Milky Mist

Tuesday, 23 April 2024

4 பேருடன் தொடங்கியவர் இப்போது 400 பேருக்கு சம்பளம் தருகிறார்!

23-Apr-2024 By குருவிந்தர் சிங்
கொல்கத்தா

Posted 25 Aug 2018

மேற்குவங்க மாநிலத்தின் சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தவரான சுமன் ஹௌலதார், எப்போதுமே பெரிதிலும் பெரிதை விரும்புபவர். தமது கனவுகளின் மீது நம்பிக்கை கொண்டவர். சராசரியான பள்ளிப்படிப்பு மற்றும் நடுத்தர குடும்பப் பின்னணியைக் கொண்ட இந்த 37 வயது இளைஞர், ‘தனது இலக்கு எதுவென்று அறிந்த ஒருவருக்கு, வேறு ஒன்றும்  வழியில் குறுக்கே வராது’ என்பதை நிரூபித்திருக்கிறார்.

இத்தகைய சுயநம்பிக்கையைக் கொண்டிருப்பதைத் தவிர சுமனிடம் வேறு ஒன்றும் இல்லை. அந்த சுயநம்பிக்கையை தம்முள் பாதுகாத்து வைத்ததால், அவர் வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்.

https://www.theweekendleader.com/admin/upload/17-08-18-03foiwe2.JPG

சுமன் ஹௌலதார் ஃபோய்வீ (Foiwe) நிறுவனத்தை 50 ச.அடி இடத்தில், நாலுபேருடன் பெங்களூருவில் ஆரம்பித்தார். இன்றைக்கு அவருடைய கொல்கத்தா மற்றும் ரஷ்யாவில் உள்ள அலுவலகங்களில் 400 பேர் பணியாற்றுகின்றனர் (படங்கள்: சிறப்பு ஏற்பாடு)


சுமன், தம்முடைய ஐடி சேவை மற்றும் மேலாண்மை நிறுவனமான ஃபோய்வீ (Fusion of Intelligence with Excellence ) இன்ஃபோ குளோபல் சொல்யூசன்ஸ் எல்எல்பி-யை பெங்களூருவில் 50 ச.அடி இடத்தில், மூன்று பழைய கம்ப்யூட்டர்கள், ஒரு ரவுட்டர் (router), ஒரு செல்போன், சில மரசாமான்களுடன் 2010-ம் ஆண்டு தொடங்கினார். தம்முடைய சேமிப்பில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை இதில் முதலீடு செய்தார்.  ஒரு சிறிய ஸ்டோர் ரூமில் நான்கு பேருடன் நிறுவனத்தைத் தொடங்கினார். “பெரிய அலுவலக இடம் பார்க்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை. எனவே, நான் ஒரு ஸ்டோர் ரூம் இடத்தை வாடகைக்கு எடுத்தேன். ஏனெனில் அந்த இடத்தை யாரும் வாடகைக்கு எடுக்க முன் வரவில்லை,” என்று சிரித்தபடி நம்மிடம் சொல்கிறார்.

இப்போது, ஃபோய்வீ நிறுவனம் பெங்களூருவுக்கு வெளியேயும் பரந்து விரிந்துள்ளது. அதன் அலுவலகம் கொல்கத்தாவிலும், அதே போல  ரஷ்யாவிலும் இருக்கிறது.  உலகம் முழுவதும் 400 பேர் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்தின் 2017-18ம் ஆண்டுக்கான ஆண்டு வருவாய் 18 கோடி ரூபாய்.

ஐடி சேவைகள் மேலாண்மை, உள்ளடக்க கட்டுப்பாடு (content moderation), வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை ஃபோய்வீ வழங்கி வருகிறது. “பிரபல பிராண்ட்களின் இணையதளங்களில் வாடிக்கையாளர்களால் பதிவு செய்யப்படும் கட்டுரைகள், படங்கள், வீடியோக்கள், மதிப்பீடுகள், பின்னூட்டங்கள் ஆகியவற்றின் உள்ளடக்கங்களை 24 மணி நேரமும்  கண்காணித்து மதிப்பீடு செய்கிறோம்,”என்கிறார் சுமன். 

“இப்படி வாடிக்கையாளர்கள் பதிவேற்றும் விஷயங்களை  திறன்பட நிர்வகிக்கும்போது,  சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பொருட்கள் மீது நம்பகத்தன்மை இருக்கும். உள்ளடக்கங்களை மதிப்பீடு செய்ய  எங்களுடைய நபர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகின்றனர். இதனால், ஒரு பிராண்ட்டின் இணையதளத்துக்கு வருபவர்கள், சரியான உள்ளடக்கத்தைப் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.”

சுமன், 2010-ம் ஆண்டில் நடந்ததை நினைத்துப் பார்க்கிறார். அப்போது அவர் பணத்துக்காக மிகவும் கஷ்டப்பட்டார். அலுவலக வாடகையாக மாதம் 800 ரூபாயை கொடுப்பதற்கு கூட சிரமம்.

