணவகத்துக்கு சாகர் என்று பெயரிட்டு இட்லி, தோசை, சாம்பார் போன்ற தென்னிந்திய உணவுகளை வழங்கினார்.

முதல்நாள் விற்பனை ரூ 408. வாடகை ஒரு வாரத்துக்கு ரூ 3,250. ஆகவே அவர் ஆரம்பத்தில் நஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டும் என்றாலும் தரத்தில் சமரசம் செய்யக்கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தார்

காலை முதல் நள்ளிரவு வரை கடும் உழைப்பு. சாகரில் விற்பனை அதிகரித்தது. “தரமான உணவு, கட்டுப்படியாகும் விலை, நல்ல சேவை ஆகியவை இதற்கு உதவின என்று நினைக்கிறேன்,” என்கிறார் அவர்.

விரைவில் கடைக்கு மேலே இருந்த இடத்தையும் வாடகைக்குப் பெறவேண்டி வந்தது. அவ்வளவு கூட்டம்!  ஆனால் அந்த இடமும் போதவில்லை! நீண்ட வரிசை சாப்பிடக் காத்திருந்தது.

நான்கு ஆண்டுகள் கழித்து 1991-ல் பானன் தான் முன்னர் போட்டியிட்ட வுட்லேண்ட்ஸ் என்ற உணவகத்தை வாங்கினார்.  டிபென்ஸ் காலனியில் அவரது உழைப்புக்கு பலன் இதுவாகும்!

”உடுப்பி போன்ற சின்ன நகரில் இருந்து வந்த எனக்கு இது பெரிய சாதனை. டிபென்ஸ் காலனி போல் அல்லாமல் இதற்கு நல்ல ஆடம்பரமான தோற்றம் அளிக்கத் தீர்மானித்தேன்.

https://www.theweekendleader.com/admin/upload/27-05-17-08may27-17-bananrest.JPG

பானனின் ஓர் உணவகத் தோற்றம்


“நான் மேசை நாற்காலிகளுக்காக ரூ 50,000 செலவழித்தேன். விலையை 20 சதவீதம் அதிகரித்து, இந்த உணவகத்துக்கு சாகர் ரத்னா என்று பெயர் சூட்டினேன்,” பெருமையுடன் கூறுகிறார் பானன்.

சாகர் ரத்னா வேகமாக வளர்ந்தது. டெல்லியில் 35 இடங்களில் அது தொடங்கப்பட்டது. சாமானியர்களும் அடல்பிஹாரி வாஜ்பாயி போன்ற பிரபலங்களும் விரும்பி உண்ணும் இடமாக இது மாறியது.

1999-ல் லூதியானாவில் உள்ள மஹாராஜா ரீஜென்சி ஹோட்டலில் முதல் ப்ரான்சைஸ் தொடங்கினார். அடுத்த 15 ஆண்டுகளில் சண்டிகார், மீரட், குர்காவோன்,  மற்றும் பல இந்திய நகரங்களில்  பிரான்சைஸ் முறையில் 36 உணவகங்கள் தொடங்கப்பட்டன. அமெரிக்கா, ஐக்கிய ராஜ்யம், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் போன்ற இடங்களிலும் உணவகங்கள் தொடங்கினர்.

சாகர் ரத்னா பெரிய பிராண்டாக வளர்ந்தது. ஆயினும் பானன் கடலோர உணவு வகைகளிலும் கவனம் செலுத்த விரும்பினார்.

“என் சொந்த ஊர் உடுப்பி கடற்கரை ஊர் அல்லவா? எனவே  தென்னிந்திய கடல் உணவை அறிமுகப்படுத்த விரும்பினேன். 2001-ல் ஸ்வாகத் என்ற கிளையை டிபென்ஸ் காலனியில் என்னுடைய முதல் உணவகத்தில் இருந்து சற்றுத் தொலைவில் தொடங்கினேன்.”

இந்த வகை உணவு அப்போது அரிதாக இருந்தது. எனவே  இந்த உணவகம் உடனே வெற்றிகரமானதாக மாறியது. வெளிநாட்டவர்களும் இந்தியர்களும் அங்கே உணவுண்ண படையெடுத்தனர்.

ஸ்வாகத் இப்போது 17 கிளைகளுடன் உள்ளது. மங்களூரு, செட்டிநாடு, மலபார் உணவுவகைகளை வழங்குகிறது. 2005-ல் மீலெ கைடு என்கிற ஆசிய உணவகங்கள் பற்றிய வழிகாட்டி நூல் ஸ்வாகத் முன்னணி கடலுணவு நிறுவனம் என்று குறிப்பிட்டது.