சுமனின் வாழ்க்கைப் பயணம் எப்படித் தனித்துவம் வாய்ந்தது என்ற உண்மையை நீங்கள் மதிப்பிட முடியும். சுமன் இப்போது, உலகம் முழுவதும்  உள்ள தம் அலுலகங்களுக்கு ஆண்டு தோறும் 1.5 கோடி ரூபாய் வாடகை தருகிறார்.

மேற்கு வங்கத்தில், கொல்கத்தாவில் இருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள வடக்கு 24 பாரகனா மாவட்டத்தில் உள்ள பிஸ்வந்த்பூர் கிராமத்தில் இருந்து வந்திருக்கும் இந்த இளம் தொழிலதிபர், 1981-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி பிறந்தார். சிறிய குடும்பத்தில், இரண்டு குழந்தைகளில் மூத்தவர் இவர்.

அவருடைய தந்தை ஒரு விவசாயி. அவரது தாய், குடும்பத்தலைவி. “வாழ்க்கையை சுமாராக ஓட்ட போதுமான வருமானம் இருந்தது. இருப்பினும் எங்கள் படிப்புக்காக, தந்தை சேமித்து வைத்திருந்ததைச் செலவழித்தார்,” என்கிறார் சுமன்.

https://www.theweekendleader.com/admin/upload/17-08-18-03foiwe4.jpg

பெங்களூருவில் உள்ள அலுவலகத்தில் தம்முடைய ஊழியர்களுடன் சுமன்


1998-ம் ஆண்டு பாரக்பூரில் உள்ள போலானந்தா தேசிய வித்யாலயாவில் சுமன் பள்ளிப்படிப்பை முடித்தார். பின்னர், பெங்களூரு சென்ற அவர், கேபிஎச்ஆர் ஹோட்டல் மேலாண்மை மையத்தில் ஹோட்டல் மேலாண்மையில் மூன்றாண்டு படிப்பில் சேர்ந்தார். அதே நேரத்தில் கம்ப்யூட்டர் தொடர்பான சில பயிற்சிகளும் மேற்கொண்டார்.

“பெரும் நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும், என் தந்தை என் படிப்புக்காக செலவு செய்தார். எனவே, அவருக்கு மேலும் பளுவாக இருக்க விரும்பவில்லை. ஒரு தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்று எனக்கு கனவு இருந்தாலும் கூட, பட்டப்படிப்பை முடித்த உடன், வேலையில் சேர்ந்தேன்,” என்கிறார் சுமன்.

2001-ம் ஆண்டு ஐடிசி இன்ஃபோடெக் நிறுவனத்தில் மாதம் 7500 ரூபாய் சம்பளத்தில் தொழில்நுட்ப ஆலோசகராகப் பணியில் சேர்ந்தார். ”என்னுடைய வேலைக்கு இடையே மேலும் படித்தேன்,” என்கிறார் சுமன். 2003-ம் ஆண்டு பெங்களூரு ஏஎம்சி கல்லூரியில் எம்.பி.ஏ படிப்பு முடித்தார். ராய்ப்பூர் மகாத்மா காந்தி திறந்தவெளிப்பல்கலைக்கழகத்தில் மாலை நேர வகுப்பில் சேர்ந்து எம்.சி.ஏ முடித்தார்.

2010-ம் ஆண்டு வரை ஐபிஎம் மற்றும் யுனிசிஸ் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றினார்.”2010-ம் ஆண்டு என் கனவை நிறைவேற்றும் வகையில், என்னுடைய சொந்த நிறுவனத்தைத் தொடங்கினேன்,” என்கிறார் சுமன். “நான் மட்டும் பெரிய ஆளாக வரவேண்டும் என்று நினைக்காமல்,  நான் பெற்றதை இந்த சமூகத்துக்கு திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று விரும்பினேன். எனவே, பலருக்கு வேலை வாய்ப்புக் கொடுக்க விரும்பினேன்.”

2010-ம் ஆண்டு ஜூலையில் சுமன், ஃபோய்வீ குளோபல் சொல்யூஷன் எல்.எல்.பி என்ற பெயரில் தமது நிறுவனத்தைப் பதிவு செய்தார். ஒரு சிறிய ஸ்டோர் ரூமில் இருந்து அவரது முதல் அலுவலகம் செயல்படத் தொடங்கியது. தொடக்க காலங்களில், உள்ளடக்க கட்டுப்பாட்டு மதிப்பீடுக்கு அவ்வளவாக வரவேற்பு இல்லை. அதன் தேவையை பலரும் புரிந்து கொள்ளவில்லை. சில காலம் சென்ற பின், சுமனின் நிறுவனம் நன்றாக செயல்படத் தொடங்கியது.

https://www.theweekendleader.com/admin/upload/17-08-18-03foiwe1.jpg

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு தம்முடைய தொழிலை விரிவாக்கம் செய்வது என சுமன் திட்டமிட்டுள்ளார்


“என்னுடைய ஊழியர்களுக்கு சம்பளம் தருவதற்கும், வாடகை உள்ளிட்ட செலவுகளைச் செய்வதற்கும் பணத்தேவைகளுக்காக ஒரு காலத்தில் என்னுடைய குடும்பத்தின் நகைகளை விற்றேன். ஒரு பாறை போல என் குடும்பம் என்னைத்தாங்கி நின்றது என்பதுதான் எனக்கு கிடைத்த ஒரே ஆறுதல்,” என்று நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்.

சில தடங்கல்கள் இருந்தபோதிலும், முதல் நிதி ஆண்டில் 2.9 லட்சம் ரூபாய் ஆண்டு வருவாய் கிடைத்தது. வாடிக்கையாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் அவரது தொழில் வளரத் தொடங்கியது.

“நாங்கள்  100 சதவிகிதம் அளவுக்கு எங்களின் வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொண்டிருக்கிறோம். எங்களின் 85 சதவிகித வர்த்தகம் என்பது வாடிக்கையாளர்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் கிடைக்கிறது. இப்போது, நாங்கள் முக்கியமான உள்ளடக்க மேலாண்மை நிறுவனமாக இருக்கிறோம். ஐடி சேவை மேலாண்மை, உள்ளடக்க மதிப்பீடு, வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றை கையாளும் வகையில் உயர்ந்திருக்கிறோம்,” என்று பகிர்ந்து கொள்கிறார் சுமன். இப்போது தமது தொழிலை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளார். 

சுமனின் வியத்தகு தொழில்முனைவுப் பயணம் நிரூபித்திருப்பது இதுதான்; எங்கிருந்து நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. எங்கே நீங்கள் போகப்போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். 123


 
 
 
 
 

அதிகம் படித்தவை

  • The first woman entrepreneur from Nalli family builds family business

    பட்டு சாம்ராஜ்ய இளவரசி!

    நல்லி குடும்பத்தில் இருந்து வந்த இளைய தலைமுறையின் பிரதிநிதி லாவண்யா. ஹார்வார்டில் எம்பிஏ படித்த இவர் உருவாக்கிய நல்லி நெக்ஸ்ட் என்கிற கடைகளின் வெற்றிக்கதையை எழுதுகிறார் உஷா பிரசாத்

  • overseas educator

    ஆந்திர சிவாஜி!

    தொழில் தொடங்கும் ஆசையில் அதிக சம்பளம் தரும் அமெரிக்க வேலையை விட்டுவிட்டு ஆந்திராவில் தொழில் தொடங்கினார் அரவிந்த் அரசவில்லி என்னும் இளைஞர். ஒன்பது ஆண்டுகள் ஆனநிலையில் 30 கோடி ரூபாய் வர்த்தகம் செய்யும் நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார்.  சோபியா டேனிஷ்கான் எழுதும் கட்டுரை

  • The kid who ran away from his home in Udipi is now owner of a Rs 200 crore hotel chain

    ருசியின் பாதையில் வெற்றி!

    சிறுவனாக இருக்கும்போது உடுப்பியிலிருந்து ஒருநாள் வீட்டை விட்டு மும்பை ஓடி வந்தார் ஜெயராம் பானன். இன்று  சாகர் ரத்னா ஹோட்டல்கள் நடத்தும் ஜேபி குழுமத்தின் தலைவராக 200 கோடி மதிப்பில் வர்த்தகம் செய்யுமளவுக்கு வளர்ச்சி! பிலால் ஹாண்டூ எழுதும் கட்டுரை

  • Fabric of success

    சேலையில் வீடு கட்டுபவர்!

    ராஜஸ்தான் மாநிலத்தின் பாரம்பர்யமிக்க துணி வகையை சர்வதேச சந்தை வரை எடுத்துச்சென்று பெருமிதம் சேர்த்ததுடன், தமது வணிகத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார் அஞ்சலி அகர்வால். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர் பொறியியல் பட்டம் முடித்த பின்னர் ஒரு சில இடங்களில்  வேலை பார்த்தபின், சொந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்துகிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.

  • A small-town coffee shop is India's fastest growing coffee chain

    காபி தரும் உற்சாகம்

    வடோதராவில் இரண்டு நண்பர்கள் 12 லட்சம் முதலீடு செய்து 2008-ல் காபி ஷாப் தொடங்கினர். இப்போது அவர்களுடைய காபிஷாப் நிறுவனம் இந்தியாவில் மிகவும் வேகமாக வளரும் நிறுவனம். 8.3 கோடி ரூபாய் ஆண்டுக்கு விற்பனை செய்கிறார்கள் என்கிறார் கவிதா கனன் சந்திரா

  • Tutoring online

    தனி ஒருவன்

    இருபத்து மூன்று வயதாகும் அஸ்ஸாம் இளைஞர் ராஜன் நாத், பத்து மாதத்தில் 35 லட்சம் வருவாய் ஈட்டி கலக்குகிறார். இவர் போட்டித் தேர்வு எழுதுவோருக்கு உதவ இ-போஸ்டல் நெட்ஒர்க் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தனி ஆளாக தொடங்கி வெற்றி பெற்றிருக்கிறார். உஷா பிரசாத் எழுதும் கட்டுரை.