இப்போது பானன் வட இந்தியாவில் சாகர் ரத்னா, ஸ்வாகத் கிளைகளையும் சேர்த்து 90 உணவகங்களை நடத்துகிறார். இந்த விரிவாக்கம் அவரது வர்த்தகத்தைக் கூட்டி உள்ளது. 20-25 சதவீதம் லாபம் கிடைக்கிறது.

https://www.theweekendleader.com/admin/upload/27-05-17-08may27-17-banancu.JPG

பெற்றோர் நினைவில்:  உடுப்பியில் கார்கலாவில் அவரது பெற்றோர் நினைவாகத் தொடங்கப்பட்ட சாகர் ரத்னா உணவகம் 10 ரூபாய்க்கு சாப்பாடு வழங்குகிறது


2000த்தில் சாகர் ரத்னாவின் வர்த்தகம் 12 கோடி. 2005-ல் அது 25 கோடியாக மாறி, இன்று சாகர் ரத்னா சங்கிலி உணவகங்கள் 200 கோடியாக மதிப்பிடப்படுகின்றன.

2011 ஆகஸ்டில்  நியூயார்க்கைச் சேர்ந்த  இந்தியா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் (இஈபா) என்ற தனியார் நிதி நிறுவனம் சாகர் ரத்னா குழுமத்தில் முதலீடு செய்தது. 180 கோடி ரூபாய் அளித்து 75 சதவீத பங்குகளைப் பெற்றுக்கொண்டது. புதிய சிஇஓ வை நியமித்தது. பானன் வசம் 22.7 சதவீத பங்குகள். அவர் இக்குழுமத்தின் தலைவராக இருந்தார். இதற்கு ஜெயராம் பானன் குழுமம் என்று புதுப்பெயர் சூட்டப்பட்டது. இந்தியா முழுக்க உணவகச் சங்கிலியை விரிவாக்க செய்யப்பட்ட நடவடிக்கை  இந்த பங்கு விற்பனை ஆகும்.

ஆனால் அக்டோபர் 2013ல் இஈபா நிறுவனத்துடன் பானனுக்கு கருத்துவேறுபாடு உருவானது. அவர் பங்குகளைத் திரும்ப வாங்க முடிவெடுத்தார்.  தன் மகன் ரோஷனுடன் இணைந்து தன் குழுமத்தை பிற உப தொழில்களிலும் விரிவாக்கம் செய்யத் தொடங்கினார்.

இக்குழுமத்துக்கு இப்போது நட்சத்திர விடுதிகள், மலிவு விடுதிகள், கேண்டீன்கள், வெதுப்பகம் ஆகியவை உள்ளன. தின்பண்டங்கள், ஊறுகாய்கள், உடனே உண்ணும் உணவுவகைகள் ஆகியவையும் தயார் செய்கிறார்கள்.

பானன் மேலும் வளர ஆர்வமாக உள்ளார். மார்வாடிகள், ஜெயினர்கள் ஆகியோரின் உணவுப் பழக்கத்தை கவனித்து ஷ்ரமன் என்ற பெயரில் சங்கிலி உணவகங்களை உருவாக்கி உள்ளார். இங்கு பூண்டு, வெங்காயம் இல்லாமல் சாப்பாடு கிடைக்கும். “சந்தைக்கு ஏற்ப தொடர்ந்து  மாறவேண்டும். நாங்களும் அப்படியே வளர்ந்துள்ளோம்,” என்கிறார் அவர்.

https://www.theweekendleader.com/admin/upload/27-05-17-08may27-17-bananrest1.JPG

பானனின் பல்வேறு தொழில்களில் 10,000 பேருக்கு மேல் வேலை கிடைக்கிறது


அவருடைய வெற்றியின் பலன்களை தர்மச் செயல்களுக்கும் பயன்படுத்துகிறார். 2010-ல் அவரது பெற்றோர் நினைவாக உடுப்பி கார்கலாவில் தொடங்கிய உணவகம் 10 ரூபாய்க்கு முழுச்சாப்பாடு தருகிறது.  கிட்டத்தட்ட அவரிடம் வேலைபார்க்கும் பத்தாயிரம் பேரும் கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சம். “நாம் வளர உதவிய சமூகத்துக்குத் திருப்பிச் செய்யவேண்டியது அவசியம்,” என்கிறார் அவர்.

பானன் தன் விடுதிகள் உணவகங்களுக்கு வருகிறவர்களுக்கு இன்னும் தலைவணங்கி வரவேற்பு அளிக்கிறார். இன்னும் டிபென்ஸ் காலனியில் உள்ள உணவகத்துக்கு தினமும் 2000 பேர் வருகை தருவதன் காரணத்தை இதை வைத்துப் புரிந்துகொள்ளலாம்.

 அன்று வீட்டை விட்டு ஓடிவந்த சிறுவன் இன்று , ருசியின் பாதையில் பயணித்து சிகரங்களைத் தொட்டுள்ளார்!


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • Story of believing in your dreams

    ஒரு கிராமம்; ஒரு கனவு; ஒரு வெற்றி!

    அபாரமான தன்னம்பிக்கையுடன், 50 ச.அடி ஸ்டோர் ரூம் இடத்தில் அலுவலகத்தைத் தொடங்கினார் சுமன். இப்போது இந்தியாவில் மட்டுமின்றி, ரஷ்யாவிலும் தமது அலுவலகத்தைத் தொடங்கி உயர்ந்துள்ளார். குருவிந்தர் சிங் எழுதும் கட்டுரை

  • skin care from home

    தோல்விகளுக்குப் பின் வெற்றி

    கோவையை சேர்ந்த பிரிதேஷ் ஆஷர், மேகா ஆஷர் தம்பதி வெறும் 5000 ரூபாய் முதலீட்டில் தோல் பராமரிப்பு பொருட்களை தயாரிக்கத் தொடங்கினர்.  இப்போது அதை ரூ.25 கோடி ஆண்டு வருவாய் தரும் நிறுவனமாக உயர்த்தி உள்ளனர். இதற்கு முன்பு சில தொழில்களை செய்து நஷ்டத்தைச் சந்தித்தாலும் விடாமுயற்சியால் வெற்றியைப் பெற்றிருக்கின்றனர். சோஃபியா டேனிஷ்  கான் எழுதும் கட்டுரை

  • The success story of sailor who became an entrepreneur

    வெற்றிமேல் மிதப்பவர்

    உலகெல்லாம் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசையுடன் கப்பலில் வேலைக்குச் சேர்ந்தவர் பீஹாரில் முசாபர்பூரைச் சேர்ந்த புர்னேந்து சேகர். இன்று மும்பையில் சுமார் 100 கோடி வரை வர்த்தகம் செய்யும் தொழிலதிபராக உயர்ந்துள்ளார். தேவன் லாட் எழுதும் வெற்றிக்கதை

  • Success story of a pen manufacturer in Kolkata who started from scratch

    பேனாவில் கொட்டிய கோடிகள்

    350 கோடி ரூபாய் பேனா நிறுவனம் ஒன்றின் தலைவர் சுராஜ்மல் ஜலான், ராஜஸ்தானைச் சேர்ந்தவர். கொல்கத்தாவுக்கு வெறுங்கையுடன் மூன்றாம் வகுப்பு ரயில் பெட்டியில் வந்த இவர், இன்று மிகப்பெரிய தொழில் நிறுவனத்தைக் கட்டி ஆளுகிறார். ஜி. சிங் எழுதும் கட்டுரை

  • Event organiser

    சவாலே சமாளி!

    கல்லூரியில் நண்பர்கள் இல்லை என்ற சவாலை சந்தித்தவர் விக்ரம் மேத்தா. இப்போது நிகழ்வுகளை  மேலாண்மை செய்யும்  நிறுவனம் நடத்தி வருகிறார். திருமண விழாக்களை ஒருங்கிணைப்பதில் பல சவால்களை சந்தித்து வெற்றிகரமான முன்னேறி வருகிறார். சோபியா டேனிஷ் கான் எழுதும் கட்டுரை.

  • How the son of a government school teacher became a great scientist

    ஒரு விஞ்ஞானியின் கதை

    குறைந்த செலவில் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் விண்கலன்கள் அனுப்பியதற்காகப் பாராட்டப்படுகிறவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை. சின்னவயதில் அண்ணாதுரை ஏழ்மையைத் தன் சிக்கனத்தைக் கடைப்பிடிக்கும் திறனால் வென்றது பற்றி எழுதுகிறார் பி சி வினோஜ் குமார்